திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Saturday, February 28, 2009

” மனிதமே உன்னைத்தேடி”

உன்னைத் தேடி உன்னைத் தேடிக் களைத்து விட்ட மனிதன் நான் பூவுலகில் எங்கும் உன்னைக் காணவில்லை, எங்கு சென்று மறைந்திட்டாய் ,கண்ணில் படும் உயிர்க்கெல்லாம் கருணையோடு கை கொடுத்து, அன்பு பாசம் நேசம் காட்டி அணைத்திட்ட கருணை நிறை தெய்வங்களே எங்கு போனீர் எங்கு போனீர்,காணவில்லை உம்மையும் உம்மைத் தேடி உம்மைத் தேடி நானும் இங்கே களைத்துவிட்டேன்

கண்ணைக் கட்டிக் காட்டில் இட்டார், கண்ணிருந்தும் குருடனாய் உண்மை தேடி அலைகின்றோம், சித்தம் தடுமாறியே சித்தரென்று பெயரெடுத்து, தெளிந்த பின்னும் தேடித்தேடி பித்தராய் உருவெடுத்து தேடுகின்றோம் மனிதமே

பாதி மனிதர் தம் மனதின் மீதி மனிதம் மறந்து போய் பீதியினால் தமை மறைத்து நடைப்பிணமாய் வாழுகின்றார், சேதி சொல்லும் தினசரியும், தேடித்தேடி பரபரப்பாய் தீச் செய்தி தமை மட்டும் வழங்குகின்ற காணொளியும் ,அவலமான செய்திகளை அளித்திங்கே வாழுதே, நல்ல சேதிகளே இல்லையென்று எண்ணித் தரம் தாழுதே,மனிதம் இங்கே வீழுதே

குணத்தையெல்லாம் விட்டுவிட்டு பணத்தின் பின்னால் ஓடுதே, பிணத்தின் நெற்றிக் காசைக்கூட எடுக்கத் தானே ஆடுதே, மனித உயிர் மதிப்பின்றி தீக்கிரையாய் ஆகுதே, சட்டம் கூட திட்டம் தீட்டி தீவினையை ஏற்றுதே, நீதி இங்கே தீயுதே ,தீவிரமாய் பல வாதம் பதுங்கி பதுங்கிப் பாயுதே மனித நேயம் தேயுதே

காவல் செய்யும் காவலும், ஏவல் செய்யும் கனவானின் கைத்தடியாய் வாழுதே, நீதி செய்யும் நேர்மையும் தலை குனிந்தே நோகுதே, அழிவுப் பாதை நோக்கியே நாடும் இன்று போகுதே, இளம் வயதுக் குழந்தைகளை இரக்கமின்றி கற்பழித்து, இணைந்து வாழும் துணையினையும் அரக்கர் போலக் கொல்லுதே, அன்னை தந்தை இருவரையும் அடித்து ஓட்டி மகிழ்ந்து விட்டு, தம் மக்கள் மட்டும் தம்மை தாங்கவேண்டுமென்னுதே,

மனிதம் எங்கே மனிதம் எங்கே நானும் தேடித் தேடியே

இளைத்து விட்டேன் களைத்துவிட்டேன் காணவில்லை மனிதமே,,முன்பிருந்த மனிதம் இன்று எங்கே போய் ஒளிந்தது? இருட்டில் வாழ்ந்த நாளிலும், மனிதம் ஒளிர்ந்த நாடிது, ஒளி பாய்ச்சி இரவையும் பகலாக்கி தேடித் தேடிப் பார்த்துவிட்டேன், காணவில்லை மனிதமே , புனிதர் எல்லாம் எங்கோ சென்று பதுங்கிவிட்டார் பயத்திலே ,இனி இங்கே வேலையில்லை என்று தாமும் நினைத்திட்டே மாயமாய் மறைந்திட்டார் காணவில்லை ஜகத்திலே

இனி பொறுக்க வழியிலை என்று பொங்கி நானும் எழுந்திட்டேன், தேடித் தேடி அலைந்திட்டேன், தேக்கி வைத்த மனிதமது எங்கேனும் கண்ணில் பட்டால் மனிதர்களே, மனிதர்களே சேதி ஒன்று கூறுங்கள் நானும் அங்கு வருகிறேன் மீண்டுமதை பெற்றெடுத்து சேர்த்தளிப்போம் உலகுக்கே



அன்புடன்

தமிழ்த்தேனீ

ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 10

உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் ,எல்லா மதத்தவருக்கும், எல்லா ஜாதியினருக்கும், எல்லா நாட்டினர்க்கும், பொதுவாக மானிடராய்ப் பிறந்த அத்தனை பேருக்கும் பொதுவாக ஏற்படுத்தப்பட்ட ஆன்மீகம் சிலபேருக்கு மட்டுமே சொந்தமான சொத்துபோல் ஆகும் போதுதான்அங்கு ப்ரச்சனை முளைக்கிறது
தெய்வம் ,இறைவன், ஸ்வாமி,அல்லா,யேசு கிருஷ்ணன்,ராமன் ,வினாயகன்,சிவன், சக்தி,என்று எப்படி அழைத்தாலும் எல்லாம் ஒருவனே ஒன்றே குலம் அது மனித குலம்,ஒருவனே தேவன் அவன் பொதுவானவன், எப்பெயர் சொல்லி அழைத்தாலென்ன
என் தாயை நான் அம்மா என அழைப்பேன், என் குழந்தைகள் பாட்டி என்று அழைக்கிறார்கள்என் குழந்தைகளின் குழந்தைகள் கொள்ளுப் பாட்டி என்று அழைக்கிறார்கள்சில குழந்தைகள் பெரியம்மா என்று அழைக்கிறார்கள்,சில குழந்தைகள் குழந்தைகள் அத்தை என்று அழைக்கிறார்கள், யார் எப்படி அழைத்தாலென்ன,என் அம்மா தானேஅதுபோலத்தான் யார் வேண்டுமானாலும் அவரவர் இஷ்டம் போல் அழையுங்கள்ஆனால் இருப்பது ஒரே தெய்வம்,அது இறைவன் நமக்கும் மேல் பெரியவன்,நம்மைக் காப்பவன்அவ்வளவுதான் ,இந்த உண்மை புரியத்தான்,ஆன்மீகம் என்று ஒன்றை பெரியவ்ர்கள் ஏற்படுத்தினார்கள்
அந்த ஆன்மீகத்தின் நோக்கமே,பிரிவினை இல்லாது மனிதன் மனிதத் தன்மையோடு வாழவேண்டும் என்பதே,நாம் அடிப்படையான இந்த நோக்கத்தையே மறந்து,நமக்குள் பல பிரிவுகளை நாமே ஏற்படுத்திக் கொண்டு,பிரிந்து,பிரிந்து நம்முடைய இளைய தலைமுறைகளுக்கும் அந்தப் பிரிவை சொத்தாக எழுதிவைத்து வருங்கால மக்களை,மக்கள் என்னும் நிலையிலிருந்து மாக்கள்என்னும் நிலைமைக்கு தள்ளிக் கொண்டிருக்கிறோம்,(மாக்கள் என்றால் மிருகங்கள் என்று பொருள் )
மக்களை மாக்கள் நிலைக்கு தள்ளும்,பிரிவினையை அரசியல் வாதிகள் வேண்டுமானால்அவர்களின் சுய லாபத்துக்கு உபயோகப் படுத்திகொள்ளட்டும்,ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்என்று ஒரு பழ மொழி இருக்கிறது,ஆதலால் நாம் அனைவரும் பிரிந்திருந்தால்தான்அவர்களுக்கு வசதி,ஆனால் நாம் இதை உணர்ந்து ,ஜாதி,மதம் ,இனம் ,மொழி ,கலாச்சாரம் கொள்கைகள், வழிபாடுகள், அத்தனையும் மாறுபட்டு இருந்தாலும் அவரவர் வழியை அவரவர் பின்பற்றிக் கொண்டு முடிந்தால் எல்லா மனிதருக்கும் உதவிக் கொண்டு,மேற்கூறிய அத்தனை பேதங்களையும் மறந்து,மனதால் ஒன்றுபட்டால்மனிதம் பிழைக்கும், எங்கு மனிதருக்கு அநீதி இழைக்கப் படுகிறதோ,அங்கு எந்த வித பேதமும் இல்லாமல் அத்தனை மதத்தவரும் ஒன்று கூடி அநீதியை அழிக்க இணைந்தால்,அங்கே மனிதம் மலரும் , விளங்க முடியாக் கடவுளைக் கூட விளங்கிக் கொள்ளமுடியும்,கடவுள் மதத்திலில்லை,ஜாதியிலில்லை,இனத்திலில்லை,மொழியிலில்லை நிறத்திலில்லை,மணத்திலில்லை, குணத்தில் இருக்கிறான் ஆமாம்,மனிதம் தான் கடவுள்கடவுள் என்றாலே எல்லாவிதமான வேறுபாடுகளையும்,கடந்தவன் என்று பொருள்கட+உள் உன்னிலிருக்கும் கடவுளை உள்ளே சென்று,பார்க்க ,உன் ஆன்மாவைப் பார்க்க எல்லா மனிதருக்கும் உட்ப்ரயாணம் தேவை, உட்ப்ரயாணம் என்றால் ஆத்ம ஞானம்,ஆத்மயோகம்அன்பு ,கருணை ,இரக்கம் சக உயிர்களை மதித்தல் மனிதனை மனிதனாக மதித்தல்மனிதனை மனிதனாகவே நேசித்தல்,மக்களை மாக்களாக்காமல் மக்களாகவே இயல்பாக மனிதனாகவே நடத்துதல் மொத்தத்தில் மனிதம் என்பதுதான் கடவுள்,இறைவன்அதுதான் ஆன்மீகம்!

ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 9

ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது
அதைத் தனியே விட்டுவிட்டு வேடிக்கை பாருங்கள்
சிறிது நேரம் விளையாடும், தன்னைச் சுற்றி யாருமே
இல்லை என்று உணரும் வினாடியில் அழத் துவங்கும்
அந்த நிலையிலே தான் எல்லா வளர்ந்த மனிதர்களும்
வளர்ந்தாலும் குழந்தைதான்,
அணைக்கும் கை இருக்கிறது ,நம்க்கு ஆபத்து வரும்போது ஆதரவாக நம்மைக் கையிலெடுத்து
ஆதரவு தர ஒரு கை எப்போதும் நம் அருகில் இருக்கிறது என்கிற நம்பிக்கை இருக்கும் வரைதான்
நாம் மனிதராக இருப்போம்,எப்போது அந்த நம்பிக்கை
நம்மை விட்டுப் போகிறதோ அப்போதே நாம் சக்தி இல்லாதவர்களாக உணர்வோம்
அதனால்தான் ஆன்மீகம் என்று ஒன்றை ஏற்படுத்தி
நம்மை காக்க எப்போதும் ஒருவர் இருக்கிறார்
என்று நமக்கு ஒரு உணர்வை பெரியவர்கள் ஏற்படுத்தினர்,

இறைவன் இருக்கிறானா ,இல்லையா என்பது
நமக்கு தேவையில்லாத சிந்தனை
இருக்கிறான் என்று எண்ணும்போது நமக்குக் கிடைக்கும் நிம்மதி அதுதான் என்றும் தேவையான ஒன்று
அந்த நிம்மதி நமக்குக் கிடைக்கவேண்டுமானால்
இறைவன் என்று ஒருவன் உண்டு என்று நாம் நம்பித்தானாகவேண்டும்
எல்லாமே மனிதனின் சுயநலத்துக்காகத்தான்
மனிதனின் உடலில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு,
கசப்பு ,அழுக்கு, தண்ணீ ர், காற்று , மண்,
எல்லாம் இருக்கிறது ஆனால் எந்த அளவு
இருக்கவேண்டுமோ அந்த அளவு இருக்கிறது
அந்த அளவு கூடினாலும், குறைந்தாலும்
உடனே வைத்தியர் அதை சமனப் படுத்த
மருந்து தருகிறார்
அது போல நம்முடைய சுயநலத்துக்காக
நாம் ஏற்படுத்திய ஆன்மீகம்
ஒரு பற்றுக் கோல் போல நமக்குப் பயன் படுகிறது
ஆனால் அங்கு சுயநலம் என்னும் பற்றுக் கோல்
சற்றே பருத்து ,சுயநலம் அதிகமாகும் போது
பொதுநலம் மறந்து போகிறது


ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 8

ஆன்மீகம் என்பது என்ன….?
மனிதன் எப்போது தன்னை மீறிய சக்தி
ஒன்று இருக்கிறது,அது நம்மை எல்லா ஆபத்திலிருந்தும் காப்பாற்றும் என்று
நம்பத் தொடங்கின வினாடியிலிருந்து
ஆன்மீகம் தோன்றி வளர ஆரம்பித்தது
என்றும் சொல்லலாம்
அல்லது மனிதன் ஏற்கெனெவே இருக்கும்
ஆன்மீகத்தை உணரத் தலைப்பட்டான்
என்றும் கொள்ளலாம்


இந்தப் ப்ரபஞ்சத்தில் பிறந்த அத்தனை உயிர்களும் தங்களைக் காப்பாற்ற தங்களை மீறிய சக்தி ஒன்ரு இருக்கிறதாக நம்பத் தொடங்கின
அதனால்தான் எல்லா உயிர்களும் ஓரளவு
தன்னம்பிக்கையோடு வாழத் தலைப்பட்டன
இந்த இறை நம்பிக்கைதான் இன்று வரை நம் எல்லோறையும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது
ஆன்மீகம் என்று ஒரு வழியினால்தான்
மனிதன் ஓரளவு தன்னம்பிக்கையோடு வாழ்கிறான்

நமக்கு மேல் நம்மைக் காப்பாற்ற ஒருவருமே இல்லை
நம்மை நாமேதான் காப்பாறிக் கொள்ளவேண்டும்
என்று நாத்தீக வாதிகள் சொல்கிறார்கள்
அப்படிப்பட்ட நாதீக வாதிகளுக்கு
“ உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு “
என்னும் வள்ளுவன் வாக்கிற்கேற்றார்போல்
இடுக்கண் வரும்போது அதைக் களைய
ஒரு நண்பனாவது வேண்டும் ,அப்போதுதான்
ஏதோ ஒரு நண்பனாவது இருக்கிறான் நம்மைக் காப்பாற்ற என்ரு வாழ்க்கையின் மேல் ஒரு பிடிப்பு ஏற்படும் ,இல்லையென்றால் நாம் வாழ்வது வீண் என்று விரக்தி ஏற்பட்டுவிடும்
கடலில் தத்தளிக்கும்போது பிடித்துக் கொள்ள ஒரு
சிறு கட்டையாவது கிடைக்காவிடில் மூழ்குவது நிச்சயம்
அது போன்று நமக்கு துன்பம் வரும்போது நம்மைக் காக்க நம்மினும் மேலான சக்தி இருக்கிறது என்கிற நம்பிக்கைதான் அந்தக் கட்டை போன்றது
தற்கொலை செய்து கொள்பவர்கள் பலர் தம்மைக் காக்க
,அல்லது தங்கள் துன்பத்தைப் போக்க யாருமில்லை
என்று தீர்மானமாக எண்னுவதால்தான் உயிரை
விடத் தீர்மானிக்கிறார்கள்

அப்படி தங்களையே அனாதைகளாய் நினைத்துக் கொள்ளுதல் கூடாது என்பதுதான் ஆன்மீகத்தின் நோக்கம்
அதற்காகத்தான் பெரியவர்கள் இறைவன் இருக்கிறான்
அவன் நம்மை துன்பங்களிலிருந்து காப்பாற்றுவான்
என்கிற நம்பிக்கையை வளர்த்தார்கள்


ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 7

கணிணியைப் பற்றி அறிந்து கொண்டு கணிணியில் எப்படி செயல்பாடுகளை புகுத்த முடியும் என்று
உணர்ந்தவர்கள் தான் இவைகளை அறிய முடியும்
கணிணியைப் பற்றி ,மனிதனால் உருவாக்கப்பட்ட
கணிணியைப் பற்றி அறியவே இவ்வளவு தகுதி தேவைப் படுகிறதென்றால்
இந்தப் ப்ரபஞ்ஜத்தை படைத்த இறையைப் பற்றி அறிய
எவ்வளவு சக்தி , தகுதி ,தேவை
அத்தனையும் நாம் அடைந்து அதற்குப் பிறகு
விளங்கமுடியாக் கடவுள் ,விளக்கமுடியாக் கடவுள்
என்றெல்லாம் சொல்வோமானால் அது சரியான முறை
எங்கு சென்றடைய வேண்டுமோ அங்கு செல்லும் பாதையைக் கண்டுபிடித்து அந்தப் பாதையில் பயணம் செய்து, அப்போதும் அந்த இடத்தை அடைய முடியாவிட்டால் அப்போது சொல்லலாம்
விளங்க முடியாத ,அல்லது விளக்க முடியாத
என்றெல்லாம்
இன்னும் நாம் போகவேண்டிய இடத்தையும்
புறிந்துகொள்ளவில்லை ,அதற்குண்டான பாதையையும்
நிர்ணயிக்கவில்லை
ஆகவே முதலில் போகவேண்டிய இடத்தை நிர்ணயித்துக் கொண்டு அதற்குண்டான பாதையை
கண்டுபிடித்து அந்த வழியில் நம் ப்ரயாணத்தை
மேற்கொண்டால் எதையும் காணலாம்
கடவுளையும் காணலாம்
பாகம் 8
திரு விவேகானந்தர்(நரேந்திரன்) முதலில் திரு ராமக்ருஷ்ண பரமஹம்ஸர்
சொல்லுவதைக் கவனிக்காமல்
அவ்ர் ஏதோ செய்து கொண்டிருப்பாராம்
ஒரு நாள் ராம க்ருஷ்ணபரமஹம்சர்
நரேந்திரனை அழைத்து நான் சொல்லுவதைக்
கவனிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய்
என்று வினவ அதற்கு நரேந்திரன் தாங்கள்
இறைவனைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்
ஆனால் கண்ணால் காணமுடியாத ஒன்றை எப்படி நம்புவது என்ர்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்
என்றாராம் ,அதற்கு ராமக்ருஷ்ணபரமஹம்சர்
நான் உனக்கு இறைவனைக் காட்டுகிறேன்
என்று கூறி தன்னுடைய தயான சக்தியால்
நரேந்திரனை தன்கையால் தொட்டு அவருக்கு
இறைவனைக் காட்டும் முயற்ச்சியில் இறங்கினார்
அப்போது தேஜோமயமாக தாங்கவொண்ணா ஒளியாக
இறைவன் நரேந்திரனுக்கு காட்சி அளித்தாராம்
அந்த அற்புத ஜோதிச்வரூபனை ,அந்த ஒளியின்
விஸ்வரூபத்தை தாங்க முடியாமல் நரேந்திரன் திகைத்துப் போனாராம்

அதற்குப் பிறகு திரு ராமக்ருஷ்ணபரமஹம்ஸர்
இறைவனைப் பார்க்க உனக்குள் சக்தியை ஏற்படுத்திக் கொள் அப்போதுதான் இறைவனைப் பார்க்கமுடியும் என்னும் தத்துவத்தை போதித்தாராம்
அப்போதுதான் நரேந்திரன் விவேகானந்தராக மாறினார் என்பர்



ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 6

ஒரு மஹா சக்தியை அல்லது ஒளியை ,
உதாரணமாக சூரியனை வெறும் கண் கொண்டு பார்க்க
முடியாது ,பார்த்தால் அதன் உருவம் நம் கண்ணின் சக்திக்கு சரியாக விளங்காது, அதனால் ஒரு கருப்புக் கண்ணாடியை ஒரு சாதனமாகக் கொண்டு பார்க்கும் போது அந்தச் சூரியனின் ஒளி நம் கண்ணைக் கூசாமல் ,இதமாக இருக்கிறதல்லவா,அது போல
ஒரு மஹா சக்தியை நாம் உணரவேண்டுமென்றால்
அதன் சக்தியை நாம் தாங்கிக் கொண்டு இதமாக
இறைவனை தரிசிக்க வேண்டுமென்றால்
அதற்க்கு ஏற்ப பக்தி, த்யானம் ,போன்ற பல சாதனங்களை உபயோகித்து இறைவனை விளங்கிக் கொள்ள நாம் வகை செய்து கொள்ளவேண்டும்


வானிலே செவ்வாய்க் க்ரகம் தோன்றப் போகிறது அதைக் காண விரும்புவோர் தொலை நோக்கி கொண்டு பாருங்கள் ,
சூரியக் க்ரகணம் இன்று வானிலே தெரியும் அதை வெறும் கண் கொண்டு பார்க்காதீர்கள்,கண்ணுக்கு
பாதகம் விளையும் என்றெல்லாம்
விக்ஞானிகள் சொல்கிறார்கள்
ஏற்றுக் கொள்கிறோம் அல்லவா
அது போல வெறும் கண் கொண்டு இறைவனைப்
பார்க்க முயலாதீர்கள்,
தியானம் , யோகம் போன்ற சாதனங்களைக் கொண்டு
இறைவனைப் பாருங்கள் அப்போதுதான் இறைவனை
விளங்கிக் கொள்ள முடியும் என்று சொல்லும்போது
ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது நாமும் அவர்கள் கூறும் சாதனங்களை உபயோகித்து முயன்றுதான் பார்ப்போமே

பாகம் 6.
2. விளங்க முடியாக் கடவுளா ..?அல்லது சக மனிதனா
இந்தக் கேள்விக்கு
ஒரு பதில் உண்டு
கடவுள் விளங்க முடியாதவனல்ல
விளக்க முடியாதவனும் அல்ல
விளக்கவும் முடியும் ,விளங்கவும் முடியும்
ஆனால் நமக்கு அதற்குண்டான பொறுமையும்
ஞானமும் வேண்டும்

தமிழ் மறை நூல்களில்
“ கண்டவர் விண்டிலர் ,விண்டவர் கண்டிலர் “
என்று ஒரு கூற்று உண்டு
அதற்குப் பொருள்
மெய்ஞ்ஞானம் என்னும் வழியில் சென்ற பலர்
கடவுளக் கண்டிருக்கின்றனர்,
அதாவது அவர்கள் கடவுளை கானும் அளவுக்கு
தங்களுடைய ஆன்ம பலத்தைப் பெருக்கி
அதன் மூலமாகக் கடவுளைக் கண்டிருக்கின்றனர்
சாதாரணமாக நாம் உலகில் எப் பொருளைப்
பார்க்கவேண்டும் என்றாலும் கண் இமைகளைத்
திறக்க வேண்டும் ,அப்போதுதான் பார்க்க முடியும்
கண்களை மூடிக் கொண்டே அங்கு எதையும் என்னால்
பார்க்க முடியவில்லை என்று சொல்வது எப்படியோ
அது போலத்தான் கடவுளும்
அந்த மஹா சக்தியை நாம் பார்க்க வேண்டுமென்றால்
அதைப் பார்க்குமளவுக்கு நம் உடலை,மனதை ,நம் சக்தியைப் பெருக்கிக் கொள்ளவேண்டும்

கணிணியில் மென்பொருளைத்தாக்கும் கிருமிகள்
இருக்கிறது என்பதை நம்முடைய கணினியின்
செயல்பாட்டை வைத்து அறிய முடியும்
ஆனால் அந்த கிருமியைக் கண்ணால் பார்த்தால்தான் நம்புவேன் என்றால் இது குதர்க்க வாதம்
அதுபோல நம் கணிணியை கிருமிகளிடமிருந்து
காப்பாற்ற எதிர்ப்பு சக்தியை நாம் இந்தக் கணிணிக்குள்
செலுத்தி அதைப் போக்க முடியும்
ஆனால் கணிணிக் கிருமிகளை எதிர்க்கும்
சக்தியை நான் கண்ணால் பார்த்தால்தான் நம்புவேன் என்பதும் குதர்க்கவாதம்



ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 5

சற்றே நினைத்துப் பாருங்கள் உண்மையான,மனப்பூர்வமான வேண்டுதலுக்கு வழிபாட்டுக்கு இப்படிப்பட்ட அரிய சக்தி இருப்பதை என் வாழ்விலேகண்கூடாகக் கண்டவன் நான்
ஆகவே ஆத்ம சுத்தியான பக்திக்கும் ,ப்ரார்த்தனைக்கும் இறைவன் மனமிறங்குகிறான்,அருள் புறிகிறான் என்பது சத்தியமான உண்மை
ஆகவே நம்முடைய உண்மையான ஆத்மசுத்தியான பக்தி ,ப்ரார்த்தனை, வேண்டுதல்கள்,வழிபாடுகள் நாம் கல்லில் வடிக்கும் இறைவனுக்கும் நம்முடைய சக்தியாக உள்ளே சென்றடையும் ,மீண்டும் அதே சக்தி நமக்கு ஏற்படும் இன்னல்களை களையும் சக்தியாக உருவெடுக்கும் என்பது பரிபூரணமான உண்மை
இறைவனை நாம் நம்முடைய சாதாரண சக்தியை உபயோகப் படுத்தி பார்க்க முடியாது என்பதனால்தான் ஒரு விக்ரகமாக அவரை வடித்து அந்த வடிவத்தை இறைவனாக ஏற்று ,வழிபட ஆரம்பித்தோம் உருவ வழிபாடுகள் இப்படித்தான் தோன்றின


இதுதான் ஒரு ஆலயத்தில் ஒரு கடவுளை
ப்ரதிஷ்ட்டை செய்யும்போதும்
இதே தத்துவத்தில்தான் ஆலய நிர்மாணமும்
விக்ரகப் ப்ரதிஷ்ட்டையும் நடக்கிறது
அங்கு ஒரு இறைவனை கல்லில் வடித்து
அந்தக் கல்விக்ரகத்துக்கு சக்தி கொடுக்கும் விதமாக
பலபேர் சேர்ந்து அங்கு வந்து மந்திர உச்சாடனங்கள்
செய்து அத்தனைபேரின் சக்தியையும் ஒன்றாகத் திரட்டி
ஒரு குடத்திலே மந்திர உச்சாடனத்தின் சக்தியை
அந்தக் குடத்து நீரில் இறக்கி அந்தக் குடத்து நீரை
அந்தக் கல் விக்ரகதின் மேல் பொழிந்து அந்தக் கல் விக்ரகத்துக்கு அத்தனை பேரின் திரண்ட சக்தியை அளித்து அந்தக் கல் விக்ரகத்தை இறைவனாக
சக்தி உள்ளவனாக மாற்றி,பிறகு தினமும் அந்தக் கல் விக்ரகத்துக்கு ,மந்திர உருவேற்றி
அத்தனை பேரின் திரண்ட சக்தியாகிய அந்தக் கடவுளை
எல்லோரும் வழிபட்டு தங்கள் கோரிக்கைகளை அந்த தெய்வத்திடம் வேண்டி பெறுதல் வழக்கமாக இருக்கிறது

இதே தத்துவத்தை அடிப்படையாக வைத்துதான் மனிதன் தன்னைவிட சக்தி வாய்ந்த ஒரு சக்தியை
நம்பி தனக்கென்று ஒரு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள ஆலயங்கள் உருவாகின
இறைவனை விளங்கிக் கொள்ள நாம் நம்மை
தகுதியானவர்களாக ஆக்கிக் கொள்ளவேண்டும்
அப்போதுதான் இறைவனை விளங்கிக் கொள்ளமுடியும்


ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 4

எந்த ஒன்றும் கிடைக்காத போதுதான் அதன் அருமை தெரியும்அருகிலே இருக்கும்போது நமக்கு அருமை தெரியாது,

இங்கு என்னுடைய வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைக்
குறிப்பிட்டே ஆகவேண்டும்

எல்லா இறைவன் மேலும் எனக்கு பக்தி இருக்கிறது
ஆனாலும் என் தாயார் மேல் அளவுகடந்த,பாசம் வைத்திருந்தவன் நான் ,தந்தைமேலும் பாசம் வைத்திருந்தேன் ,என் தந்தை என்னுடைய பதினொன்றாவது வயதில் இறைவனடி சேர்ந்து விட்டார்
அதனால் அந்த பக்தியும் பாசமும் இணைந்து,என் தாயாரின் மேல் செலுத்த ஆரம்பித்தேன்,ஆகவே இப்போது எல்ல தெய்வத்தையும் விட என் தாயை நான் தெய்வமாக வணங்கிக் கொண்டிருக்கிறேன்,
அது தவிர என் பூஜை அறையில் இறைவனின் படங்களுடன் என் பெற்றோர் படங்களும் இருக்கும் ,கூடவே என்னுடைய சகோதரி ராஜாமணி அவர்களின் படமும் இருக்கும், அதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு, ராஜாமணி என்கிற என் சகோதரியை வணங்காமல் நான் எந்தச் செயலையும் செய்வதில்லை, தெய்வம் மனித உருவானது என்னும் சொல்லை மிக உண்மையாக என் வாழ்வில் சந்தித்து உணர்ந்தேன்


என்னுடைய ஏழாவது வயதில் எனக்கு நிமோனியா என்னும் காய்ச்சல் வந்தது, மருத்துவர்கள் நான் பிழைக்க மாட்டேன் என்று கை விட்டுவிட்டனர்,
அப்போது என்னுடைய மூத்த (சகோதரி)ராஜாமணி அவர்கள் என்னை தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு கண்களில் நீர் தாரை தாரையாக வழிய மனமுருகி இறைவனிடம்
“ இறைவா என்னை எடுத்துக் கொள்,என் சகோதரனைக் காப்பாற்றிக் கொடுத்துவிடு, இறைவா என்னை எடுத்துக் கொள்,என் சகோதரனைக் காப்பாற்றிக் கொடுத்துவிடு “ என்று வாய் விட்டு மனமுருகி வேண்டிக்கொண்டிருந்தாள்
என் காதில் அவள் வேண்டுதல் வார்த்தைகள் என் காதிலும் கேட்டுக்கொண்டிருந்தது, என் உடலில் அவள் கண்ணீர் விழுந்து கொண்டிருந்தது, வாழ்வின் கடைசீ நேரத்தில் இருந்த நான் அன்று தெளிவானேன், மருத்துவர்களே ஆச்சரியப் படும் அளவுக்கு என் உடல் நிலை ஒரே நாளில் தேறியது, இறைவன் என் சகோதரி ராஜாமணியின் வேண்டுகோளுக்கு இறங்கிவிட்டான் போலும், மிகச் சாதாரணமான ,ஆரோக்கியமான உடல் நலத்தோடு இருந்த என் சகோதரி ராஜாமணி திடீரென்று உடல் நலம் குன்றி அன்றே வலிப்பு கண்டு இறந்து போனாள், நான் பிழைத்தேன்,
என் சகோதரி அவள் இன்னுயிரை எனக்குக் கொடுத்துவிட்டு அவள் இறந்து போனாள்…
“ உயிரை, ஆயுளைக், கூட ஒரு உடலிலிருந்து தான் நேசிக்கும் மற்றொருவருக்கு மாற்ற முடியும் வல்லமை உண்மையான மனமொத்த வழிபாட்டுக்கு உண்டு என்று அன்று உணர்ந்தேன்
இன்று வரை என் உடலில் ஓடிக் கொண்டிருப்பது என் பிரிய சகோதரி ராஜாமணியின் உயிர்தான் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை
அதனால் என் தாய்க்கு அடுத்த படியாக எனக்கு மீண்டும் ஒரு பிறப்பைக் கொடுத்த என் பிரிய சகோதரி ராஜாமணிதான் எனக்கு இன்னொரு தாய் அதனால் அவள் படத்தையும் வணங்காமல் எந்த ஒரு வேலையையும் நான் செய்வதில்லை


ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 3.

ஏற்றுக் கொள்பவர்களின் மனோபாவத்துக்கு ஏற்றவாறு எல்லாம் மாறுகிறது என்பதற்குதான் இதை உதாரணமாக,சொன்னேன்

நாம் சிறு வயதில் ஒரு கதை கேட்டிருப்போம்
ஒரு மெலிந்த மரக் கிளையை ஒருவனிடம் கொடுத்து அதை உடைக்கச் சொன்னார் ஒருவர்,அந்த மெலிந்த மரக் கிளையை வெகு எளிதாக உடைத்தான் அவன்,பிறகு அதே போன்று பல மெலிந்த மரக் கிளைகளை ஒன்றாக கயிறால் இணைத்து கட்டி அதே மனிதனிடம் கொடுத்து உடைக்க சொன்னார், ஆனால் அவனால் இப்போது அந்த மெலிந்த மரக் கிளைகள் கொண்ட அந்த மொத்த கட்டை உடைக்க முடியவில்லை, இதனால் தான் பல சாதாரண சக்திகள் ஒன்றாக இணைந்து செயல் படும்போது அது ஒரு சக்தி வாய்ந்த பெரிய சக்தியாக மாறுகிறது என்பது அங்கு நிரூபணமாகிறது,இதே தத்துவத்தை அடிப்படையாக வைத்துதான் மனிதன் தன்னைவிட சக்தி வாய்ந்த ஒரு சக்தியை நம்பி தனக்கென்று ஒரு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள ஆலயங்கள் உருவாக்கினான் ,ஒருமித்த மனதோடு கூடிய கூட்டு வழிபாடுகளை உருவாக்கினான்

பொதுவாக ஒருமித்த மனதோடு கூடிய கூட்டு வழிபாட்டிற்கு சக்தி அதிகம் என்று நாம் எல்லோரும் உணர்ந்திருக்கிறோம்,அதனால்தான் யாருக்கு எந்தத் துன்பம் வந்தாலும், நாம் எல்லோரும் கூட்டாக வழிபாடு செய்கிறோம், ஒவ்வொரு தனி மனிதருக்குள்ளும் ஒரு சக்தி இருக்கிறது , கூட்டாக முயற்சி செய்யும்போது,அத்தனை சக்தியும் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய சக்தியாக உருவாகி அந்த வழிபாட்டை நிறைவேற்றி வைக்கிறது
பெற்றோர்கள், மனைவி ,குழந்தைகள்,அத்தனை பேரையும் ஒரு தேசத்திலே விட்டுவிட்டு பிழைப்புக்காக வேறு ஒரு தேசத்திலே போய் வேலை செய்யும்போது ,தன்னுடைய பெற்றோர், குழந்தைகள், ஆசை மனைவி, இவர்களை நேரிலே பார்க்க வசதி இல்லாதவர்கள், அவர்களின் புகைப் படங்களை தன்னிடம் வைத்துக் கொண்டு அதைப் பார்த்தாவது ஆறுதல் அடைகிறோம் நாம்,பூவுலகத்தில் நம்மோடு வாழும் உறவினர்களிடமிருந்து வெகு தூரம் விலகி இருக்கும்போதே நாம் அவர்களின் புகைப்படங்களையாவது பார்த்து ஆறுதல் அடைகிறோமே, தற்காலத்தில் விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக எப்போது நினைத்தாலும் அவர்களுடன் பேசலாம் இணையப் புகைப்படக் கருவி மூலமாக பார்த்துக்கொண்டே பேசலாம்
ஆனால் எந்தவித விஞ்ஞான உபகரணங்களும் இல்லாத காலத்திலே மக்கள் எப்படி துன்பப்பட்டிருப்பார்கள் என்று யோசித்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது


ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 2.

மேலும் அறிவார்ந்து சிந்திப்பவர்கள், விவரமறிந்துவர்கள்,எப்போதும் நல்ல சக்தி ஒன்று,கெட்ட சக்தி ஒன்று ஆக மொத்தம் இரு சக்திகள் உண்டு,கெட்ட சக்திகள் நம்மை ஆட்டிவைக்கின்றன என்று ஒப்புக்கொள்வர்
கெட்ட சக்திகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே நாம் இறைவனை (அதாவது)நல்ல சக்தியை தொழுகிறோம் என்று சொல்வார்கள்
சக மனிதர்கள் முக்கியம் என்றால், சக மனிதர்களின் உணர்வுகளும் முக்கியமானவைதானே அதனால்தான் சொல்லுகிறேன், திட்டமிட்டு ஒரு கட்டுப் பாட்டோடு செய்யும்போது எதுவுமே சிறக்கிறது
நாம் நம் மனதுக்குப் பிடித்தவற்றை செய்யலாம், தவறில்லை, அடுத்தவர்க்கு துன்பம் தராமல் இருக்க கூடிய கட்டுப்பாடு வேண்டும் அதை விட்டு விட்டு உண்மையில் எது மிக முக்கியம்? விளங்க முடியா கடவுளா..?அல்லது சக மனிதனா?
என்கிற கேள்வியே தேவை இல்லையோ என்று தோன்றுகிறது, விளங்க முடியாத பல விஷயங்களை விளங்கிக்கொண்டுதான் எல்லாம் செய்ய வேண்டுமென்றால், நாமெதையுமே செய்யமுடியாது, சக மனிதர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரவர் மரியாதையை காப்பாற்றி ஆகவேண்டும் அதுதான் ஜனநாயகம், கடவுள் மட்டுமல்ல, மனிதன் கூட விளங்கமுடியாதவன்தான், கட்டுப்பாடு என்பது எல்லாவித மனிதரையும்,அவர்களின் உணர்ச்சிகளையும் மதிப்பது என்பதுதான் மனிதம்

அவரவரை அப்பப்படியே ஏற்றுக் கொள்ளும், மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால்தான் மனிதம் வளரும்

" குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை" என்று பெரியவர்கள் சொல்வார்கள், சக மனிதர்கள் ஒரு பொதுவான மன நிலைக்குவரவேண்டும் , அனைவரும் ஒற்றுமையாக ,இயல்பாக, சகமனிதர்களிடம் அன்பாக, சகோதர மனப்பான்மையுடன் இனிமையாக பழகி வாழ்நாட்களை இனிமையாக கழிக்கவேண்டும் என்கிற என்னுடைய நியாயமான ஆவல் நிறைவேறத்தான் இதை எழுதுகிறேன்

இதில் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்,தவறுகள் இருந்தால் எனக்கு உணர்த்தலாம், நான் தவறு என்று உணர்ந்தால் திருத்திக் கொள்ளத் தயாராய் இருக்கிறேன்,
ஒரு வேண்டுகோள் என்னுடைய கருத்துக்களும், உங்களுடைய சார்ந்த கருத்துக்களும்,மாற்றுக் கருத்துக்களும் இனிமையான,இதமான சொற்களோடு வரட்டும் வரவேற்கிறேன், கூடிய வரையில் அடுத்தவர் மனம் நோகாமல், நாம் எழுத முற்படுவோம்,அதற்கும் மேலாக யாராவது மனம் புண்பட்டால், அவர்கள் என்னை மன்னிக்குமாறு இப்போதே வேண்டிக் கொள்கிறேன்
ஏனென்றால் நான் சொல்ல வருவதை அழுத்தமாக, திடமாக சொல்லுவேன் ,இந்த மடல் நம் அனைவரையும் என்னையும் உட்படச் சொல்லுகிறேன், ஏதாவது சிறிதளவாவது நல்ல கருத்துக்களைக் கற்றுக் கொள்ள உதவினால் மகிழ்வேன்,நாம் அனைவருமே பழக்க வழக்கங்களினால்,அதாவது நாம் பழக்கப் பட்ட விதத்தால் அதற்கேற்றவாறு வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அதனால் நாம் எப்போதும் சரியாகத்தான் நடந்து கொள்கிறோம் என்பதும் இல்லை,எப்போதும் தவறாக நடந்து கொள்கிறோம் என்பதும் இல்லை

என் அம்மா என்னுடைய அம்மாவின் தாயாரை அம்மா என்று அழைப்பதைக் கேட்டு எனக்கு பழக்கம்,அதனால் அதே பழக்கத்தால் என்னுடைய தாயாரின் தாயாரை பாட்டி என்று ஒரு நாளும் நான் அழைத்ததில்லை மாறாக அம்மா என்றே அழைத்திருக்கிறேன், இதை தவறு என்று சொல்பவர்களும் உண்டு, சரி என்று ஏற்றுக் கொண்டவர்களும் உண்டு


Tuesday, February 24, 2009

ஆன்மீகம்-- 1. கடவுளும் மனிதனும்

“ஆன்மீகம்”


ஆன்மீகம் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். அதற்கு எனக்குத் தூண்டுகோலாயிருந்தது ஒரு நண்பர் என்னைக் கேட்ட ஒரு கேள்விதான். அந்தக் கேள்வி, "விளங்க முடியாக் கடவுளா? அல்லது சக மனிதனா? உண்மையில் எது முக்கியம்?" என்கிற கேள்வியே. என்னை மிகவும் சிந்திக்க வைத்தது அதற்கு எனக்குத் தெரிந்த வரையில் பதில் எழுதி இருக்கிறேன்.

நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விஷயம் கடவுளைப் பற்றியதாக இருந்தாலும் சக மனிதரைப் பற்றியதாக இருந்தாலும் புரிந்து கொள்ள வேண்டும் என்று உண்மையாகச் செயல் பட்டால் நிச்சயமாகப் புரிந்து கொள்ள முடியும். புரிந்து கொள்ளக் கூடாது என்று நினைத்துவிட்டால், புரிந்தாலும் மனது ஏற்றுக் கொள்ளாது. நாம் புரிந்து கொள்வோம் வாருங்கள்.

உங்கள் எல்லோருடைய முழு மனதோடு கூடிய சம்மதத்தையும் எம்மதமாயிருந்தாலும் சரி, அனைத்து சகோதரகளும் "மனிதம்" என்னும் ஒரே கொள்கையோடு முயற்சி செய்வோம் முழு மனதோடு. கடவுள் நம்பிக்கை, மதம், கோவில், திருவிழா, தேரோட்டம் எல்லாமும் மனிதனால் உருவாக்கப்பட்டவை. மனிதனாலேயே விஸ்தரிக்கப்பட்டவை. அவற்றை மனிதன் தான் செப்பனிட வேண்டுமே தவிர, கடவுள் முக்கியமா மனிதன் முக்கியமா என்று ஆராய்வு அவசியமற்றது என்று தோன்றுகிறது.

"கண்ணுக்குத் தெரியாத கடவுளை விட புலனுக்கு தெரியும் மனிதன் முக்கியம் தான் என்றால் அந்த மனிதன் தன் வாழ்கையில் மிக முக்கியமான பங்காகக் கடவுளை வைத்திருக்கிறானே“ என்கிற பதில் நம்மை யோசிக்க வைக்கிறது. இவைகள் என்னை ஆன்மீகத்தைப் பற்றி ஓரளவு எழுதலாம் என்று எண்ண வைத்திருக்கிறது. மனிதர் எந்த மதத்தைச் சார்ந்தவனாக இருப்பினும் உலகிலே நம்மை மீறிய சக்தி உண்டு என்று ஒப்புக்கொள்வார். மேலும் விஷயமறிந்தவர்கள், எப்போதும் நல்ல சக்தி ஒன்று, கெட்ட சக்தி ஒன்று, ஆக மொத்தம் இரு சக்திகள் உண்டு இரு சக்திகளும் நம்மை ஆட்டிவைக்கின்றன, கெட்ட சக்திகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே நாம் இறைவனை (அதாவது) நல்ல சக்தியை தொழுகிறோம் என்று சொல்வார்கள்.

சக மனிதர்கள் முக்கியம் என்றால், சக மனிதர்களின் உணர்வுகளும் முக்கியமானவைதானே அதனால்தான் சொல்லுகிறேன், நீங்கள் சொல்லியபடி திட்டமிட்டு ஒரு கட்டுப்பாட்டோடு செய்யும்போது எதுவுமே சிறக்கிறது, நாம் நம் மனதுக்குப் பிடித்தவற்றைச் செய்யலாம் தவறில்லை, அடுத்தவர்க்குத் துன்பம் தராமல் இருக்கக் கூடிய கட்டுப்பாடு வேண்டும் அதை விட்டு விட்டு உண்மையில் எது மிக முக்கியம்? விளங்க முடியாக் கடவுளா? அல்லது சக மனிதனா? என்கிற கேள்வியே தேவை இல்லை. விளங்க முடியாத பல விஷயங்களை விளங்கிக் கொண்டுதான் எல்லாம் செய்ய வேண்டுமென்றால் நாமெதையுமே செய்ய முடியாது. சக மனிதர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரவர் பாரம்பரியத்தைக் காப்பாற்றி ஆக வேண்டும், அதுதான் ஆன்மீகம். கடவுள் மட்டுமல்ல, மனிதன் கூட விளங்க முடியாதவன்தான். கட்டுப்பாடு என்பது எல்லாவித மனிதரையும், அவர்களின் உணர்ச்சிகளையும் மதிப்பது என்பதுதான்.

அவரவரை அப்பப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால்தான் மனிதம் வளரும், மனிதம் காப்பாற்றப்பட்டாலே ஆன்மீகம் காப்பாற்றப்படும்.நான் பொதுவாக எங்கு சென்றாலும் அங்கிருக்கும் மனிதர்களிடத்தில் பொதுவாக கேட்பேன் ”யார் உறவுக்காரர்கள்” என்று பலர் பலவிதமாக விளக்கம் சொல்வார்கள், ஆனால் நான் கடைசியாக சொல்வேன் இப்போது இங்கிருக்கும் நாம்தான் உறவுக்காரர்கள், ஏனென்றால் இப்போது இந்தக் கணத்தில் இங்கு என்ன நடக்கிறதோ அந்த நடபுக்கேற்ப நனமையாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும் முதலில் நமக்கு உதவப் போவது இங்கிருக்கும் நம்மில் ஒருவர்தான், பிறகுதான் மற்ற உறவுக்கோ, நண்பர்களுக்கோ செய்தி அனுப்புவோம்,ஆகவே நாம் தான் உறவுக்காரர்கள் என்று

கடவுள் நம்பிக்கை,உருவ வழிபாடு,அருவ வழிபாடு, மதம், கோவில், திருவிழா,தேரோட்டம், எல்லாமே மனிதனால் உருவாக்கப்பட்டவை. மனிதனாலேயே விஸ்தரிக்கப்பட்டவை, அவற்றை மனிதன் தான் செப்பனிட வேண்டுமே தவிர, கடவுள் முக்கியமா மனிதன் முக்கியமா என்று ஆராய்வே அவசியமற்றது என்றுதான் தோன்றுகிறது,ஆனாலும் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டால் மனிதம் என்னும் ஆணிவேருக்கு சரியான விளக்கம் என்ன என்பதை அறியலாம் என்னும் முயற்சியால் இக்கட்டுரையை எழுதுகிறேன்

கண்ணுக்கு தெரியாத கடவுளை விட புலனுக்கு தெரியும் மனிதன் முக்கியம் தான்.என்றால் அந்த மனிதன் தன் வாழ்க்கையில் மிக முக்கியமான பங்காக கடவுளை வைத்திருக்கிறானே “என்கிற பதில் என்னை ஆன்மீகத்தைப் பற்றி ஓரளவு எழுதலாம் என்று எண்ண வைத்திருக்கிறது, மனிதர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும்,உலகிலே நம்மை மீறிய சக்தி உண்டு என்று ஒப்புக்கொள்வர்,



குளிக்கலாம் வாரீகளா

' ஆரோக்கியக் குளியல் '

தினமும் குளிப்பது எதற்கு என்று ஒரு குழந்தை தன்னுடைய தாயாரைப் பார்த்துக் கேட்டதாகவும், அதற்கு அந்தப் பெண்மணி எப்படிப் பதில் கூறினால் அந்தக் குழந்தைக்கு ஏற்புடையதாக இருக்கும் என்பது தெரியாமையினால் பதில் கூறத் தயங்கியதாகவும் ஒரு செய்தியை மழலைகள் தளத்தில் திரு கல்பட்டு நடராஜன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். இன்னும் பல பெரியவர்களுக்கே அந்த சந்தேகம் இருக்கிறது. அவர்களுக்கும் புரியும் வகையில் குளையலைப் பற்றி யோசிப்போமா?
குறத்தி மகன் என்னும் திரைப்படத்தில் சுருளிராஜன் என்னும் நகைச்சுவை நடிகர் குறவர் கூட்டத்தில் ஒருவராக வருவார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன, "படிக்கச் சொன்னா பரவா இல்லேப்பா குளிக்கச் சொல்றாங்கோ" என்பார். அதைக் கேட்டவுடன் நமக்குத் தானாக சிரிப்பு வரும்.

எவ்வளவு பொருள் பொதிந்த வார்த்தைகள், குறவர்கள் குளிப்பதே கிடையாது. அவர்களைக் குளி என்றால் எவ்வளவு கடினமாயிருக்கும் அவர்களுக்கு? சமீபத்தில் அன்பே சிவம் என்னும் ஒரு திரைப்படத்தில் கமல்ஹாசன் ஏதோ சொல்ல முயல இடைமறித்து, "போதும் சார், எனக்கு குளிக்கக் கூடத் தெரியாதா? அதுக்குக் கூட நீங்க சொல்லித் தரணுமா? போய் வேலையைப் பாருங்க" என்பார் மாதவன்.

நம்மில் பலர் இப்போதும் இரவு தாமதமாகப் படுக்கப் போகும் நேரத்தினால் காலையில் சிறிது தாமதமாக எழுகிறோம். அப்படி தாமதமாக எழும்போது நேரமின்மையினால் வேகவேகமாகக் குளித்துவிட்டு, ஏதோ காலையில் கிடைத்த உணவை ருசியும் அறியாமல் அள்ளிப் போட்டுக்கொண்டு அவதி அவதி என்று அலுவலகத்துக்குச் செல்கிறோம். சிலர் அதற்கும் நேரமில்லாமல் குளியலறைக்குச் சென்று சிறிது சிறிது தண்ணீரில் முகத்தைக் கழுவிக்கொண்டு, சிறிது தண்ணீரைத் தலையிலும் தெளித்துக்கொண்டு வருவோம். அப்போது கேட்பார்கள், "என்ன இன்று காக்காய்க் குளியலா?" என்று. ஏன் அப்படிக் கேட்கிறார்கள் என்று யோசித்தால், காக்காய் திடீரென்று குளிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு நீர்நிலைகள் அருகிலே வரும். எப்போதுமே காக்காய்க்கு சந்தேகம் அதிகம். அதனால் யாராவது வந்துவிடப் போகிறார்களே, யாராலாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்றெல்லாம் நினைத்துக்கொண்டு தலையை ஒரு முக்கு தண்ணீரில் முக்கிவிட்டு, பலமுறை தலையை சிலுப்பிக்கொள்ளும். அதுபோல அரைகுறைக் குளியல் போட்டுவிட்டு வரும் நம்மை அப்படித்தான் கேட்பார்கள்.

என்னடா ஒரு சாதாரணக் குளியலுக்கு இவ்வளவு வியாக்யானங்களா என்று யோசிப்போருக்கு இன்னும் ஏன் குளிக்க வேண்டும் என்று நான் சொல்லவே இல்லையே. இப்போது சொல்கிறேன்.

நாம் ஒவ்வொரு நாளும் இரவில் தூங்கப் போகிறோம். நாம் தூங்கும்போது நம் புலன்கள் அனைத்தும் ஓய்வெடுக்கின்றன. சில முக்கியமான உறுப்புகளைத் தவிற, நம் உறுப்புகள் அனைத்தும் பல கழிவுகளை நம் உடலில் உற்பத்தி செய்கின்றன. அந்தக் கழிவுகள் நம் உடலில் சேரும்போது நம் உடலில் ஒரு துர்நாற்றம் ஏற்படுகிறது, அந்தக் கழிவுகளை சுத்தம் செய்யாமல் அப்படியே சேரவிட்டால் அந்தக் கழிவுகள் நம் உடலுக்கு நோயை விளைவிக்கும். ஆகவேதான் குளிக்க வேண்டும்.

அது மட்டுமல்ல, ஒவ்வொரு நாள் நாம் தூங்கும்போதும் விஷயம் தெரிந்த பெரியவர்கள் சொல்லுவார்கள் அது ஒரு தற்காலிக மரணம் என்று. ஆகவே நாம் பிறந்த போது நம்மைச் சுற்றி இருந்த வேண்டாத அழுக்குகளை நீக்க நம்மைக் குளிப்பாட்டுகிறார்கள். அது போல நாம் ஒவ்வொரு நாளும் இறந்து பின் மீண்டும் பிறக்கிரோம். அப்படிப் பார்க்கும்போது தினமும் நம்மைச் சுத்தம் செய்து கொள்ள குளித்துதானே ஆகவேண்டும், அதனால்தான் குளிக்கிறோம்.

குளிப்பது என்னும் வழக்கம் ஏன் ஏற்பட்டது, சுத்தமும் சுகாதாரமும் புரிய ஆரம்பித்தபோது, நீரினால் நம் உடலைக் கழுவினால் அசுத்தங்கள் நீங்கிவிடும் என்று உணர்ந்த போது, ஏற்பட்ட ஒரு நடைமுறைதான் குளியல் என்பது.

குளிப்பதில் எத்தனை வகைகள் இருக்கிறது என்று பார்ப்போம்.

முதலில் ஏற்பட்டது ஆற்றுக் குளியல். நாம் நதிக்கரையில்தான் நம் நாகரிகத்தை தொடங்கினோம். ஆற்றுக் குளியலில் பலவகையான அபாயங்கள் உண்டு. காவிரியில் நீர் ஓடிக்கொண்டிருக்கும், பெண்டிரும் ஆடவரும் குளித்துக் கொண்டிருப்பார்கள், திடீரென்று நீர் ஏகத்துக்குப் பெருகி வெள்ளமாய் வந்து பலரை அடித்துக்கொண்டு போயிருக்கிறது. அது மட்டுமல்ல ஆற்றில் குளிக்கும் போது எந்த இடத்தில் ஆழம் அதிகம், எங்கு குளித்தால் நீரோட்டம் நம்மை அடித்துகொண்டு போகாமல் இருக்கும் என்பது தெரிந்து குளிக்க வேண்டும். சில இடத்தில் பாறைகள் நீட்டிக் கொண்டிருக்கும். நாம் குளிக்கும்போது அந்தப் பாறைகள் நம் கையையோ காலையோ கிழித்துவிடக்கூடும். ஆக அந்த ஆற்றில் ஏற்கெனெவே குளித்துப் பழக்கப்பட்டவர்களிடம் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு பிறகு ஆற்றில் குளித்தால் நல்லது.

அடுத்ததாக கிணற்றுக் குளியல். பல கிராமங்களில் விவசாயத்தை முன்னிட்டுப் பெரிய கிணறுகளை வெட்டி வைத்திருப்பார்கள். அந்தக் கிணறுகளில் பல சிறுவர்கள் மேலிருந்து சத்தம் வரும்படியாக குதித்து நீரைக் கிழித்துக்கொண்டு நீந்திக் குளிப்பார்கள். அவர்களுக்குத் தெரியும் அந்தக் கிணற்றின் பக்கவாட்டுச் சுவரில் எங்கு பள்ளமாய் இருக்குமென்று. அங்கு போகும் போதுமிகவும் எச்சரிக்கையுடன் போவார்கள். அதுமட்டுமல்ல கிணற்றில் சில சமையம் தவளை, மீன்கள் பாம்பு போன்றவை இருக்கக் கூடும். அவைகள் வந்தால் எப்படி சமாளித்து மேலே வரவேண்டும் என்று அவர்களுக்கு இயல்பாகவே பயிற்சி வந்துவிடும்.

அடுத்ததாக குளங்களில் குளித்தல். இது மிகவும் ஆபத்தானது, ஏனென்றால் குளங்களில் பாசி போன்ற தாவரங்கள் நம்மை வழுக்கி விட்டுவிடும். அதுமட்டுமல்ல, தாமரை, அல்லி போன்ற மலர்களின் கொடிகள் குளங்களில் கீழே வேரூன்றி இருக்கும். அந்தத் தாவரத்தின் தண்டுகள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு இருக்கும். நாம் கீழே சென்று நீந்தும் போதோ, அல்லது பாசியின் வழுக்கலாலோ உள்ளே விழுந்து கீழே சென்று மேலே வர முயலும் போது நம் கால்கள், கைகள் அந்தத் தாவரத்தின் பின்னலில் சிக்கிக்கொண்டு நம்மை மேலே வரமுடியாமல் செய்துவிடும் அபாயம் உள்ளது. இதனால் மூச்சுத்திணரி இறக்கும் வாய்ப்பு அதிகம்.



அடுத்ததாக கடல் குளியல். மாசிமகம் அன்று கடலில் குளித்தால் புண்ணியம் என்னும் நம்பிக்கை இருக்கிறது, அப்படிக் கடலில் குளிக்க ஆசை கொண்டோர் கவனிக்க வேண்டிய பல நுணுக்கங்கள் இருக்கின்றன. கடல் அலைகள் கடலின் ஓரத்திலேதான் இருக்கும். அந்த அலைகளில் லாவகமாக இறங்கி நீந்தி நடுக்கடலுக்கு செல்ல வேண்டும். அப்படிச் செல்லும்போது நம்மால் எவ்வளவு தூரம் நீந்த முடியும் என்று நம்மை, நம்முடைய திறனை எடைபோடாமல் அதிக தூரம் கடலுக்குள் செல்லக் கூடாது. நீந்தத் தெரியாதவர்கள் கடலில் இறங்கவே கூடாது, ஏனென்றால் அலைகள் கரைக்கு வரும்போதே சீற்றத்துடன்தான் வரும். வந்துவிட்டுப் பின்னுக்குத் திரும்பும்போது மிகவேகமாகத் திரும்பும். அப்படித் திரும்பும் கடலலை என்னதான் எச்சரிக்கையுடன் செயல்பட்டாலும் காலை வாரி இழுத்துக்கொண்டு போய்விடும்.

நீந்தத் தெரிந்தவர்களா யிருந்தாலும் கடலுக்குள் போகும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனென்றால் நீந்தத் தெரிந்தால் மட்டும் போதாது. கடல் நீருக்கு இயல்பாகவே ஒரு அழுத்தம் உண்டு. அந்த அழுத்தத்தை சமாளிக்கப் பழக வேண்டும். அதுவுமன்றி சுறா, திமிங்கிலங்கள் போன்ற பெரிய வகை மீன்கள் கடலில் உண்டு, அவைகளிடம் மாட்டிக்கொண்டால் தப்பிப்பது கடினம்.

சரி ஆறு, குளம், கிணறு இவைகளில் குளிப்பதற்கு இவ்வளவு தெரிந்திருக்க வேண்டுமா நமக்கெதற்கு வம்பு என்று வீட்டிலேயே குளியலறையில் குளிக்கலாம் தவறில்லை, ஆனால் குளிக்க வேண்டும்.

ஆமாம் ஏன் குளிக்கவேண்டும் என்று தெரிந்து கொண்டோம் எப்படிக் குளிக்க வேண்டும் என்று பார்க்கலாமா? என் தாயார் எனக்கு சொல்லிக்கொடுத்த ஒரு ரகசியத்தை இப்போது சொல்லப் போகிறேன்.

எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊர் நீர்நிலைகளில் குளிக்கும்போது அந்த நீர்நிலை குளிப்பதற்கு ஏற்றதுதானா என்று தெரிந்து கொண்டு குளிக்க வேண்டும். அப்படிக் குளிப்பதற்கு முன்னால் அந்த நீர் நிலையிலிருந்து சிறிதளவு தண்ணீரை வலது கைகளின் உள்ளங்கை அளவு எடுத்து மூன்று முறை குடித்துவிட்டு, பிறகு குளித்தால் அந்த நீர் நம்மை பாதிக்காமல் இருக்கும் என்பார்கள், ஏனென்றால் உள்ளே இருப்பதும் அந்த நீர்நிலையின் தண்ணீர், வெளியே நம் உடலில் படுவதும் அந்த நீர்நிலையின் தண்ணீர் எனும்போது இரண்டும், அதாவது உள்ளும் புறமும் சமனப்பட்டு எவ்வித எதிர் விளைவுகளும் ஏற்படுத்தாமல் இருக்கும் என்பார்கள் என் தாயார். இன்று வரை நான் அதைக் கடைபிடித்து இருக்கிறேன். நாடகம், திரைத்தொடர்கள், திரைப்படம் போன்றவைகளில் நடிக்க நான் பல ஊர்களுக்கு சென்றிருக்கிறேன். பல நீர் நிலைகளில் குளித்திருக்கிறேன், ஆனால் எந்த நீர்நிலைகளும் என்னை பாதித்தது இல்லை.

வீட்டில் நாம் குளிக்கும்போது நீரை அதிகம் செலவழிக்காமல், ஆனால் சுத்தமாகக் குளிப்பதற்கு ஒரு முறை இருக்கிறது. நீரால் முதலில் உடலை நனைத்துக்கொண்டு நாம் உபயோகிக்கும் சோப்பை எடுத்து முதலில் முகத்தை சுத்தம் செய்துவிட்டு, நீரால் கழுவிவிட்டு பிறகு உடலை சுத்தம் செய்ய ஆரம்பித்தால் கண்களில் சோப்பு உள்ளே சென்று கண்கள் எரிவதை தடுக்கலாம். மற்றும் நாம் கண்களால் நன்றாகப் பார்த்து மற்ற பாகங்களை சுத்தம் செய்ய வசதியாய் இருக்கும். சோப்பைக் கைகளில் தடவிக்கொண்டு கைகளால் உடல் முழுவதும் தேய்த்துக்கொண்டு பிறகு நீரைத் திறந்து குளிக்க ஆரம்பித்தால் குறைவான அளவு தண்னீரிலேயே சுத்தமாகக் குளித்து விடலாம். பிறகு தலையில் தண்ணீரை ஊற்றி ஷாம்பூவோ, அல்லது சிகைக்காயோ தேய்த்துக்கொண்டு உடனே தண்ணீரால் தலையைக் கழுவிவிட்டு உடனடியாக முதலில் தலையைத் துடைத்துக் கொண்டால் சளிபிடிப்பது, தலை வலி போன்ற தொந்தரவுகளிலிருந்து தப்பித்துவிடலாம். பிறகு உடலை சுத்தமாகத் துடைத்துக்கொண்டு வெளியே வந்து கன்னடியில் முகம் பார்த்துத் தலை சீவும் நேரத்துக்குள் தலை முடி காய்ந்து பதமாகவும் இருக்கும்.

முக்கியமான ஒரு செய்தி இருக்கிறது. தூங்கும் போது நம் உறுப்புகள் இளைப்பாறுகின்றன. அப்படி இளைப்பாறும் போது அந்த தசைகள், இறுகிவிடுகின்றன. அப்படி இறுகிவிட்ட தசைகளைத் தளர்த்தி எளிதாக செயல்படுத்த நம் உள்ளங்கைகளினால் நன்றாகத் தேய்த்து விடுவதால் அத்துணை தசைகளும் மீண்டும் புத்துணர்வு பெற்று இயல்பாக இயங்கத் தொடங்கும்.

இதைத்தான் அழகு நிலையங்களில் மசாஜ் என்று சொல்லுகிறார்கள். மருத்துவமனைகளில் ஹீட் தெரப்பி என்றும் சொல்கிறார்கள். நம் பணத்தையும் வீணடித்து இவ்வாறெல்லாம் செய்வதை விட தினமும் குளிக்கும்போது நம் உள்ளங்கைகளால் நாமே நம் உடலை நன்கு தேய்த்துப் புத்துணர்வு பெறச் செய்யலாமே. என்ன தினமும் குளிப்பது எவ்வளவு நல்லது என்று புரிகிறதா? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமன்றோ?

மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ


தாழம்பூவே தங்க நிலாவே

” தாழம்பூவே தங்க நிலாவே ‘




மார்கழி மாதம் பிறந்த நாளிலிருந்து, அருகிலிருக்கும் ஆலயத்திலிருந்து ஒலிபெருக்கி மூலமாக ஒலிக்கும் திருப்பாவை, திருவெம்பாவை போன்ற பக்திப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே விடியற்காலையில் என் பெண் எங்கள் வீட்டு வாசலில் போடும் கோலங்களையும் ரசித்துக் கொண்டும், உபன்யாசங்கள், முடிந்த போது இசைவிழாக் கச்சேரிகள் கேட்டுக்கொண்டும்,நம் அறிஞர்கள் எழுதிய இசைமறுவறல்கள் படித்தும், இத்தனை நாட்கள் எங்கள் ஆழ்வார் ஆண்டாளைப்பற்றி அனைத்து அறிஞர்களும் எழுதிய அமிர்தம் போன்ற விளக்கங்களப் படித்தும், முழுவதும் அனுபவித்து ஆனந்தமடைந்தேன்.

நாளை வைகுண்ட ஏகாதசி, எல்லா வைணவ ஆலயங்களிலும் வைகுண்ட வாசல் திறக்கும்,வைகுண்ட வாசல்திறக்கும் அந்த சுபமுகுர்த்த வேளையில் மானுடர்களாகிய நாம் மனதும் உடலும் சுத்தமாக, அந்த வாயிலின் வழியே நுழைந்து அங்கு இறைவனை தரிசனம் செய்தால் வைகுண்டம் செல்லலாம் என்னும் ஆத்திக அன்பர்களின் நம்பிக்கையின் படி அனைத்து மக்களும் ஆலயங்களுக்கு சென்று வழிபடும் நாள்,

உத்திரமேரூரிலிருந்து ஒரு உறவுக்காரப் பெண் என் மனைவிக்கு தாழம்பூவை அனுப்பி இருந்தாள் தாழம்பூ வாசனைக்கு பாம்பு வரும் என்று சொல்லுவார்கள்,மின்னல் தெறிக்கும் வேளையிலே தாழை மடல் விரியும் என்றும் தாழம்பூ பூக்கும் என்றும் சொல்லுவார்கள், அது மட்டுமல்ல தாழம்பூவில் சிறு நாகம் என்று சொல்லக்கூடிய சிறு பாம்பு இருக்கும்,அந்தப் பூநாகம் கடித்தால் பிழைப்பது கடினம் என்றும் சொல்லுவார்கள் ஆகவே தாழம்பூவை நன்கு சோதித்துப் பிறகே கூந்தலில் சூடவேண்டும் என்று என் அன்னையார் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பொதுவாக என் வீட்டில் இறைபக்தி உண்டு என்னும் காரணத்தால் புதிய துணிமணிகள், நகைகள், வீட்டிலே சமைக்கும் உணவுப் பொருட்கள் அனைத்தையுமே ஸ்வாமிக்கு நிவேதனம் செய்து விட்டு அதன் பின்னர் உபயோகிப்பது வழக்கம். அதேபோல் தாழம்பூவையும் ஸ்வாமிக்கு அணிவித்து பிறகு வீட்டில் உள்ள பெண்மணிகள் சூடிக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். ஆகவே என்னுடைய இயல்பான எச்சரிக்கையான குணத்தினால் அந்த தாழம்பூவை பிரித்து அதில் நன்கு சோதனையிட்டு பிறகு என் மனைவியிடம் கொடுத்தேன்.

பாசத்தோடு தாழம்பூவை அனுப்பி இருக்கும் அந்தப் பெண்ணின் அன்பில் எனக்கு சந்தேகமில்லை, ஆனால் அந்தப் பெண்ணிற்கு தாழம்பூவின் இயல்புகள் தெரியுமோ தெரியாதோ என்னும் எண்ணத்தில்தான் சோதனை செய்தேன். ஒரு எச்சரிக்கைதான் இதற்கும் காரணம், ஆனால் இந்த எச்சரிக்கைக்குப் பின்னால் இருக்கும் என் சுயநலத்தை எண்ணிப் பார்த்தேன் வெட்கமாக இருந்தது.

நான் என் மனைவியிடம் சொன்னேன் எதற்கும் தாழம்பூவை ஸ்வாமிக்கு சார்த்தி அணிவித்த பிறகு நீ சூடிக்கொள் என்று.

எப்பொருளையும் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு பிறகு நாம் உபயோகிப்பது என்ன காரணத்தால் என்று எண்ணிப் பார்க்கையிலே அனேக காரணங்கள் தோன்றினாலும் நமக்கு ஒரு பிறப்பையும் தந்து நமக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களையும் அளித்த இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாக அவருக்கு நிவேதனம் செய்து விட்டு உபயோகிக்கிறோம் என்பது ஒரு காரணம்.

பொதுவான நம்பிக்கை என்னெவென்றால் நாம் உபயோகிக்கும் பொருட்களில் ஏதேனும் தோஷங்கள் இருந்தால் அவைகளை ஸ்வாமி நீக்கிவிட்டு நமக்கு நன்மை அளிக்கக் கூடிய ப்ரசாதமாக மாற்றித் தருவார் என்னும் ஆன்மீகவாதிகளின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நாம் எல்லாவற்றையும் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்கிறோம் என்பது பொதுக் கருத்து.

இப்படிப் பார்க்கும் போது இறைவனை தோஷங்கள் எதுவும் தாக்காது, அவன் சர்வ வல்லமை படைத்தவன் என்று நாம் மதிக்கிறோம் என்று தோன்றினாலும், நாம் செய்வது சரியா என்று ஒரு எண்ணம் தோன்றுகிறது, ஏனென்றால் என் தாயார் குளித்து சுத்தமாக தன் கையாலே சமைத்த உணவுப் பொருட்களை ஸ்வாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு பிறகே எங்களுக்கு அளிப்பார்கள். அது வரை என்னதான் பசித்தாலும் காத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் என்னும் வழக்கத்தை எங்களிடையே விதைத்தார்கள்.

அந்த வழக்கத்தினால், பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்னும் மூன்று சொற்களின் பயன் என்னவென்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது, நல்ல வேளை என் மனைவியும் அதே வழக்கத்தை கடைபிடிக்கிறாள்.

ஆனால் புதியதாக திருமணம் ஆன என் மகள் சமைத்துக் கொண்டிருக்கும் போது அவள் சமைக்கும் ஒவ்வொரு உணவுப் பண்டத்தையும் முதலில் கொஞ்சம் ருசி பார்த்துவிட்டு வைப்பதைப் பார்த்து அவளிடம் கேட்டேன், முதலில் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்யாமல் இதுபோல நீ ருசித்துப் பார்க்கிறாயே இது நியாயமா என்று.

அதற்கு அவள் சாமர்த்தியமாக என்னிடம் சொன்ன பதில் என்னை யோசிக்க வைத்தது, அப்பா நானே சமையல் கலைக்கு புதியவள் ஏதோ ஒரு தைரியத்தில் சமைக்கிறேன், அதன் ருசி சரியில்லாமல், என் கணவருக்கு அளிப்பதற்கு என் மனம் இடம் கொடுக்கவில்லை. நாம் மரியாதை அளிக்க நினைப்பவருக்கு பதமான சுவையோடு கூடிய குற்றமில்லாத உணவை அளிப்பதுதானே நியாயம். அதனால்தான் நான் ருசித்து விட்டு அந்த உணவுப் பொருட்களில் இருக்கும் குறைகளைக் களைந்து சுவையாக மாற்றி பிறகு அவருக்கு அளிக்கிறேன் என்றாள்.

சாதாரண மானுடப் பெண்ணிற்கே தான் காதலிக்கும் தன் கணவன் மேல் உள்ள மரியாதையாலும் தன்னுடைய அக்கரையினாலும் கணவனுக்கு எந்த விதத்திலும் ஒரு குறையும் வந்துவிடக் கூடாது என்று, தான் ருசி பார்த்துவிட்டு குற்றம் களைந்து பிறகு கணவனுக்கு அளிக்கவேண்டும் என்னும் நல்லெண்ணம் இருக்கிறதே!!

அப்படியானால் ஆண்டாள் எப்படியெல்லாம் அரங்கனை போற்றி இருப்பாள் என்று நினைக்கையிலே மனம் தழுதழுக்கிறது.

ஆத்மார்த்தமாக காதலித்து, பக்தி செய்த அடியவர்களான ஆழ்வார்கள் இறைவனை, மூலப்பொருளை எவ்வளவு உயர்வாக வைத்திருந்தார்கள், என்பதைக் காட்டும் இலக்கியங்கள் நமக்கு பக்தியை உணர்த்துகின்றன.

தான் கடித்துப் பார்த்துவிட்டு குற்றம் நீக்கி ஸ்ரீராமனுக்கு வண்ணமாகவே, சபரி அவைகளை அளித்தாள் என்பதில் வியப்பேதுமில்லை, குற்றமும் இல்லை என்றே தோன்றுகிறது. இச்செய்கை சபரியின் அளவிடமுடியாத பக்தியைக் காட்டுகிறது.

அனைவரும் என் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தும், நம் வீட்டுக்கு வா கண்ணா, என்று பக்தியுடன் அழைத்த விதுரரின் அழைப்பை ஏற்று, அவர்தம் குடிலுக்கு சென்ற பகவான் கிருஷ்ணனைக் கண்ட விதுரர் தன்னை மறந்த நிலையில் வாழைப்பழத் தோல்களை கிருஷ்ணனுக்கு அளித்து பழத்தை கீழே போட்டுவிட்டு நெக்குருகி ஆனந்தக் கண்ணீர் வழிய பரவச நிலையிலிருந்த விதுரரின் நிலையை எண்ணிப்பார்த்து பரவசமடைந்தேன், அப்படி பக்தியோடு அடியவன் அளித்த பழத்தோல்களை சற்றும் முகம் சுளிக்காமல், திருப்தியோடு உண்ட வெண்ணையுண்ட வாயன் கிருஷ்ணனின் லீலை நம்மை வியக்க வைக்கிறது.

சுய நிலை அடைந்து பதறிப்போய் தான் செய்த தவறுக்கு வருந்தி விதுரர் பூரண உணர்வோடு பழத்தை அளித்த போது அதை மறுத்து, தன்னை மறந்த நிலையில் விதுரர் அளித்த வாழைப்பழத்தோலே தனக்கு உவப்பானது என்று அருளி, அடியவர்களின் பக்தி எப்படி இருக்க வேண்டும் என்று நமக்குணர்த்திய பரமன் கிருஷ்ணனின் லீலையை அனுபவிக்கிறேன்.

அப்படி இருக்க ஸ்ரீரங்கன் மேல்பக்தியும், அளவிடமுடியாத காதலும் கொண்ட ஆழ்வார் ஆண்டாள் திருவரங்கனுக்கு எந்த ஒரு தீங்கும் வந்து விடக் கூடாது என்று எண்ணம் கொண்டதால்தானோ தான் சூடி மாலை அவனுக்களித்தாளோ என்று தோன்றுகிறது.

என்னதான் பெரியாழ்வார் பக்தியோடு சுத்தம் செய்த மலர்களைக் கொண்டு மாலை கட்டி இருந்தாலும் அம்மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு சற்றும் உறுத்தல் இல்லாமல் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்து பிறகு ஸ்ரீரங்கனுக்கு அளிக்கலாமே என்னும் எண்ணத்தால் தான் சூடி மாலை தந்தாளோ கோதை என்று தோன்றுகிறது.

இன்னமும் அந்த மாலைகளில் ஏதேனும் குற்றம் இருந்து விடப் போகிறதே, அந்தக் குற்றங்கள் தன்னை பாதித்தாலும் பரவாயில்லை, அரங்கனைப் பாதித்து விடக்கூடாது, அதனால் குறைகளைக் கண்டுணர்ந்து களைய வேண்டுமே என்று நினைத்து குறை ஒன்றுமில்லாத கோவிந்தனுக்கு குறை களைந்து தான் சூடி மாலைதனை அளித்தாளோ ஆண்டாள் என்று தோன்றுகிறது.

ஸ்ரீரங்கனுக்கு ஆண்டாள் ஆழ்வாரா,இரண்டறக் கலந்த பாகம் பிரியாளா, அல்லது தாய்மையோடு கூடிய பாசத்தோடு கூடிய தாயாகவும் ஆனாளா?

அவன் மடியில் தழும் சேயாகவும் ஆனாளா?

அடடா என்னே பெரியாழ்வார் கண்டெடுத்த சின்னாழ்வார் ஆண்டாளின் பெருமை?

அதனால்தான் தாய்க்குப் பின் தாரம் என்னும் சொல்வழக்கு ஏற்பட்டதோ என்று தோன்றுகிறது

அன்புடன்
தமிழ்த்தேனீ





Sunday, February 22, 2009

சிறு வயதில் என்னுடைய பாட்டியும் ,தாயாரும்
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சாயக் கிளியே சாய்ந்தாடு, என்று பாடியும் ,
ஆனை ஆனை அழகர் ஆனை, அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை,
குட்டியானைக்கு கொம்பு முளைச்சுதாம் ,பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சாம், என்று சொல்லும் தமிழ் வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு வளர்ந்தோம், மார்பிலே அம்பைத் தாங்கிய தன் பிள்ளையின் வீரம் கண்டு நெக்குருகி மார்பிலே பால் பீரிட்டெழ பிள்ளை இறந்த துக்கத்தையும் மறந்து,புறமுதுகு காட்டாத பிள்ளையைப் பெற்றெடுத்ததற்காக பெருமை கொண்ட வீரத்தமிழ்த் தாயின் கதைகள் கேட்டு வீரம் கொண்டோம்,

நம்முடைய பாரதியாரின் கனல் தெறிக்கும் பாடல்களை நம்மைப் பெற்றவர்கள் வாயாலேயே பாட அதைக்கேட்டு தேசப்பற்றும், ஞானமும் அடைந்தோம், தீராத விளையாட்டுப் பிள்ளை என்னும் கண்ணனின் திருவிளையாடல் கேட்டு இளமை இனிமையென கண்டோம்,கொட்டடடா ஜெய பேரிகை கொட்டடா என்னும்பாடலைக் கேட்டு வீர முழக்கமிட்டோம்,ஓடி விளையாடு பாப்பா என்கிற பாட்டைக் கேட்டு வாழ்க்கையில் எந்தஎந்த பருவத்தில் எப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும் என்று கற்றுக் கொண்டோம், ”சகலகலாவாணியே சரணம் தாயே சங்கீத வீணா பாணியே”

என்னும் பாடலைக் கேட்டு தமிழில் துதி செய்யக் கற்றுக் கொண்டோம்

அந்த சுந்தரத்தமிழ் இருக்க ,
லிட்டில் லிட்டில் ஸ்டார் பாட்டு எதற்கு ?

இதை நம் மக்கள் புரிந்து கொண்டு குழந்தைகளுக்கு நல்ல செய்திகளை தமிழிலே ,சுந்தரத் தமிழிலே அளிக்கவேண்டும்,முதலில் பெரியவர்களுக்கு ஆங்கில மோகம் தீரவேணும்,எல்லா மொழியையும் கற்றுக் கொள்ளலாம், ஆனால் தாய் மொழியை முதலில் அறிதல் அவசியமன்றோ,?
எனக்கு ஒரு ஆச்சரியம், ஆங்கிலம் தெரியாமலே இத்துணை நாட்கள் நமக்கு தமிழிலேயே எல்லாவித வாழ்க்கை முறைகளையும் பெற்றோர்கள் முறையாக கற்றுக் கொடுத்தனரே, இப்போது அந்த ஞானம் எங்கு போயிற்று

விலங்குகள், பறவைகள், கூட எந்த தேசத்திலிருந்தாலும் அதன் தாய் மொழியிலேயே தன் குட்டிகளுக்கு கற்பிக்கிறது,
அன்னிய நாட்டில் இருக்கும் பசுக்கள் கூட அம்மா என்றே தமிழை உச்சரிக்கின்றன,நாம் விலங்குகளை, பறவைகளை விட கீழானவராய் ஆகிவிட்டோமா?



சிரிப்புத்தான் வருகுதையெ-உலகைக்கண்டால்

சிரிப்புத்தான் வருகுதையே என்னும்பாடல் ஷண்முகப்ரியா ராகத்திலும்,

அகத்தியர் தருந் தமிழை அன்னைபோல் வளர்த்தனை

சகத்திலே உனைப்போலுண்டோ தாய்மொழிக்குழைத்தவர்

இகத்திலே தமிழ்த்தவம் இயற்றிச் சங்க நூல்களின்

சுகத்திலே குளித்தனை சுவாமிநாத வள்ளலே என்னும் பாடல் காமாஸ் ராகத்திலும்


தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும்-இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்,

முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்-இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்

என்னும் மஹாகவி பாரதியாரின் பாட்டுகள் ஒலித்த நாட்கள்,

பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்- மிடிப் பயம் கொல்லுவார் துயர்ப் பகைவெல்லுவார்
என்னும் பாடல் புன்னாக வராளி ராகத்திலே ஒலித்த அந்த நாட்கள்

வந்தே மாதரம் என்போம்- எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்என்னும் ஆனந்தக் களிப்பு ராகத்திலே பாடல் கேட்ட அந்த நாட்கள்

தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

என்னும் தாயுமானவர் ஆனந்தக் களிப்பு வர்ணமெட்டில் கேட்ட அந்த நாட்கள் இவையெல்லாம் மீண்டும் வாராதோ என்று ஏக்கமாய் இருக்கிறது

அந்தநாள் இனி வருமோ-சொல்லடீ அம்பலப் பசுங்கிளியே

என்னும் சுத்தானந்த பாரதி அவர்களின் பாடல் ஆரபி ராகத்திலே காதில் ஒலிக்கிறது,

என்ன செய்ய?

அன்புடன்

தமிழ்த்தேனீ


Thursday, February 19, 2009

நிலப்பிரண்டை

சமீபத்தில் நான் நடித்துக்கொண்டிருக்கும் கோகுலத்தில் சீதை என்னும் தொலைக் காட்சித் தொடரில் நடிப்பதற்காக சென்ற ஒரு இடத்தில் எனக்கு மனைவியாக நடிக்கும் ஒரு பெண்மணியின் தகப்பனார் சேலத்து ஆசாமி,சுமார் 80
வயது இருக்கும், அவரிடம் அவரிடம் ஆத்மஞானம், இந்துமதம், நம் நாட்டின் பெருமைகள், என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கடைசியாக அவருடைய ஊரான
சேலத்தைப் பற்றி கேட்டேன், அப்போது அவர் கூறிய விவரங்களை வீட்டுக்குவந்து எழுதினேன்’அந்த விவரங்கள்:


சேலத்தில் மிகவும் விசேஷமான
கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு)

மலைமேல் அர்தநாரீச்வரர் திருக் கோயில்
ஆங்கே ஆணும் பெண்ணும் சமம் என்பதை நிருப்பிக்கும் வகையில் இறைவன் ஆண்பாதி,பெண்பாதியாய் அர்தநாரீஸ்வரராய்க் திருக் கோலம் கொண்டுள்ளார்

ஆங்கே மலைமேலே உள்ள கருப்பக்கிரகத்தில்
அந்த அர்தநாரீஸ்வரர் பெருமானின் திருவடியின் கீழே
ஒரு சுனை இருக்கிறது எப்போதும் வற்றாத சுனை அது
அருச்சகர் அர்ச்சனை முடித்த பின் அந்தச் சுனையிலிருந்து நீரை எடுத்து பக்தர்கள் மேல் தெளிப்பர், பக்தர்களும் அந்த நீரை அருட் ப்ரசாதமாய் வணங்கி ஏற்றுக் கொள்வர்

அதே சேலத்திலே கஞ்ச மலை என்றொரு மலை இருக்கிறது, ஆங்கே சித்தர் கோயில் ஒன்றும் இருக்கிறது, இன்றும் அங்கே சித்தர்கள் வலம் வருகிறார்களாம்,
அந்த மலையின் அடிவாரத்திலே தடையாண்டி ஊற்று என்றொரு ஊற்று இருக்கிறது, ஈரோடு ,சீரகாபாடி பக்கம் வருகிற இந்த ஊற்றுத்தண்ணீர் பல வியாதிகளுக்கு,
குறிப்பாக மேகரோகம்,போன்ற சரும வியாதிகளை குணமாக்கும் மூலிகைத்தண்ணீர் என்பது நம்பிக்கை
ஆனால் உடலில் சோப்பு போன்றவைகளை தடவிக் கொண்டு குளிக்கக் கூடாது,என்கிறார்கள் அங்கிருப்பவர்கள்
கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு)

கொங்குநாட்டுத் தலம். இத்தலம் சங்ககிரிதுர்க்கம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 9 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. ஈரோட்டி லிருந்தும் நாமக்கல், சேலம் ஆகிய ஊர்களிலிருந்தும் பேருந்து மூலமாகவும் இத்தலத்தை அடையலாம். மலைமேல் கோயில் வரை செல்லப் பேருந்து வசதி உள்ளது.இத்தலம் திருச்செங்கோடு, திருச்செங்குன்றூர், நாகாசலம் என வழங்கப்பெறும். மேலவீதியிலிருந்து பார்த்தால் மலை, நாகம் போல் தோன்றுவதால் நாககிரி எனப்பெற்றது. சுப்பிரமணிய சுவாமி சந்நிதி தனியே அமைந்துள்ளது. சுவாமி சந்நிதி மேற்குப் பார்த்தது. முருகன் சந்நிதி கிழக்குப்பார்த்தது. விஷ்ணுகோயில் கோயிலுக் குள்ளேயே தனியேயிருக்கிறது. சுவாமி அர்த்தநாரீசுவரர். அம்மை பாகம்பிரியாள்; அர்த்தநாரீசுவரி. விஷ்ணுவுக்கு ஆதிகேசவப் பெருமாள் என்று பெயர். அர்த்தநாரீசுவரர் பாதத்தில் ஒரு சிறு ஊற்று இருக்கிறது. இது விறல்மிண்ட நாயனாருடைய அவதாரஸ்தலம். தீர்த்தம் பிரமதீர்த்தம் முதல் 16 தீர்த்தங்கள் உள்ளன. முழுநிலவு நாளிலும் , மறை நிலவு நாளிலும் பக்தர்கள் அந்த மலையின்மேல் சென்று இரவு தங்குவார்கள்,உண்பதற்கு வேண்டிய,உணவுப் பொருட்களை மட்டும் எடுத்துச் சென்ரால் போதும், சுத்தமான குடிதண்ணீர் ஆங்கே மலைமேல் கிடைக்கிறது ஆங்கே மலைமேல் கிணறு மற்றும்,சுத்தமான ஓடை இருக்கிறது, அடிவாரத்தில் உணவு விடுதிகள் இருக்கின்றன,ஆனால் சைவ உணவு மட்டுமே கிடைக்கும் ,அசைவ உணவு விடுதிகளுக்கு அங்கே தடை விதித்திருக்கிறார்கள், ஒவ்வொரு முழுநிலவு நாளிலும்,மறை நிலவு நாளிலும்,குறைந்தது ஐம்பதாயிரம் பேர் வருகிறார்கள், அதேபோல கொல்லி மலையிலும்,இன்னும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக மக்கள் நம்புகின்றனர்

கொல்லி மலையில் இந்தியாவிலேயே பெரிய மூலிகைப் பன்ணை அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது, மற்றும் செம்மேடு, சுவாலக்காடு, அரபளீஸ்வரர் திருக்கோயில்,
கொல்லி மலை நீர்விழுச்சியில் நீராடி அரபளீஸ்வரரை தரிசனம் செய்வார்கள்,இந்தியாவிலேயே கரடிகள் இந்த பகுதியில் மிக அதிகம்ம் அந்த மலையிலே வாழும் பூர்வகுடிகள் மலைவாழ் மக்கள் என்றும், மலைக்
கௌண்டர்கள் என்றும் அழைக்கப் படுகின்றனர்,அந்தக் கொல்லி மலையில் மரங்களில் பாம்புகள் தலை கீழாகத் தொங்கிய படி இருக்கும் காட்சியை காணலாம், பலாப்பழம்,அன்னாசி,,பேரிக்காய்,கொய்யா, மாம்பழம், காப்பி,அதிகம் விளைகிறது,மான்களும் மயில்களும் அங்கே சுற்றித் திரியும் அந்தக் கொல்லி மலையின் அடிவாரத்திலே

வசிய மை விற்போர் அதிகம்பேர் இருக்கிறார்கள்,அவர்கள் விக்ஸ் டப்பா என்று சொல்லும் ஒரு டப்பாவிலே மையை நிரப்பிக் கொடுத்துவிட்டு அதற்கு வசிய மை என்று பெயர் சொல்லுவார்கள், அவற்றை நம்பி 300, 400 ரூபாய் கொடுத்து வாங்கி ஏமாறுவோர் பலர், அந்த கொல்லி மலையில்
குறிப்பாக இரண்டு வேர்களைப் பற்றி கூறுகிறார்கள்

1.தலைவணங்கி வேர்

இந்தத் தலைவணங்கி வேரை வைத்திருப்பவர்களை யாரும் எதிர்க்க மாட்டார்கள் ,பணிந்து போவார்கள் எதிரிகள் என்று சொல்லுகிறார்கள்,

2,மலைமுழுங்கி வேர்

இந்த மலை முழுங்கி வேரை வைத்திருப்பவர்களுக்கு எப்படிப்பட்ட கடினமான
காரியங்களையும் அனாயாசமாக செய்யும் ஆற்றல் வந்து விடும் என்று சொல்லுகிறார்கள்,அது மட்டுமல்ல அவர் என்ன காரியங்கள் செய்கிறார், எப்படிச் செய்கிறார்,என்னும் ரகசியங்களை மற்றவர் கண்ணிலிருந்து மறைக்குமாம் அந்த
வேர்,எப்படிப்பட்ட சிக்கலில் மாட்டிக்கொண்டாலும், அதிலிருந்து மீண்டு வர இந்த மலைமுழுங்கி வேர் உபயோகப்படும் என்று சொல்லுகிறார்கள்,இவற்றையெல்லாம் விட அதிசியமாய் ஒரு செய்தி சொல்லுகிறார்கள், அந்தக் கொல்லி மலையில் தரையிலே ஒரு செடி தன்னைத்தானே சுற்றிக்கொண்டே இருக்குமாம், அந்தச் செடிக்குப் பெயர் நிலப்பிரண்டை என்று சொல்கிறார்கள், நிலத்திலே பிரண்டு கொண்டே இருக்குமாம், அந்த நிலப்பிரண்டைச் செடி பல நோய்களைத் தீர்க்கும் சஞ்சீவினி ,மூலிகை என்றுசொல்லுகிறார்கள், மூலிகைகளைப் பற்றிய விவரங்கள் தெரிந்தோர் கண்ணுக்கு மட்டுமே தென்படுமாம்,அந்த நிலப்பிரண்டை செடியை அவர்கள் மூலிகை எடுக்கும் விதமாக காப்புகட்டி மந்திர உச்சாடனம் செய்து பிறகு ஒரு குறிப்பிட்ட வேளையில்தான் எடுப்பார்களாம்,அப்படி எடுத்து வந்த நிலப்பிரண்டை செடியை சுத்தமானஇடத்தில் வைத்து, அதற்கு வேண்டிய பூசைகளை செய்து பத்திரமாக பாதுகாத்தால் அந்த செடி மிக நன்மை பயக்குமாம்சமீபத்தில் கொல்லி மலைக்கு சென்றிருந்த ஒரு நண்பர் கூறினார் , அவர் நடந்து வரும் போது செடிகளே இல்லாத சமதரையில் திடீரென்று அவர் கண்ணில் பட்டிருக்கிறது அந்தச் செடிகள், அவை தன்னைத்தானே சுற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்து வியந்த அவர் அந்தச் செடிகளின் அருகிலே சென்றவுடன் அவை சுழலுவதை நிருத்தி விட்டனவாம், அதன் இலையைப் பறித்து முகர்ந்து பார்த்திருக்கிறார்,அவருக்கு எந்த ஒரு மணமும் கிடக்கவில்லை ,அவ்வழியாக வந்த ஒரு பெரியவர் இவரிடம் வந்து என்ன பார்க்கிறாய் என்று கேட்க இவர் அந்தச் செடியைக் காண்பிக்க கையை அங்கே நீட்டிய போது அந்தச் செடிகள் இருந்த சுவடே தெரியவில்லையாம்

மீண்டும் அந்தப் பெரியவர் கையைக் காட்டியவுடன் அந்தச் செடிகள் பரவலாக கண்ணுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது,அப்போது அந்த பெரியவர் கூறினாராம் அந்தச் செடிக்குப் பெயர் நிலம் பிரண்டை ,அது ஒரு மூலிகை என்று சாதாரணமாக நம் வீட்டில் வைத்திருக்கும் துளசி, வேப்பிலை,கருவேப்பிலை, போன்ற செடிகளில் இருந்து கூட அந்தச் செடிகளின் அனுமதியை மனதாரக் கேட்டு பின்தான் பறிக்க வேண்டும் என்பர், அப்படி இருக்க அபூர்வ மூலிகைகளை பறிக்கும் போது காப்பு கட்டி மந்திர உச்சாடனம் செய்து எடுத்தால்தான் பலன் தரும்,அதிலும் குறிப்பாக அந்த மந்திர உச்சாடனங்கள் ஒவ்வொரு மூலிகைக்கும் ஏற்றவாறு நாட்கள், நேரங்கள், மாறு படும் , உருவேற்றும் பொழுது உருவேற்றுபவரின் மனதிலேயே ஒரு அறிகுறி காட்டுமாம், உச்சாடனங்களின் நிறைவை.


அன்புடன்
தமிழ்த்தேனீ



Wednesday, February 18, 2009

கணிணியும் தமிழும்

அன்புள்ள மின்தமிழ் நண்பர்களே

இப்போது நான் கூறப் போவது என் சுயப் பரதாபம்
ஆனாலும் இதைப் படிப்பவர்களுக்கு கணிணிப் பயன்பாடு எவ்வளவு உயர்வானது, தேவையானது
என்பது ஓரளவு புரியும் , புரியவேண்டும் என்னும் நோக்கில் எழுதுகிறேன்

ஆர் கிருஷ்ணமாச்சாரி யாகிய என்னை இயந்திரங்களோடு இயந்திரமாய் 34 வருடங்கள் இரவு பகலாய் வெயில் படாமல் லூகாஸ் டீவீஎஸ் என்னும் நிறுவனம் எனைப் பொத்தி வளர்த்தது போற்றி வளர்த்தது, இயந்திரமே எனக்கு போதிமரமாய் உயர்ந்து நின்றது
அந்த போதி மரத்தை விட்டு 2002 ம் ஆண்டு விலகி வீட்டுக்கு வந்தேன்,
என் மகனுக்கு ஒரு கணிணி வாங்கி அளித்துவிட்டு அவன் அதிலே வேலை செய்யும் பொழுது தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த என்னை அருகிலே இழுத்தது காந்தமாய்க் கணிணி,முயன்றுதான் பார்ப்போமே என்று முடிந்த வரை தட்டினேன், தட்டினால் திறக்கும் என்பார்களே,அடேடே எனக்கும் அருள் புரிந்தது கணிணி,   தட்டச்சு கூடத் தெரியாத என்னை கணிணியும் தமிழும் இணைந்து இன்று தமிழ்த்தேனியாய் மாற்றிய விந்தையை நினைத்துப் பார்த்தால் அது இறைவனின் சிந்தை என்று புரிகிறது,

ஏற்கெனெவே நான் கையெழுத்தாய் எழுதி வைத்திருந்த படைப்புகளை முரசு அஞ்சலென்னும் முறையை உபயோகித்து தட்டச்சு செய்தேன் , மீண்டும் அவைகளைப் படிக்க எண்ணி திறந்து பார்த்தால் அவை எழுத்துரு உருமாறி கேள்விக் குறியாய் நான் எழுதியது என்னவென்று எனக்கே புரியாமல் நான் தடுமாறும் நிலையை கேலி செய்தது .அவற்றை சரி செய்ய என் எச் எம் உருமாற்றியை கண்டு பிடித்து எழுதியதெல்லாம் அதிலிட்டு எழுத்துருமாற்றி, மீண்டும் வெட்டி ஒட்டி கோப்பாக்கி அவற்றையெல்லாம் யூனிகோட் முறையில் எழுதி வைத்தேன் . அன்றுதான் வெகு நாட்கள் கழித்து நிம்மதியாய் உறங்கினேன்.

அழகி என்றொரு மென்பொருளை இலவசமாகவே திரு அழகி விஸ்வநாதன் அவர்களும் , மழலைகள்.காம் தளம் நடத்தும் திரு ஏகேஆர் அவர்களும் எனக்களித்து என்னை அழகிக்கு பழக்கிவிட்டனர் அழகி மற்ற மென் பொருட்களைவிட தட்டச்சு செய்ய மிகவும் சுலபமாக இருக்கிறது.
மற்ற மென்பொருட்களில் நா என்றொரு எழுத்தை தட்டச்சு செய்ய w என்னும் எழுத்தை தட்டச்சு செய்து பிறகு a அடிக்க வேண்டும் ,ஆனால் அழகியில் என் எச் ஏ அடித்தாலே போதும். நாம் இயல்பாக எழுத முடிகிறது. ஆகவே இப்போதெல்லாம் நான் அழகி மென் பொருளை உபயோகிக்கிறேன்,நீங்களும் உபயோகித்துப் பாருங்கள் அழகியின் அழகு புரியும்,


மறுநாள் காலையில் முதல் நாள் பதித்த என் படைப்புகளைக் காண ஆவலுடன் கணிணியைத் திறந்தேன், விஞ்ஞான விந்தைகள் அத்தனையையும் அதுகாட்டி சரம் சரமாய் ஒளிகாட்டி இறுதியாய் திறந்தது கணிணி,என் கோப்புகளைத் தேடினேன்,
அது போன்ற கோப்பெதுவுமில்லை என்னிடத்தில் என்றே கையை விரித்து என்னை ஏளனம் செய்தது கணிணி, ஏமாந்தேன், என் படைப்புகள் அத்தனையும் காணவில்லை. மகவை திருவிழாவில் தொலைத்த தாய் போல் பரிதவித்தேன், ஆமாம் சேமிக்க மறந்திருக்கிறேன்.

கோப்புகளை சேமிக்கத் தெரியாத ஒரே காரணத்தால் முன்னூறு கவிதைகள், இருநூறு கட்டுரைகள், பல படைப்புகள் அத்தனையையும் மறைத்தது கணிணி என் கண்ணிலிருந்து, எத்துணை நாள் உழைப்பு,ஒரு நொடியில் காணாமல் போனது, அப்போதுதான் கற்றுகொண்டேன் சேமிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்று ,வாழ்க்கையில் சேமிக்காதவர் எவ்வளவு பாடு படுவாரென்று.

அப்பனுக்கே பாடம் சொன்ன கந்தனாய் என் மகனை
நான் நினைத்து அவனிடம் வெட்கம் விட்டு கேட்டுக் கேட்டுக்
சேமிக்கவும் கற்றுக் கொண்டேன்.  அதன் பிறகு என் விரல்கள்
 தமிழா.காம்  மூலமாக ஈ கலப்பை என்னும் ஒரு மென்பொருளை அறிமுகம் செய்து கொண்டன, மீண்டும் நான் கணிணியில் தங்லீஷில் தட்டச்சு செய்யத் தொடங்கி  தட்டச்சு செய்தேன் அத்தனையயும்.

 சலிக்காமல், சேமித்தேன்!.என்ன ஆச்சரியம் தட்டச்சே தெரியாத எனக்கும்
அதற்கு உதவிய பலர் மூலமாக கணிணியில் தட்டச்சுசெய்ய ,. அதுவும் தமிழிலே சரளமாய் வேகமாய் தட்டச்சு செய்ய பழக்கம் வந்திருந்தது என்விரல்களுக்கு.  கேட்டுக் கேட்டுக் கற்றுக் கொண்ட தமிழ்
தட்டச்சு,  சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் நித்தம் நடையும் நடைப்பழக்கம், தட்டச்சும்  விரல்பழக்கம்  என்பது புரிந்தது.


கணிணியே மன்னித்துக்கொள் என்னைப் படுத்துகிறாய் என்று உன்னை நான் திட்டியதுண்டு, இப்போதுதான் புரிகிறது நீ என்னைப் பண்படுத்தி இருக்கிறாய், படுத்தவில்லை என்பது,  வேலையிலிருந்து ஓய்வு பெற்றவுடன் எப்படிப் பொழுது போகப் போகிறதோ என்று பயந்து கொண்டிருந்தேன், ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் பெரியோர்களே
கணிணி கற்றுக் கொள்ளுங்கள் எவ்வளவோ நற் காரியங்கள் செய்ய வாய்ப்பிருக்கிறது.

ஒரு உண்மையை சொல்லுகிறேன் இப்போதெல்லாம் எனக்கு பொழுது போதவில்லை, நான் மனதால் உலகையே உலா வருகிறேன் என்றால் அதற்கு கணிணியல்லவா காரணம் ! அனைவருமே கணிணி கற்றுக்கொள்ளுங்கள், பறவைப் பார்வையாய் ப்ரபஞ்சத்தை பார்க்கலாம்,உலகை உலா வரலாம், தமிழிலே உலா வரலாம்

“ நான் ஒரு தொழிலாளி”

இரும்போடு உழைத்திட்ட தொழிலாளி நான்
தமிழ்க் கரும்போடு செயலாற்ற எழுத்தாளியாய்
அமிழ்தான தமிழ்தன்னின் பொறுப்பாளியாய்
தரமற்ற செயல் தமக்கே மறுப்பாளியாய்
அமர்கின்ற மலரெல்லாம் தமிழாகவே அமர்ந்திங்கு
மகரந்தம் தனை நாடியே வழிகண்டு வந்திணைந்த
தமிழ்த்தேனி நான் ,ஊன் உயிர் தழுவுதல்போல்
நான் தமிழ் தழுவினேன்,உற்றதொரு தமிழ்நாடி
தேன்தேடி சுந்தரத் தமிழ்சூடி மகிழ்கின்ற தமிழ்த்தேனி நான்
உமிழ்கின்ற உமிழ்நீரும் தேனாகவே தமிழ்த்தேனாகவே
அருஞ்சுவையான தமிழ்தந்து எனை ஏற்றியே
சிறு இறக்கைகள் தந்தருளி பறக்கின்ற அணிலாக
எனை மாற்றியே மகிழ்கின்ற கலைவாணி தமிழ்வாணியே,
அவளுக்கே குருவான ஹயக்ரீவனின் தாள் பணிந்தே
தமிழ்த் தொண்டு நான் செய்ய மனம் கொண்டதால்
அடிபோற்றி நல்அறம் பாடும் தமிழ்த்தேனியாய்
புலம்பெயர்ந்து மின்தமிழின் மரபணிலாகவே
உளம் கனிந்த தமிழ்த்தேனியாய் எனை மாற்றி
வகை செய்த அறிஞர்கள் மகிழ்கின்ற தமிழோடு இனிதாகவே,
இணைகின்ற தமிழ் வாழ்க தமிழ் வாழ்கவே
ஒரு கணநேரமதில் நம்மை உலகெங்குமே உலாவிடவே
வகை செய்யும் எளிதான புதிதான வாகனமாகவே
திகழ்கின்ற கணிணிதனை நாம் வாழ்த்தியே தமிழ் வளர்க்கவே
நாமெல்லோரும் கரம் சேர்த்து உலகாளுவோம்,

அன்புடன்
தமிழ்த்தேனீ
rkc1947@gmail.com
http://thamizthenee.blogspot.com
http://peoplofindia.net



Friday, February 13, 2009

பழமொழி-11. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை ஆஹா என்ன அருமையான பழமொழி
சொல்வழக்கு,


குற்றம் பார்க்க வேண்டும் ,குறை கண்டு பிடிக்க வேண்டும்
என்று நினைத்துவிட்டால்....நாராயணன் முதல்,ஏசு முதல் ,அல்லா வரையில்
காந்தி முதல் கண்ணதாசன் வரை,மதங்கள் முதல் மனங்கள் வரை
அன்னை முதல் தந்தை வரை,குற்றம் கண்டு பிடித்துக் கொண்டே இருக்கலாம்
குறை சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

ஒரு பெரிய வெள்ளைத்தாளில் ஒரு கருப்புப் புள்ளிபோன்றது குற்றம் ,குறைகள்,
எல்லாம் அவைதான் முதலில் கண்ணுக்குத் தெரியும்,
அந்த மனோ நிலைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்,
என்பதற்காக ஏற்படுத்தப் பட்ட பழமொழி இது என்று
தோன்றுகிறது

அது போன்ற தேவையில்லாத ,சற்றும் நன்மை பயக்காத
மனோ நிலைகளை சற்றே களைந்து நல்லதைப் பார்க்க
மனத்தை பழக்கிவிட்டால் நன்மை பயக்கும்

தரும புத்திரருக்கு கெட்டவர்களே கண்ணில்
படவில்லையாம் துரியோதனனுக்கு நல்லவர்களே கண்ணில்
படவில்லையாம், எல்லாவற்றிர்க்கும் மனோ நிலையே காரணம்
உலகில் ஒரு நல்லது இல்லாமல் கெட்டது இல்லை,ஒரு கெட்டது இல்லாமல்
நல்லது இல்லை

ஒரு முறை ஆதி சங்கரர் ஆழ்ந்த தியானத்தில் இருந்து கண் விழித்தார்,
அங்கு ஒரு பல்லி ( Lichard ) தலை கீழாக விழுந்து, நிமிர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது,அதன்மேல் பரிதாபப்பட்டு அதை நிமிர்த்திவிட்டுமீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார் ஆதி சங்கரர், மீண்டும் அவர் தியானம் கலைந்து பார்க்கையில்
அதே பல்லி புழு பூச்சிகளை பிடித்து உண்டு கொண்டிருப்பதைப் பார்த்து தெளிந்தாராம்
உலகில் ஒருவருக்கு செய்யும் பரோபகாரம்,அடுத்தவருக்கு செய்யும் தீமையாகவும் இருக்கலாம், ஆக கெடுதல் இல்லாமல் நல்லது இல்லை,நல்லது இல்லாமல் கெடுதல் இல்லை, இரண்டும் கலந்ததே வாழக்கை, அறியாமல் தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள், அறிந்து கொண்டே தவறு செய்பவர்களும் இருக்கிறார்கள்,

தவறே செய்யாத மனிதர்களைக் காட்ட முடியுமா..?முடியாது!

உங்களில் யார் உத்தமரோ அவர்கள் இந்தப் பெண்மணியின் மீது கல்லெறியுங்கள் என்று யேசுபிரான் கூறியதைப் போல,,

இயற்கையான காற்று வேகமாக அடிக்கும் போது, பல கட்டிடங்கள் வீழலாம்,அதே சமையம் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த கப்பலை கரை சேர்க்கவும் செய்யலாம், மழை அதிகமாகப் பெய்யும் போது பல இடங்களில் வெள்ளத்தினால் பலர் அடித்துச் செல்லப்படலாம்,பல இடங்களில் பயிர்கள் செழித்து வளரவும் கூடும், ஒரு இடத்தில் அதிக வெய்யிலாக கருதப்படுவது,மற்றொரு இடத்தில் குளிர்போக்கப் பயன்படலாம்,ஒரு இடத்தில் பற்றி எரியும் தீ பலவற்றை அழிக்கலாம், அதேபோல் அடுப்பில் எரியும் தீ பசியைப் போக்கலாம்,அதனால் ஒரு இடத்தில் குற்றம் என்று கருதப்படும் சில விஷயங்கள் சில இடத்தில் குற்றமாக கருதப் படாமல் இருக்கக்கூடும்,

கண்ணதாசன் எழுதாத பாடல்களா,தொடாத இலக்கியங்களா

அப்படிப்பட்ட மேதை ஒரு பாடலில்

"உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி "
கலகத்தில் பிறப்பதுதான் நீதீ
கலங்காதே மதி மயங்காதே”

என்று எழுதி இருக்கிறார்,என்ன பொருளென்று பார்ப்போம்

உலகத்தில் இருக்கும் ஜீவ ராசிகளில் பாதிப் பேர் திருடர்கள்
ஊமைகள் குருடர்கள், அதில் பாதி..அதாவது உலகத்தில் இருக்கும் ஜீவராசிகளில் மீதி இருக்கும் பாதிப்பேர் ஊமைகள் குருடர்கள், என்றும் பொருள் கொள்ளலாம்,
அல்லது திருடர்களில் பாதிப் பேர் ஊமைகள்,குருடர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்
ஆனால் அவர் எவ்வாறு பொருள் வரும்படி எழுதி இருக்கிறார் என்று பார்த்தால், உலகத்தில் திருடர்கள் சரி பாதி என்றால் ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும் திருட்டுத்தனம் பாதியும் நல்லகுணம் மீதியும் இரண்டும் கலந்தே இருக்கும்இருக்கும் என்று சொல்லுகிறார்

கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை
நான் என்று வைர முத்து எழுதியதைப் போல
திருடனும் நல்லவனும் கலந்தே மனிதன் இருக்கிறான்
என்று சொல்லுமாப் போல் எழுதி உள்ளார் என்று நினைக்கிறேன்
மனிதர்களின் மனதில் இருக்கும் திருட்டுத் தனங்கள் பாதி ,மீதி நல்ல எண்ணங்கள்,
பேச வேண்டிய விஷயத்தில், பேச வேண்டிய நேரத்தில்
பேசி உண்மையை சொல்லாமல் சிலர் ஊமைகளாகவும் , நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரத்தில்,தக்க நடவடிக்கை எடுக்காமல் ,கண்டும் காணாதது போல குருடர்களாகவும் மனிதர்கள் இருக்கிறார்கள்,எத்தைகைய துன்பம் வரினும் உண்மையைத் தவிற மற்றதை பேசேன்... என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு, மற்றவர்களுக்கு துன்பம் வருமென்றால்
அதைக் களையும் நோக்கில் அங்கு என் குரல் உரத்து ஒலிக்கும் என்னும் மனோ உறுதியுடன் செயல்படும் நல்ல குணம் பாதி, இப்படிக் கலவையான மனிதர்கள் இருக்கிறார்கள், அது மட்டுமல்ல ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இரண்டும் கலந்தே இருக்கிறது என்று பொருள் படும்படி எழுதி இருக்கலாம்...என்று சுட்டிக் காட்டவே அப்படி எழுதினார் என்று நாம் பொருள் கொள்ளலாம்.....

குருடு என்பது அறிவிலா...? ஊமை என்பது நியாயத்திலா..?
செவிடு என்பது நல்லவற்றைக் கேளாமை என்பதிலா

ஆக மொத்தம் உடல் ஊனங்களை விட மன ஊனங்கள்
கெடுதி பயக்கும் என்பதை நாம் புறிந்து கொள்ளலாம்
யாரிடத்தில் குற்றமில்லை...?
புத்தன் செய்தது சரியா ...இன்னும் விவாதங்கள் தொடர்கின்றன
தன்னை நம்பி வந்த பெண்ணை நிர்க்கதியாக விட்டு விட்டு
வேறு மார்கத்துக்குப் போனது சரியா என்று...?

கண்ணன் செய்தது அத்தனையும் சரியா ...?
நோக்கம் வேண்டுமானால் தர்மத்தை நிலை நாட்ட
என்று இருக்கலாம், ஆனால் அவன் செய்த காரியங்கள்
100க்கு 99 சரியானதல்ல என்று விவாதிக்கிறார்கள்
மஹா பாரதம் படித்தால் தெரியும்...?

ராமன் செய்தது சரியா மக்களே பேசுகிறார்கள்
கட்டிய மனைவியை யாரோ சொன்னதற்காக
தீக்குளிக்க வைத்தான் என்று....

யேசு ஏற்படுத்திய கிறிஸ்தவ மதத்துக்கும்,சமண மதத்தினருக்கும்
பௌத்தத்துக்கும், சர்ச்சை இருந்து கொண்டே இருக்கிறது
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டினால்
விளைவு எப்படி இருக்கும் என்பதை நாம் அறியோமா...?
என்றெல்லாம் விவாதிக்கின்றார்


அல்லாவைப் பற்றி நினைத்தால்
“முகம்மதுவின் எதிரிகளோடு நடந்த போரில் அப்துல் முத்தலிபின் உடல் சிதிலப்படுத்தப்பட்டது. ஹம்சாவின் இறந்த உடலை இழிவு படுத்தியதற்காக எழுபது எதிரிகளின் உடலை அவ்வாறு சித்திரவதை செய்வதாக சூளுரைத்தான் முகம்மது. பிறகு ஏதோ தோன்றி, ஒரே ஒரு சடலத்தை அவ்வாறு சிதிலப்படுத்தினால் போதும் என்று சொல்லிக்கொண்டான்.
அப்படி சொல்லிக்கொண்டதுதான் மேற்கண்ட வரி.
“ அதனை அல்லா சொன்னார் “என்று சொல்லி, அது குரானில் இருக்கிறது. என்கிறார்கள்
இதன் படி முஸ்லீம்கள் இறந்த எதிரிகளை, அவர்கள் இஸ்லாமிய கும்பலில் இல்லாமல் இருந்தால் ,அந்த உடல்களை இழிவு செய்ய அனுமதி கிடைக்கிறது.இந்த விஷயமும் விவாதத்தில் இருக்கிறது

திரு கண்ணதாசன் ஒரு பாடலில்

”மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்” என்று எழுதி இருக்கிறார்

யோசித்துப் பார்த்தால்
ஆண்மயில்தான் தோகை விரிக்கும்

அப்படியானால் மயிலாள் என்று எப்படி எழுதினார் கண்ணதாசன்

ஆக யார் குற்றமில்லாதவர் .... யாருமில்லை
ஆகவே குற்றங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாலே
குணங்கள் மறைந்து விடும், குணங்கள் மறைந்து விட்டாலே
உறவுகள் குறைந்து விடும்
அதற்காகத்தான் சொன்னார்கள் பெரியவர்கள்
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்று


அன்புடன்
தமிழ்த்தேனீ



!-- ADDTHIS BUTTON BEGIN -->

Thursday, February 12, 2009

பழமொழி -10. சாண் ஏறினால் முழம் வழுக்கும்

’சாண் ஏறினால் முழம் வழுக்கும் “
என்ன ஒரு அருமையான முது மொழி


எண் சாண் உடலுக்கு சிரசே ப்ரதானம்
அவரவர்க்கு அவரவர் கை அளவே ஒரு சாண் என்பது
அவரவர் கையாலே அளந்து பார்த்தால் அவரவர் உடல்
எட்டு சாண் அளவைக் கொண்டதாக இருக்கும்
அவர்களின் முழங்கையின் அளவே முழம் என்று சொல்லுவார்கள்
அதனால்தான் இப்போதும் பூக்காரிகள் தங்களுடைய முழங்கையின் அளவையே ஒரு முழம் என்று அளந்து பூ விற்கிறார்கள்
இன்னும் சற்று யோசித்து சிறு பெண்களை முழம் போடவைத்துவிட்டு கொஞ்சம் ஒதுங்கியே உட்கார்ந்து பணத்தை
மட்டும் வாங்கி மடியில் சொறுகிக் கொள்ளுவார்கள்
அவர்களின் கணக்குப்படி சிறு பெண்ணின் முழங்கை அளவு
பூ அளந்து கொடுக்கும்போது பூ வாங்குவோருக்கு
கண்ணில் முழம் அளத்தல் பட்டாலும் பெறும் அளவு
குறைவாகவே இருக்கும் அதனால் லாபம் அதிகம் வரும் என்பது அந்தப் பூக்காரிகளின் திறமையான கணக்கு


என்ன ஒரு கணக்கு இறைவனின் கணக்கு
சரியான விகிதாசாரத்திலே அமைக்கப்பட்ட படைப்புகள்
இதை ஆராய்ந்து சொல்லிய பெரியோர்கள் எவ்வளவு அறிவாளிகள்....?

முன்பெல்லாம் வழுக்கு மரம் என்று ஒன்றைத் தயார்
செய்வார்கள், அந்த வழுக்கு மரத்தை நன்றாகத் தேய்த்து
பிசிறில்லாமல் வழு வழு வென்றிருக்கும்படி செய்வார்கள்
அந்த வழுக்கு மரத்தில் விளக்கெண்ணையை நன்கு பூசுவார்கள்
பிறகு அந்த மரத்தின் உச்சியில் ஒரு பண முடிப்பை
கட்டுவார்கள், அதன் பிறகு அந்த வழுக்கு மரத்தை
ஒரு குறிப்பிட்ட இடத்தில் செங்குத்தாக நடுவார்கள்
அந்த மரம் ஒரு குறிப்பிட்ட உயரத்தைக் கொண்டிருக்கும்

மக்களின் மனோ உறுதியை சோதிக்க பந்தயம் கட்டுவார்கள்
யார் அந்த வழுக்கு மரத்தில் ஏறி அந்தப் பணத்தை
எடுக்கிறார்களோ அவர்களுக்கே அந்தப் பணம் என்று,
மக்களுக்கு விடாமுயற்சியை,மனோதிடத்தை, ஏற்படுத்த
இது போன்ற போட்டிகள் வைப்பார்கள்
பலர் அந்த வழுக்கு மரத்தில் ஏறி தங்களின் விடா முயற்சியை
மனோதிடத்தை தங்களே பரிசோதித்துக் கொள்ளும் முறையில்
முயற்சி செய்வார்கள்,
அப்படி அந்த வழுக்கு மரத்தில் ஏற முயற்சி செய்பவர்கள்
தங்கள் உள்ளங் கால்களாலும், உள்ளங் கைகளாலும்
உள்ளத்தில் உறுதியோடும் ஏற முற்பட்டாலும் அந்த வழுக்கு மரத்தின் இயல்புக்கு ஏற்ப அது வழுக்கிக் கொண்டே இருக்கும்
உள்ளங்கைகளால் பிடித்து அந்த முயற்சியை அவர்கள்
செய்யும் போது உள்ளங்கையின் அளவாகிய சாண்
என்னும் அளவு அந்த மரத்தில் ஏறும்போது
அது ஒரு சாண் ஏறுதலாகிறது,மேலும் முழங்கையின் பிடிமானத்தை துணைக்கு அழைத்துக் கொள்ளும் அவர்களின் உடல் வழுக்கும் போது முழங்கையின் அளவாகிய ஒரு முழம் அளவுக்கு கீழே இறங்கி விடுகிறது,ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும் அதன் வழுக்கும் தன்மையினால் அவர்கள்வழுக்கி கீழே இறங்கும் அளவைப் பார்த்தால் ஒவ்வொரு முறையும் ஒரு முழம் அளவுக்கு
கீழே இறங்கி விடுவர்,மீண்டும் முயற்சி செய்து ஒரு சாண் ஏறுவர்
அவ்வளவு கடினமான முயற்சியிலும் வெகு சிலரே மரத்தின் உச்சி வரை ஏறி தான் எண்ணிய காரியத்தை முடிப்பர்

ஆக சாண் ஏறினால் முழம் வழுக்கினாலும்
மீண்டும் மீண்டும் முயலவேண்டும்

அன்புடன்
தமிழ்த்தேனீ


பழமொழி -9 பெரியதா காப்பான் பெரியதா…?

என்ன ஒரு வினாச்சொல் வழக்கு
ஆச்சரியமாக இருக்கிறது

யோசித்துப் பார்த்தால் அந்தக் காலத்துப் பெரியவர்கள்
எவ்வளவு யோசித்து ஒவ்வொரு வார்த்தையையும் சொல்லி இருக்கிறார்கள் என்கிற ஆச்சரியமே மிஞ்சுகிறது

மா,பலா வாழை என்று ஒரு சொல் அடுக்கு உண்டு
பழங்களில் முதன்மையானது மாம்பழம்,
அடுத்து பலாப்பழம், அடுத்து வாழைப்பழம்
மூன்றுமே மருத்துவ குணமுள்ள இனிப்பான சுவையானபழங்கள்
ஆங்கிலத்திலே (riverse engineering) என்று சொல்லுவார்கள்
ஒரு யந்திரத்தை கட்டுமானம் செய்ய அதே போன்ற ஒரு யந்திரத்தை ஒவ்வொரு பாகமாகப் பிரித்து தலைகீழாக எண்ணிக்கை வரும்படி அடுக்கி வைத்துவிட்டு
மீண்டும் அதே வரிசையில் அதை கட்டுமானம் செய்வார்கள்
அது போல நாம் நம்முடைய முன்னோர்கள் சொன்னதையெல்லாம் ஒவ்வொரு சொல்லாக எடுத்து, அவற்றை பிரித்து அடுக்கி வைத்துவிட்டு,
மீண்டும் கட்டுமானம் செய்ய ஆரம்பித்தால்தான் தெரிகிறது
அவர்கள்: அதற்குள்ளே எவ்வளவு நுணுக்கமான விஷயங்களை
பொதிந்து வைத்திருக்கிறார்கள் எனபது

மாம்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு வரும் என்று சொல்லுவார்கள்,ஆனால் அந்த மாம்பழத்தின் உள்ளே இருக்கும் கொட்டையின் உள்ளே இருக்கும் மாம்பருப்பை எடுத்து உண்டாலே அதுவே சிறந்த மருந்து வயிற்றுப் போக்குக்கு
அடடா கனிவையும் சுவையையும் வைத்து அதனுள்ளே மருந்தையும் வைத்த இறைவன் எவ்வளவு பெரியவன்


வண்டு துளைத்த பழம் இனிப்பாக இருக்குமென்று சொல்லுவர்
ஆனால் துளைத்துக் கொண்டு உள்ளே சென்று மாட்டிக் கொள்ளும் வண்டு ஒரு கள்ளன் ,அந்தக் கனியின் சுவையைக் கூட அறிய முடியாமல் , சுவைக்க முடியாமல் மாங்கொட்டையின் உள்ளே மாட்டிக் கொண்டு அவதிப்படுகிறது
பூ மூடிக் கொண்டு காயாகி பின் கனியாகி,அதையாராவது உண்ணும்போதுதான் வெளியே வரமுடியும்,அதனால் கள்ளனாய் இருப்பதை விட காப்பனாய் இருப்பதே மேல்


அதே போல மேலே முள்ளாக கரடு முரடாக இருக்கும் பலாப் பழத்தின் சுவை நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை
ஆனால் அந்தப் பலாச்சுளையின் உள்ளே இருக்கும் பலாக் கொட்டை யை அப்படியே சாப்பிட்டால் தொண்டையை அடைத்துக் கொண்டு மூச்சுகூட விடமுடியாமல் அவதிப்பட நேரும்,. ஆனால் அதே பலாக் கொட்டையை வேக வைத்து
நாங்கள் சிறு வயதில் இருக்கும்போது கட்டை அடுப்பில் சமைப்பார்கள், எரிகின்ற கட்டை அடுப்பின் உள்ளே இந்தப் பலாக்கொட்டைகளை போட்டு விடுவோம்
அடுப்பை அணைத்த பின் சற்று பக்குவமாக
வெந்த அந்தப் பலாக் கொட்டையை தோல் உரித்து
உண்போம் அது பலாச் சுளையைவிட இனிமையாக இருக்கும்
அது மட்டுமல்ல அந்தப் பலாக்கொட்டை பல வியாதிகளுக்கு மருந்து என்று சொல்லுவர்

அடுத்தது வாழை , வாழைப்பழமே மருந்து ,
வாழைதண்டு சாற்றினை பாம்பு கடி விஷத்துக்கு முறிவாக அளிப்பர், வாழைப்பட்டையில் பாம்பு கடித்தவர்களை படுக்க வைப்பர்,விஷ முறிவான இந்த வாழைமரம் இருந்தால்தான் கொண்டாட்டங்களே களை கட்டும்,அதே போல் வாழைப் பழம் இருந்தால்தான், விருந்தே களைகட்டும்,தலை வாழை இலையில் முதலில் வாழைப்பழமும் சர்க்கரையும் போட்டுவிட்டு ,பிறகுதான் மற்ற உணவு வகைகளை பறிமாறுவர்,வாழைப்பழம் நம்முடைய உள் உறுப்புகளின் இயக்கத்தை எளிதாக்குகிறது, இறைப்பையின் இயக்கத்தை துண்டுகிறது உண்ணும் உணவுகள் செரிக்க உதவுகிறது
அந்த வாழை மரத்தை ஆராய்ந்தால்,வாழைக் குருத்து முளை விட்டு பின் வளர்ந்து மரமாகி குலைதள்ளும் பருவத்திற்கு சற்றுமுன்பாக பெரிய பெரிய இலைகள்வருவது நின்று போய் ஒருநாள் ஒரு பளபளப்பான ஒரு சிறு இலை தோன்றும் அதைக் " கன்னாடி இலை " என்பர் அந்தக் கன்னாடி இலை தோன்றிய பிறகுதான்குலைவிடும், அந்தக் குலையை சிறியதாக இருக்கும்போது அந்தக் கன்னாடி இலை பாதுகாக்கும்
பிறகு வாழைக் குலை பெரியதாக ஆகும்போது,அந்தக் கன்னாடி இலை அந்த வாழைக்குலைக்கு வழிவிட்டு ஒதுங்கி இருக்கும் வாழையடி வாழையாய் குருத்துகள் அந்த வாழை மரத்தின் கீழே தோன்றிக் கொண்டே இருக்கும், ஒரு வாழை மரம் வைத்தாலே அது தானாகவே வாழைத்தோப்பாகும் ஒரு நல்ல பெண்மணி ஒருத்தி வந்தாலே எப்படி குலம் தழைக்குமோ அது போல,

நம்மை வளர்க்கும் தாய் எப்படி நம்மை ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் வளர்த்து நாம் பெரியவனானவுடன் நம் சுகத்துக்காக ,நம் மகிழ்ச்சிக்காக, சற்றே ஒதுங்கிக் கொள்கிறாளோ அதுபோல கன்னாடி இலை ஒதுங்கிக் கொள்ளும்
பிறகு குலையில் வாழைப்பூ தோன்றும் அந்த வாழைப்பூவில் உள்ளிருக்கும் தனித்தனியான ஒவ்வொரு மடலும் ஒரு கொத்து பூக்களை பாதுகாத்து அவை முற்றி காய்களானவுடன் மடல்கள் ஒதுங்கிக் கொள்ளும்,இப்படி ஒவ்வொரு மடலும் இதழ் விரிந்து காப்பானாக இருந்து ஒதுங்க வேண்டிய நேரத்தில் ஒதுங்கிக் கொள்ளும்
ஆனாலும் கடைசியாக காயாக முடியாத சில சிறு பூக்களை கடைசீ வரையில் மடல்கள் மூடிக் கொண்டு பாது காத்துக் கொண்டிருக்கும் அந்த அமைப்பை நாம் வாழைப் பூ என்கிறோம் மனிதன் எப்படி வாழவேண்டும் என்று அறிவுறுத்துமாறு
வாழ்க்கைப்பாடம் நடத்தும் ஒவ்வொரு வாழை மரமும் காப்பானே, என்பதில் ஐய்யமே இல்லை

பிறகு அந்த வாழைப்பூவை மடல் பிரித்து அந்த
சிறும் பூக்களை கொத்தாக எடுத்து அரிந்து அதை சமைத்து
நாம் உண்ணுவோம், அப்படி சிறும் பூக்களை அரியும் போது
ஒவ்வொரு சிறும் பூக்களையும் கூர்ந்து கவனித்தால்
சுற்றிலும் அந்த சிறும் பூக்களின் பாகங்களும்
நடுவில் தலை கொழுத்து ஒரு மொட்டுமாய் இருக்கும்

அந்த மொட்டுடன் கூடிய தண்டை கள்ளன் என்று சொல்லுவார்கள் , அது உடலுக்கு கெடுதியானது ஆகவே அந்த கள்ளனை நீக்கி விட்டு சமைப்பர்
அதைக் காட்டித்தான் உள்ளே கள்ளன் ஒளிந்திருக்கிறான்பார் என்று என் அன்னை கூறுவார்கள்

கள்ளன் பெரியதா காப்பான் பெரியதா

ஒரு வாழைப்பழத்தை அளித்து யாருக்கும் தெரியாமல் உண்ணச்சொல்லி ஒரு குரு சொன்னார்

திருஞான சம்பந்தர்

தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதிசூடி
காடுடைய சுடலை பொடி பூசியென் உல்ளம் கவர் கள்வன்

"நாமெல்லாரும் கள்ளர்கள்
காப்பான் இறைவன் ஒருவனே
அதனால் காப்பானிடம் காட்டிக் கொள்ளாமல்
நாம் ஒளிய இடமே கிடையாது என்பதை உணராமல்
நம்மின் உள்ளுக்குளே ஒளிந்திருக்கிறோம் "

கள்ளனே காப்பானாகவும் காப்பானே கள்ளனாகவும்

இருந்த மாயக் கண்ணனைக் கேட்டால்தான்
தெரியும் கள்ளன் பெரியதா காப்பான் பெரியதா என்று...? திருமங்கை மன்னன் கொள்ளையடித்தான் கோயில் கட்டினான்
கோயிலில் இருக்கும் இறைவனை விட திருமங்கை மன்னன் பெரியவன் எப்படி என்று கேட்டால் உள்ளிருக்கும் புதையைலை காப்பாற்றி வைத்திருக்கும் தகரப் பெட்டியாய் இருந்தாலும் அப்பெட்டி இல்லையென்றால் புதையலே காணாமல் போய்விடுமல்லவா அது போல , இறைவன் தங்கமென்றாலும் திருமங்கை மன்னன் போன்றவர்கள் தகரமென்றாலும் ,இறைவனே சொல்கிறான் தன்னை விட தன் அடியார்களே மிக உயர்ந்தவர்கள் என்று அது போல காப்பவன் தான் பெரியவன் அது இவ்வுலகத்தையே காக்கும் இறைவனையே காப்பவன் எவ்வளவு பெரியவன்

அதனால் கள்ளன் பெரிதா காப்பான் பெரிதா என்னும் கேள்விக்கு
காப்பானே பெரியவன் என்று பொருள் விளங்குகிறது அல்லவா?

அன்புடன்
தமிழ்த்தேனீ


பழமொழி- 8. இக்கரைக்கு அக்கரை பச்சை

இக்கரைக்கு அக்கரை பச்சை
இது ஒரு அருமையான சொல்லாடல்
முதுமொழி,அல்லது பழமொழி


உலகிற்கே மருத்துவம் சொல்லிக்கொடுத்தவர்கள் நம்மவர்கள்
சித்த மருத்துவர்கள்,நம் மூலிகைகள் உலகிற்கே நோய் தீர்க்கும் பச்சிலைகள் ஆகும் ஆனால் அது நம் கண்ணில் படுவதில்லை
இயற்கை மூலிகைகள் சிறந்த நோய் நிவாரணிகள் என்று பல சித்தர்களும் யோகிகளும் உணர்த்தி இருக்கின்றனர்
சித்தர்களால் மூலிகைகளின் மகத்துவம் தெரிந்து கண்டு பிடிக்கப்பட்ட்துதான் சித்த மருத்துவம்
அது மட்டுமல்ல பல கலைகள் நம்மால் கைவிடப்பட்டு அன்னிய நாடுகளால் கவரப்பட்டு முதன்மை பெற்ற கலைகளே உதாரணமாய் சித்தமருத்துவம் ,யோகம், தியானம், தவம்,
இன்னும் பல, கராட்டேஎன்னும் கலை கராட்டே என்றால் சீன மொழியில் வெறும் கை என்று பொருள் ,முதன் முதலில் வெறும் கையையே ஆயுதமாகப் பயன் படுத்த முடியும் என்னும் கலையைக் கண்டு பிடித்தவர் நம் நாட்டினரே,
பல இதிகாச புராணங்களில் ஒருவரை வாழ்த்துவதற்கோ
அல்லது சாபம் அளிப்பதற்கோ வலது உள்ளங்கைகளையே பயன் படுத்தினர், மேலும் தொடு வர்மம் தொடாமல் தூர இருந்தே வெறும் கைகளைக் காட்டியே எதிராளியை செயலிழக்கச் செய்தல் ,அல்லது வெறு கையில் உள்ள விரல்களைப் பயன்படுத்தி எதிராளியின் நரம்புகளில் வலியை ஏற்படுத்தி எதிரே இருப்பவரின் கைகளையோ கால்களையோ அல்லது மொத்த இயக்கதையோ நிறுத்தமுடியும் என்று நிரூபித்தவர்கள் நம் முனிவர்கள், யோகிகள், சித்தர்கள் என்பது சரித்திரம்
என்றால் வெறும் கை, களரி யுத்தம்,மல்யுத்தம் wwwf,
வான சாத்திரம், மனோதத்துவம் , பொதுவுடமை, மனிதம், நேசம்
தொடு வர்மம், படு வர்மம், யோகம் தியானம், போன்ற அனைத்துக்குமே தாய் வீடு இந்தியா,
பொதுவுடமைக் கொள்கைகளை கடைப்பிடித்தவர் வள்ளுவர்

செல்விருந்தோம்பி வரு விருந்து காத்திருப்பார்
நல் விருந்து வானத்தவருக்கு ,

அதிரூப சுந்தரிக்கும் அழகில்லாப் பெண்களுக்கும் அமைப்பெல்லாம் ஒன்றேதான் அளவில்தான் வேறு பாடு
ஆனால் நாம் நம் மனைவியை விட அவர்கள் அழகென்று நினைப்போம்,நம் இயல்பு அது,

70 ஆண்டுகளுக்கு முன்னால் நம் தேசப்பிதா சொன்னதைத்தான் இன்று 2009ம் ஆண்டு திரு ஒபாமா சொல்கிறார்
ஆனால் நாம் நம் காந்தியை மதிக்கவில்லை
ஒபாமா சொன்னால்தான் காதிலேயே வாங்குவோம்


பசுமையும் ,பனி மேகங்களும்,கானலும் ,நாம் இருக்கும் இடத்தில்
தெரியாது....இங்கிருந்து பார்த்தால் அங்கிருப்பது போலவும்
அங்கிருந்து பார்த்தால் இங்கிருப்பது போலவும் தோன்றும்

ஆனால் நமக்கு எப்போதுமே
இங்கிருக்கும் பச்சை தெரிவதே இல்லை
அதாவது தோட்டத்துப் பச்சிலை நம் கண்ணுக்கு தெரியாது
பச்சிலை மருத்துவர் சொல்லும்போதுதான் அந்தச் செடி மூலிகை என்றே நமக்குத் தெரியும்
எப்போதுமே நமக்கு ஒரு குணமுண்டு நம்மவர் அறிவாளியாய் இருந்தாலும் ,அவர்கள் சொல்லும் போது மதிக்காத
நாம் அயல் நாட்டார் சொன்னால் உடனே மதிப்போம்
அப்படி ஒரு குணம் நமக்கு இருக்கிறது

வெளி நாட்டுக்கு சென்று அங்கு எங்கேயும்
குப்பையை போட முடியாமல் பத்திரமாக வைத்திருந்து
அயல் நாட்டில் கடைப்பிடித்த அத்தனை நற்குணங்களையும் தூக்கி எறிந்துவிட்டு, விமானம் மும்பையில் வந்து
இறங்கியவுடனே கண்ட இடத்தில் அதே குப்பையை போட்டு போட்டுவிட்டு செல்பவர்கள் தாமே நம்மில் பலர்
தண்டனை கிடைக்குமென்றால் ஒரு மாதிரி தண்டனை கிடைக்காது என்கிற தைரியமிருந்தால் ஒரு மாதிரி நடப்பவர் நம்மில் பலபேர்

சந்தர்ப்பம் கிடைக்காமையினால் தவறு செய்யாதவனை விட
சந்தர்ப்பம் கிடைத்தும் தவறு செய்யாதவன்தான் உண்மையான நேர்மையாளி.....
வெளிநாட்டிற்கு கொடுக்கும் அதே மரியாதையை நம் நாட்டுக்கும் கொடுத்தால்எவ்வளவு நன்மை நடக்கும், நாம் வெறுமனே இருந்து கொண்டு அரசாங்கத்தை மட்டும் குறைகூறிக் கொண்டே காலம் தள்ளாமல் நம்முடைய நாட்டையும் சுத்தமாக வைத்துக்
கொள்ளலாம் அல்லவா, நமக்கு அயல் நாட்டைப் பார்த்தால் அப்படி ஒரு ப்ரமிப்பு,நம் நாட்டில் இல்லாத அழகுகளா,இயற்கை கொஞ்சும் சுற்றுலாத் தலங்களா,...?

ஆனால் அவைகளை பராமரிக்க நாமும் முயல மாட்டோம்
நம் அரசாங்கமும் முயலாது, இக்கரைக்கு அக்கரை என்றுமே பச்சைதானே, இக்கரையின் பச்சை ,பசுமை ,நன்மை
எதுவுமே நம் கண்களில் படாது

திரைஉலக இயக்குனர் ஒரு திரைப்படத்தில் கேட்பார்,
உங்களுக்குத் தெரிந்த பத்தினிகளின் பெயரை சொல்லுங்கள்
என்று ஆளாளுக்கு நளாயினி, கண்ணகி,என்றெல்லாம் சொல்லுவர், பாக்யராஜ் கேட்பார் உங்களுக்கு பத்தினி என்றவுடன்
உங்கள் மனைவியின் பெயர் நினைவுக்கு வரவில்லையா என்று
அது போல நமக்கு நம்மிடம் உள்ள அனேக திறமைகள்
தெரிவதில்லை அப்படியே தெரிந்தாலும் அவைகளை நாம் மதிப்பதில்லை, தமிழ் பேசி நடிக்க நம்மிடம் இல்லாத
தமிழ் நடிகைகளாஆனால் மும்பையிலிருந்து அல்லது அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்து தமிழே பேசத்தெரியாத அவர்களுக்கு, உயர்தர உணவகத்தில் அறை போட்டுக் கொடுத்து
தமிழ் சொல்லிக் கொடுத்து,தமிழை அவர் மொழியில் அப்படியே எழுதிக் கொடுத்து பேச வைத்து திரைப்படம் எடுத்தால்தான்அது பெரிய தகுதி என்று நம்முடைய இயக்குனர்கள் நினைக்கிறார்களே அதுபோல, நம்மை மதிக்க நாம் எப்போது கற்றுக் கொள்கிறோமோ, அப்போதிலிருந்து நம் நாடு இன்னும் வளமாக
முன்னுக்கு வரும் என்பதில் ஐய்யமில்லை, இவற்றை சுட்டிக் காட்டத்தான் வருங்காலத்தை மனதில் வைத்து அன்றே தீர்க்க தரிசனமாக இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்லி வைத்தார்களோ..?

அல்லது நதியின் இரு கரைகளில் இருக்கும்
இக்கரையின் மேல் நாம் அக்கரை கொண்டு கவனித்தால்
அதாவது பயிர் செய்தால் அந்த விவசாயம் மூலமாக
அக்கரையும் பசுமையாகும் என்று கூட சொல்லி இருக்கலாம்
நம்முடைய நாகரீகமே நதிக்கரையில் தோன்றியவைதானே
ஆகவே இக்கரையின் மேல் அக்கரை வைப்போம்
முதலில் நம் நாட்டின் வளத்தைப் பற்றி யோசிப்போம்
நம்மால் முடிந்த அளவு நம் நாட்டுக்காக ஏதேனும் அக்கரையாகசெய்வோம்
இக்கரை பச்சையாகும் ,பசுமையாகும்
rkc1947@gmail.com, http://thamizthenee.blogspot.com ,http://peopleofindia.net

அன்புடன்
தமிழ்த்தேனீ




பழமொழி -7. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்

“ ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் “

கேட்டாலே சிந்தனையை தூண்டும் பழமொழி இது

கூத்தபிரான் ,சுடலைமாடன் நடராஜன்,தில்லைக் கூத்தன்அம்பலவாணன் உயிர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்ஆத்மா பரமாத்மா ஊழிக்கூத்தாடிய நேரம் எப்போது எதனால் ஊழிக்கூத்தாடினான்அவனுடைய ஆட்டம் நின்றால் ப்ரபஞ்ச சுழற்சியே நின்று போகும் அம்பலத்தில் ஆடுகின்ற ஞானக் கூத்தன்ஊர் இரண்டு பட்டால் ,அதாவது ஊர்மக்கள்இரண்டு பட்டால் ஒற்றுமை குறைந்து விரோதம் அதிகரித்து அதனால் கலகம் வரும் நிலை ஏற்பட்டால்கூத்தாடிக்கு கொண்டாட்டம்ஊர் மக்கள் இரண்டு படும்போது கூத்தாடிக்கு எப்படிகொண்டாட்டம் வரும் ....?வரும் ….!!!!!! கூத்து என்பது நாடகம் என்னும் கலையின் பிறப்பிடம்........ கூத்தாடிகள் தங்களுடைய கலைகளால்மக்களின் கவலை மறந்து மகிழ்வாக இருக்க வைப்பர்மக்களின் கவலை போக்கும் மருந்தாக கூத்து என்னும்கலை பயன்பட்டு வந்தது,....ஊர் மக்கள் மன வேறு பாடுகள் கொண்டால்இரண்டு ஊருக்கும் பொதுவாக இருக்கும் பெரியவர்கள்கூத்து என்னும் கலைக்கு ஏற்பாடுகள் செய்வர்அங்கு இரண்டு ஊர் மக்களும் ஒன்று கூடுவர்அப்படி ஒன்று கூடும் போது இரண்டு ஊர்ப் பெரியவர்களும்மக்கள் மகிழ்வாக இருக்கும் நேரம் பார்த்து,பல, அறிவு பூர்வமான ,மக்கள் ஒப்புக் கொள்ளக்கூடிய ,சமாதானங்களைக் கூறி இரண்டு ஊர்மக்களின் விரோத மனப்பான்மையைப் போக்கினர்அதற்கு கூத்து என்னும் கலை பயன் பட்டதால்ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு ஒரு கூத்து நடத்த வாய்ப்பு வருமல்லவா.அதைத்தான் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று பெரியவர்கள் சொல்லி இருப்பார்களோ ...?" விஞ்ஞானமும் மெய்ஞானமும்தண்டவாளங்களின் இரு இணை இரும்புகள் போல் என்றும் சந்திக்காதுஆனால் அவைகளை இணைக்கும்நடு மரப் பட்டைகள் என்கிற உறவுப்பாலம்,,கீழே தாங்குதற்கு கருணை உள்ளம்கொண்ட பூமி , அன்பு பாசம் நேசம் போன்றஇணைப்புகள், இவைகள் இல்லாது போயின் மெய்ஞானமும் சரி விஞ்ஞானமும் சரிவலுவிழந்து போய்விடும் "இவற்றை உணர்ந்து பெரியவர்கள்இரண்டு தண்டவாளங்களை இணைக்கும்நடு மரப்பட்டைகளாக உறவுப் பாலமாகசெயல்பட்டிருக்கிறார்கள்மனிதாபிமானத்தை ,அன்பை, பாசத்தைஒற்றுமையை வளர்த்திருக்கிறார்கள்ஆனால் ...இப்போது பல கூத்தாடிகள் தாங்கள் கொண்டாட்டமாக இருப்பதற்காகவே,இனம் ,மொழி, மதம் சாதி ,போன்ற பலவகையான ஆயுதங்களைப் பயன் படுத்தி ஊர் மக்களை,இரண்டு படவைக்கிறார்கள்கலகம் செய்கிறார்கள்,நாமும் அவர்களின் பேச்சைசெவி மடுத்து அடித்துக் கொண்டு சாகிறோம்,கூத்தாடிகள் அந்தக் காலத்தில் பல நல்ல கருத்துக்களை மையமாக வைத்து மக்களை அறிவுறுத்திநல் வழிக்கு அழைத்துச் சென்றார்கள்இந்தக் காலத்தில் அதே கூத்தை ,நாடகத்தை ,திரைப்படத்தை வைத்து மக்களை இரண்டு படுத்தி கூத்தாடிகள் குளிர் காய்கிறார்கள்,கொண்டாட்டமாக இருக்கிறார்கள்,ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று நன்மைக்காக பெரியோர்கள் செய்து வைத்தஅதே பழ மொழியைதங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டுமக்களின் விரோதங்களைத் தூண்டி விட்டுமக்கள் அடித்துக் கொண்டு இருக்கும்போது நாட்டின் செல்வங்களை சத்தமில்லாமல் களவாடி தங்களுக்குசேர்த்துக் கொள்கிறார்கள்இவை புறியாமல் மக்கள் மாற்றிமாற்றி வேறு வழியில்லாமல் மீண்டும் அவர்களுக்கேவாக்குகளை அளித்து அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்வாழும் மக்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்என்று உணராமல் பல கோடிகளை தங்கள் வாரிசுகளுக்கு சேர்த்து வைத்துவிட்டு , செல்கிறார்கள்அந்த வாரிசுகள் கஷ்டப் பட்டு சம்பாதித்திருந்தால்அந்தப் பணத்தின் அருமை தெரியும் இலவசமாக வந்ததால் அந்தப் பணத்தைக் கொண்டுஅதையும் கெடுத்து தாங்களும் கெட்டுப் போய்வன் முறைகளுக்கு வழி வகுக்கிறார்கள்இவையெல்லாம் நல்ல வழிகள் அல்ல என்று உணர்ந்தஅக்காலத்துப் பெரியோர்கள் முன் உதாரணமாக தங்களுடைய சொத்துக்களை நாட்டுக்கு தானமாக அளிக்க முன் வந்தனர்மக்களின் நல் வாழ்வே, ஒற்றுமையே நாட்டின் பெரும் பலம் என்று உணர்ந்து செயல் பட்டார்கள்மக்களுக்கும் ஒற்றுமையாய் வாழ்வது அவசியம் என்று உணர்த்தினார்கள்......இதை நன்கு உணர்ந்துதான் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்என்னும் முது மொழியை அளித்து விட்டுச் சென்றனரோ...?

அன்புடன்
தமிழ்த்தேனீ


பழமொழி -6. வட்டிக்குவாங்கி அட்டிகை பண்ணு,அட்டிகையைவிற்று வட்டியைக் கட்டு

பழமொழி ஆய்வு 6 :-

வட்டிக்கு வாங்கி அட்டிகை பண்ணு
அட்டிகை வித்து வட்டியைக் குடு

இந்த பழமொழியை கேட்டவுடன் சிரிப்புதான் வருகிறது'
நாமெல்லாரும் இதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம்

நமக்கு அடிப்படை தேவைகளே
இருக்க இடம் , உண்ண உணவு ,குடிக்கத் தண்ணீர்
இந்த மூன்றுக்குமே நாம் போராட வேண்டியிருக்கிறது
நம் அரசியல் அமைப்பு நமக்குத் தரும் வசதிகள்
அப்படி இருக்கின்றன,ஆனால் தற்போது நாமெல்லாரும் நிறைய சம்பாதிக்கிறோம்
நிறைய செலவழிக்கிறோம்,ஆனால் அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் சம்பாதித்ததும் குறைவு, செலவழித்ததும் குறைவு
பெரும் பான்மையான மக்கள் பேராசை இல்லாமல் இருந்தார்கள்
அப்படி இருந்தும் சிலபேர் பேராசைப் பட்டதால்
வந்த சொல் வழக்கு இது


கண்ணை விற்று சித்திரம் வாங்கியதைப் போல என்று சொல்லுவார்கள்,
அது போல அந்தக் காலத்தில் பேராசைப்பட்டவர்கள்
பொன் நகை போட்டுக் கொள்ளுதல் அந்தக் காலத்தில் மிகவும் மதிப்பான விஷயம்,
அந்தக் காலத்தில் என்ன ....?
இந்தக் காலத்திலும் அதே நிலைமைதான்
அதற்காக வட்டிக்கு பணம் வாங்கி அட்டிகை
என்னும் அலங்கார நகையை வாங்குவார்கள்
ஒட்டியாணம் என்னும் நகை இடையை அலங்கரிக்கும்
கைகளில் மோதிரங்கள், கழுத்தில் தங்க முகப்படாம்கள்
காதிலே வைரத் தோடுகள் எல்லாம் அணிந்து கொண்டு
மினுக்கினால்தான் அது மதிப்பு என்று நினைத்துக் கொண்டு
விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் என்னும் பழமொழியை
மதிக்காமல் அளவுக்கு அதிகமாக தகுதி உணராமல் வீண் செலவு
செய்துவிட்டுபிறகு அந்த வலையிலிருந்து மீள முடியாமல் அவதிப்படுவார்கள்
மக்களின் இந்தப் பேராசையை பயன் படுத்திக் கொண்டு
சில பேர் தங்கள் கையிலிருக்கும் பணத்தை
வட்டிக்கு ஆசைப்பட்டு பலபேருக்கு கொடுத்து
அனியாய வட்டி வாங்கி கொழுத்த பணக்காரகளாக
ஆவதற்கு சுலபமான வழியாக மக்களின் இந்த வேண்டாத
குணத்தை உபயோகித்தனர்

மக்களின் பேராசை என்னும் வேண்டாத உணர்வு
எந்த அளவு அவர்களை ஆட்டி வைத்திருக்கிறது
என்று நமக்குப் புறிய அளவு கோலாக இந்தப் பழமொழி
பயன்படுகிறது

இதே உணர்வு இப்போதும் நம்மை அழித்துக் கொண்டிருக்கிறது
என்பதில் சந்தேகமே இல்லை...!
இப்போதெல்லாம் நம் செலவு செய்ய பணம் கூடத் தேவையில்லை
ஒரு சிறு அட்டை போதும்
ஆனால் பணத்தை திரும்ப செலுத்த பணம் வேண்டும்
இந்த விஷயத்தை அனேகமாக அனைவரும் மறந்தாற்போல
அட்டையை வைத்து செலவழிக்கிறார்கள்
பிறகுதானே கொடுக்க வேண்டும் என்கிற தைரியம்
பலரை கீழே அதளபாதாளத்துக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது
அதுவும் போதாக் குறைக்கு கணிணி விறபன்னராயிருக்கும் சிலர்
அடுத்தவரின் கடவு எண்ணை உபயோகித்து
அவருடைய வங்கியில் உள்ள அத்தனை பணத்தையும் கபளீகரம் செய்யும்
குற்றத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்
அத்தனைக்கும் காரணம் மனிதர்களின் பேராசைதான்

வருமானத்துக்கு தக்கபடி செலவு செய்து வளமாக
வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்
நாமோ அளவுக்கு அதிகமாக செலவு செய்து அவமானத்தை தேடிக்கொண்டிருக்கிறோம்
கையில் இருக்கும் காசை எண்ணிப் பார்த்து செலவு செய்ததால்
அவர்களுக்கு வழ்க்கையின் திட்டமிடுதல் பழகி இருந்தது
இப்போது அப்படியில்லை செலவு செய்து விட்டு மாட்டிக் கொண்டு முழிக்கிறோம்

ஒரு காலத்தில் தங்க நகை வாங்குவது தங்களுடைய
அந்தஸ்தை காட்டிக் கொள்ளவும் , அதற்குப் பிறகு
ஆபத்துக்கு தங்கம் உதவும் என்கிற எண்ணத்தினாலும்
தங்கம் வாங்கினர்...இப்போது ஆடம்பரத்துக்கே தங்கம் அதிகம் பயன் படுகிறது
அரசே தங்கத்தை வாங்கிக் குவிக்கிறது
எல்லா நாடுகளும் தங்கம் வைத்திருக்கும் நாடுகளை
தராசில் நிறுத்து தகுதியை எடை போடுகிறது

தங்கம் வாங்குவதில் மீண்டும் விற்பதில் உள்ள சிக்கல்களை ஆரய்ந்தால்

நாம் வாங்கும்போது செய்கூலி, சேதாரம் அதைத்தவிர வரிகள் என்று ஏராளமான செலவை நமக்கு ஏற்படுத்தி லாபம் சம்பாதிக்கும் தங்க வியாபாரிகள்
அதே நகையை அவர்களிடம் மீண்டும் கொடுத்துவிட்டு
வேறு நகை வாங்கும் போது நாம் கொடுக்கும் தங்கத்தின் விலையை வெகுவாகக் குறைத்து மீண்டும் செய்கூலி, சேதாரம் எல்லாம் போட்டு, மீண்டும் அவர்களிடம் வாங்கும் நகைக்கு செய் கூலி சேதாரம் எல்லாம் போட்டு,,..... அப்பப்பா
நாம் உழைத்த பணம் நம்மை அறியாமலே தங்க நகை வியாபாரிகளால் சுரண்டப் படுகிறது
அது மட்டுமல்ல கற்கள் பதித்த நகைகள் வாங்கினால்வேறு வினையே வேண்டாம்
நமக்கு அவர்கள் விற்கும்போது கற்களுடன் சேர்த்து எடை போட்டு அனியாய விலைக்கு விறபார்கள், நாம் அதை மீண்டு அவர்களிடம் விற்கும்போது 'கற்களையெல்லாம் எடுத்து விட்டு, அதற்கு மேலும் அந்த தங்கத்தை உருக்கி அழுக்கெடுத்து
அப்போது எவ்வளவு எடை இருக்கிறதென்று கணக்குப் பார்த்து
நமக்கு செலவு வைக்கிறார்கள், இதைபோன்ற அனியாயத்தை நாம்தினமும் சந்திக்கிறோம்

ஆனாலும் நகைக்கடைகளில் கூட்டத்துக்கு பஞ்ஜமில்லை
இத்தனைக்கும் காரணம்
நம்முடைய அறியாமை,பேராசை,வீண் படாடோபம்
இதைத்தான்
பெரியோர் வட்டிக்கு வாங்கி அட்டிகை செய்து
அட்டிகை விற்று வட்டியைக் கட்டு என்று சொல்லி இருக்கிறார்களோ
rkc1947@gmail.com, http://thamizthenee.blogspot.com ,http://peopleofindia.net

அன்புடன்
தமிழ்த்தேனீ


பழமொழி -4. அழுதபிள்ளைதான் பால் குடிக்கும்

" அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்"

அருமையான முது மொழி!! , பசியெடுத்தாலும் அழாமல் ,
அதாவது எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் நான் இன்னும் முன்னுக்கு வரவில்லையே என்று கவலைப் படும் பலர்,
அதாவது பரவாயில்லை அடுத்தவர்கள் முன்னுக்கு வந்து விட்டார்களே என்று கவலைப்படும் பலர், இப்படிப் பலவகை மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் உணர்த்துவது போல் இந்த முதுமொழி அமைந்திருக்கிறது

நான் ஒரு முழு நீள நாடகத்தை மூன்று நாளில் எழுதி முடிக்கும்
வழக்கமுடையவன் என்னை பார்த்து சக நாடக எழுத்தாளர்கள்
கேட்பார்கள் மூன்று நாளில் எப்படி எழுதி முடிக்கிறாய் என்று
அவர்களுக்கு நான் பதில் சொல்லுவேன்,மூன்று நாளில் முடிக்க முன்னூறு நாள் யோசித்திருக்கிறேன்,உழைத்திருக்கிறேன்
என்று, இதுதான் வெற்றியாளர் பலரின் ரகசியம் ,

பலபேர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன் நேத்து கூட நான் அவரைப் பார்த்தேன் ஒரே நாளில் அவர் கோடீஸ்வரராக ஆகிவிட்டார் என்று
ஒரே நாளில் கோடீஸ்வரராக ஆவதற்கு அவர் எத்துணை முயற்சிகள் செய்திருப்பார் பலகாலமாக , அது வெளியே தெரிவதில்லை,

எப்போதும் வேர்கள் வெளியே தெரியாது விருட்ஷம் மட்டும் தான் தெரியும் , மிகச் சிறிய உருவமாக ,குள்ளமாக வாமனாவதாரம் எடுத்த ஸ்ரீமன் நாராயணனின் விஸ்வரூபம் வெகு சிலரே பார்த்திருக்கக் கூடும், ஆனால் அந்த விஸ்வரூபத்தைக் கண்டவர்கள்கூட அந்த விஸ்வரூபத்தின் பின்னால் இருக்கும்
"அணுவை சத கூறிட்ட அணுவிலும் உளன் " என்று ஆன்மீகப் பெரியார்கள் சொன்னாற் போலே அந்த அணுவிலிருக்கும் இறைவனைக் கண்டிருப்பார்களா என்பது சந்தேகமே..அது போலத்தான் முயற்சிகளை காணாதோர் முடிவை மட்டும் கண்டு ஆச்சரியப் படுகின்றனர்,
முயற்சி செய்யாமல் பலனை மட்டும் எதிர் பார்க்கும் பலருக்கு செயலில்லாமல் விளைவு இல்லை என்பது புரியவில்லை
கண்ணன் கீதையிலே சொன்னது போல செயலை அதாவது, கடமையைச் செய் பலனை எதிர் பாராதே என்று..
அதாவது நீ கடமையை ஒழுங்காக செய்தாலே பலனை நீ எதிர் பார்க்க வேண்டாம் தானாகவே வரும் என்னும் பொருளை உணர்த்துவது போல , தன் கடமையைக் கூட உணராமல் எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல். இருப்பவர்களை கடமையை செய்யத் தூண்டுவது போல இந்த முதுமொழி அமைந்திருக்கிறது

ஒரு திருமண மண்டபத்தில் நான் ஒரு குழாயில் கையை சுத்தம் செய்து கொண்டிருந்தேன் இன்னொரு கோடியில் கடைசீக் குழாயில் இன்னொருவர் கையை சுத்தம் செய்துகொண்டிருந்தார் அந்த நண்பர் நாட்டில் பல பேர் கோடீஸ்வரராக ஆகிவிட்டனர், நாமெல்லாம் எப்போது அப்படி ஆக முடியும் என்றார்,

அவரைப் பார்த்து நான் சொன்னேன் வேடிக்கையாக நீங்களும் நானும் கோடியில் ஒருவர் என்று, ஆமாம் அந்தக் கோடியில் அவர் இந்தக் கோடியில் நான், அது போல வெகு சிலரே கோடியில் ஒருவராக முயற்சி செய்கிறார்கள், அல்லது கோடிகளுக்காக முயற்சி செய்கிறார்கள் ஆகவே முயற்சி திருவினையாக்கும் என்பதைத்தான் ”அழுத பிள்ளை பால் குடிக்கும்” என்று சொல்லி இருக்கிறார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது

இன்னொரு முக்கியமான விஷயமும் நினைவுக்கு வருகிறது
ஒவ்வொரு மனிதரும் பிறக்கும் போது அத்துணை நாட்கள் ஒரு தண்ணீர் நிரம்பிய பையில் நீந்திக் கொண்டிருந்தாலும்,அந்தத் தண்ணீரிலும் அந்தக் குழந்தை ஸ்வாசிக்க காற்றையும், தொப்புள் கொடி வழியே தாய்மையின் உணர்வுபூர்வமான சக்தி , தாய் உண்ணும் உணவிலிருந்தே எடுக்கப்பட்டு அக்குழந்தைக்கு ஏற்ப
அவ்வுணவை மாற்றி அனுப்பிய அபூர்வ சக்தியினால்,உணவாக அனுப்பப்பட்டும், அக்குழந்தை பாதுகாக்கப்படுகிறது....
அது மட்டுமல்ல தாயின் தொப்புள் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து அந்தக் குழந்தைக்கு மட்டுமல்ல அனைத்துக் குழந்தைகளுக்கும் உயிர் காக்கும் ஜீவரசமாக இருக்கிறது என்பதை விஞ்ஞானத்தில் கண்டு பிடித்து அவைகளைப் பாதுகாக்க ஆரம்பித்திருக்கிறார்கள்(Stem cell) மேலும் தாய்ப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்று நம்
முன்னோர்கள் கூறியதையே இப்போதைய விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி செய்து ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்
இப்படி இன்று நாம் கண்டு பிடிக்கும் அனைத்துமே ஏற்கெனவே ஒருவன் கண்டு பிடித்து செயலாற்றி இருக்கிறான் என்றால்.. அவன்தான் இறைவன் என்று ஒப்புக் கொள்வதில் தவறென்ன...?
ஏற்கெனவே அவன் உருவாவாக்கியதை கண்டு பிடித்த நமக்கே விஞ்ஞானி என்று பெயரென்றால், உருவாக்கிய அவனை இறைவன் என்று சொல்வதில் தவறென்ன ....?

என்னே இறையின் சக்தி ,..!!! என்னே இறையின் படைப்பு ரகசியம்
யார் சொன்னது இறை இல்லையென்று...? தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள் ”அவனன்றி ஒரு அணுவும் அசையாது”

அப்படி பாதுகாப்பாய் இருந்த குழந்தை இயற்கையின் வழியே இந்த பூவுலகுக்கு வருவதற்காக இடையே நசுக்கப் படுகிறது நசுக்கப் பட்டு நழுவி முதலில் தலையைக் காட்டி பின் மொத்தமாக இந்தப் ப்ரபஞ்ஜப் ப்ரவேசம் அடைகிறது, அப்படி நசுக்கப் படும்போது
அது வரை அந்தக் குழந்தை ஸ்வாசித்த காற்றும் தடைப்படுகிறது
அக்குழந்தை மூச்சு விடத் தவிக்கிறது அந்த இடைவெளியில்
அதற்கு மூச்சுவிட காற்று தேவை

அந்தக் குழந்தை வெளியே வந்து பூமியில் விழுந்து அதன் உடல் இயக்கம் ஆரம்பிக்க இருக்கும் அந்த இடைப்பட்ட நேரத்தில்
காற்று உள்ளே போகும் மூச்சுக்குழலின் வழியை, இது வரை இருந்த குடியிருந்த கோயிலின் கர்பக் க்ரகத்தில் இருந்த கருணையே வடிவான தண்ணீர் இப்போது அடைத்துக் கொண்டிருக்கும், அந்த தண்ணீர் வெளியேறினால்தான்
காற்று உள்ளே புக முடியும் அதற்குதான் குழந்தை முயற்சி செய்து
அழ ஆரம்பிக்கிறது உரக்கக் குரலெடுத்து அழ ஆரம்பிக்கிறது, அப்படி அந்தக் குழந்தை அழும்போது,
அந்த தண்ணீர் ஸ்வாசக் குழாயிலிருந்து வெளியேறுகிறது ,அப்படி தண்ணீர் வெளியேறியவுடன் குழந்தை முதல் மூச்சு விடுகிறது
அப்படி அழவில்லையென்றால் மருத்துவர்கள் அடித்தாகிலும் அக் குழந்தையை அழ விடுவர் ஏனென்றால் அழுதால்தான் மூச்சே....
”முதல் மூச்சே விடமுடியும்” முதல் மூச்சு விட்டால்தானே பிழைக்கும் பிழைத்தால்தானே பால் குடிக்கும்?
”அதனால்தான் அழுத பிள்ளை பால் குடிக்கும்”
என்று ஆன்றோர்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கலாம்


புரட்சி எங்கு உருவாகிறது என்று நானே எனக்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டு பல நாள் ஆராய்ந்து அதன் மூலத்தை
என்னுடைய பாணியிலே ஒருகவிதையாக வடித்தேன்

" புரட்சி "
"அசை, புரளு, கவிழாதே நிமிரு
இயக்கம் கொள் பேரியக்கம் கொள்
அப்போதுதான் கருவரையிலிருந்தே
நீ வெளி வரமுடியும் இல்லையென்றால்
இறந்த குழந்தை "

என்று, ஆமாம் கருவரையிலேயே புரட்சி ஆரம்பித்து
விடுகிறது என்பதே உண்மை, அந்தக் கருவரைப் புரட்சியே ஒரு இயக்கத்தில்தான் ஆரம்பிக்கிறது,அக்குழந்தையின் இயக்கத்தால் தான் ப்ரசவ வலி ஏற்படுகிறது அதற்கு அடுத்த இயக்கம்தான் (pelvis) என்று சொல்லப்படும் இடுப்பு எலும்புகளின் விரிவாக்கம் அடுத்த இயக்கமாக இடுப்பு வலி ஆரம்பிக்கிறது , இப்படி இயக்கங்கள் அடுத்தடுத்து இல்லையென்றால் ,குழந்தை அழாமல் இருந்தால் இந்தப் ப்ரபஞ்சமே தோன்றி இருக்காது அல்லவா
சம்பந்தன் அழுதான் பராசக்தி பால் கொடுத்தாள், பராசக்தியின் அமுதத்தைக் குடித்ததால் வெறும் சம்பந்தருக்கு ஞானம் சம்பந்தமாயிற்று , ஞான சம்பந்தரானார், திரு ஞான சம்பந்தரானார், இப்போது சொல்லுங்கள்

அழுத பிள்ளை பால் குடிக்குமா ஞானம் பெறுமா
அழாத பிள்ளை பால் குடிக்குமா ஞானம் பெறுமா..?

அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.


rkc1947@gmail.com, http://thamizthenee.blogspot.com ,http://peopleofindia.net

முகவரி: பழைய எண் 152, புதிய எண் ஏஐ- 58,
ஏ3, இரண்டாவது தளம், சோனக்ஸ்வப்னா அடுக்ககம்
7 வது ப்ரதான சாலை, அண்ணா நகர் ,
சென்னை 600040

கைப்பேசி: 9840884088
இல்லம் : 044-42057923

அன்புடன்
தமிழ்த்தேனீ