திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Sunday, February 22, 2009

சிறு வயதில் என்னுடைய பாட்டியும் ,தாயாரும்
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சாயக் கிளியே சாய்ந்தாடு, என்று பாடியும் ,
ஆனை ஆனை அழகர் ஆனை, அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை,
குட்டியானைக்கு கொம்பு முளைச்சுதாம் ,பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சாம், என்று சொல்லும் தமிழ் வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு வளர்ந்தோம், மார்பிலே அம்பைத் தாங்கிய தன் பிள்ளையின் வீரம் கண்டு நெக்குருகி மார்பிலே பால் பீரிட்டெழ பிள்ளை இறந்த துக்கத்தையும் மறந்து,புறமுதுகு காட்டாத பிள்ளையைப் பெற்றெடுத்ததற்காக பெருமை கொண்ட வீரத்தமிழ்த் தாயின் கதைகள் கேட்டு வீரம் கொண்டோம்,

நம்முடைய பாரதியாரின் கனல் தெறிக்கும் பாடல்களை நம்மைப் பெற்றவர்கள் வாயாலேயே பாட அதைக்கேட்டு தேசப்பற்றும், ஞானமும் அடைந்தோம், தீராத விளையாட்டுப் பிள்ளை என்னும் கண்ணனின் திருவிளையாடல் கேட்டு இளமை இனிமையென கண்டோம்,கொட்டடடா ஜெய பேரிகை கொட்டடா என்னும்பாடலைக் கேட்டு வீர முழக்கமிட்டோம்,ஓடி விளையாடு பாப்பா என்கிற பாட்டைக் கேட்டு வாழ்க்கையில் எந்தஎந்த பருவத்தில் எப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும் என்று கற்றுக் கொண்டோம், ”சகலகலாவாணியே சரணம் தாயே சங்கீத வீணா பாணியே”

என்னும் பாடலைக் கேட்டு தமிழில் துதி செய்யக் கற்றுக் கொண்டோம்

அந்த சுந்தரத்தமிழ் இருக்க ,
லிட்டில் லிட்டில் ஸ்டார் பாட்டு எதற்கு ?

இதை நம் மக்கள் புரிந்து கொண்டு குழந்தைகளுக்கு நல்ல செய்திகளை தமிழிலே ,சுந்தரத் தமிழிலே அளிக்கவேண்டும்,முதலில் பெரியவர்களுக்கு ஆங்கில மோகம் தீரவேணும்,எல்லா மொழியையும் கற்றுக் கொள்ளலாம், ஆனால் தாய் மொழியை முதலில் அறிதல் அவசியமன்றோ,?
எனக்கு ஒரு ஆச்சரியம், ஆங்கிலம் தெரியாமலே இத்துணை நாட்கள் நமக்கு தமிழிலேயே எல்லாவித வாழ்க்கை முறைகளையும் பெற்றோர்கள் முறையாக கற்றுக் கொடுத்தனரே, இப்போது அந்த ஞானம் எங்கு போயிற்று

விலங்குகள், பறவைகள், கூட எந்த தேசத்திலிருந்தாலும் அதன் தாய் மொழியிலேயே தன் குட்டிகளுக்கு கற்பிக்கிறது,
அன்னிய நாட்டில் இருக்கும் பசுக்கள் கூட அம்மா என்றே தமிழை உச்சரிக்கின்றன,நாம் விலங்குகளை, பறவைகளை விட கீழானவராய் ஆகிவிட்டோமா?



சிரிப்புத்தான் வருகுதையெ-உலகைக்கண்டால்

சிரிப்புத்தான் வருகுதையே என்னும்பாடல் ஷண்முகப்ரியா ராகத்திலும்,

அகத்தியர் தருந் தமிழை அன்னைபோல் வளர்த்தனை

சகத்திலே உனைப்போலுண்டோ தாய்மொழிக்குழைத்தவர்

இகத்திலே தமிழ்த்தவம் இயற்றிச் சங்க நூல்களின்

சுகத்திலே குளித்தனை சுவாமிநாத வள்ளலே என்னும் பாடல் காமாஸ் ராகத்திலும்


தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும்-இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்,

முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்-இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்

என்னும் மஹாகவி பாரதியாரின் பாட்டுகள் ஒலித்த நாட்கள்,

பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்- மிடிப் பயம் கொல்லுவார் துயர்ப் பகைவெல்லுவார்
என்னும் பாடல் புன்னாக வராளி ராகத்திலே ஒலித்த அந்த நாட்கள்

வந்தே மாதரம் என்போம்- எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்என்னும் ஆனந்தக் களிப்பு ராகத்திலே பாடல் கேட்ட அந்த நாட்கள்

தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

என்னும் தாயுமானவர் ஆனந்தக் களிப்பு வர்ணமெட்டில் கேட்ட அந்த நாட்கள் இவையெல்லாம் மீண்டும் வாராதோ என்று ஏக்கமாய் இருக்கிறது

அந்தநாள் இனி வருமோ-சொல்லடீ அம்பலப் பசுங்கிளியே

என்னும் சுத்தானந்த பாரதி அவர்களின் பாடல் ஆரபி ராகத்திலே காதில் ஒலிக்கிறது,

என்ன செய்ய?

அன்புடன்

தமிழ்த்தேனீ


No comments: