திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Tuesday, February 24, 2009

ஆன்மீகம்-- 1. கடவுளும் மனிதனும்

“ஆன்மீகம்”


ஆன்மீகம் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். அதற்கு எனக்குத் தூண்டுகோலாயிருந்தது ஒரு நண்பர் என்னைக் கேட்ட ஒரு கேள்விதான். அந்தக் கேள்வி, "விளங்க முடியாக் கடவுளா? அல்லது சக மனிதனா? உண்மையில் எது முக்கியம்?" என்கிற கேள்வியே. என்னை மிகவும் சிந்திக்க வைத்தது அதற்கு எனக்குத் தெரிந்த வரையில் பதில் எழுதி இருக்கிறேன்.

நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விஷயம் கடவுளைப் பற்றியதாக இருந்தாலும் சக மனிதரைப் பற்றியதாக இருந்தாலும் புரிந்து கொள்ள வேண்டும் என்று உண்மையாகச் செயல் பட்டால் நிச்சயமாகப் புரிந்து கொள்ள முடியும். புரிந்து கொள்ளக் கூடாது என்று நினைத்துவிட்டால், புரிந்தாலும் மனது ஏற்றுக் கொள்ளாது. நாம் புரிந்து கொள்வோம் வாருங்கள்.

உங்கள் எல்லோருடைய முழு மனதோடு கூடிய சம்மதத்தையும் எம்மதமாயிருந்தாலும் சரி, அனைத்து சகோதரகளும் "மனிதம்" என்னும் ஒரே கொள்கையோடு முயற்சி செய்வோம் முழு மனதோடு. கடவுள் நம்பிக்கை, மதம், கோவில், திருவிழா, தேரோட்டம் எல்லாமும் மனிதனால் உருவாக்கப்பட்டவை. மனிதனாலேயே விஸ்தரிக்கப்பட்டவை. அவற்றை மனிதன் தான் செப்பனிட வேண்டுமே தவிர, கடவுள் முக்கியமா மனிதன் முக்கியமா என்று ஆராய்வு அவசியமற்றது என்று தோன்றுகிறது.

"கண்ணுக்குத் தெரியாத கடவுளை விட புலனுக்கு தெரியும் மனிதன் முக்கியம் தான் என்றால் அந்த மனிதன் தன் வாழ்கையில் மிக முக்கியமான பங்காகக் கடவுளை வைத்திருக்கிறானே“ என்கிற பதில் நம்மை யோசிக்க வைக்கிறது. இவைகள் என்னை ஆன்மீகத்தைப் பற்றி ஓரளவு எழுதலாம் என்று எண்ண வைத்திருக்கிறது. மனிதர் எந்த மதத்தைச் சார்ந்தவனாக இருப்பினும் உலகிலே நம்மை மீறிய சக்தி உண்டு என்று ஒப்புக்கொள்வார். மேலும் விஷயமறிந்தவர்கள், எப்போதும் நல்ல சக்தி ஒன்று, கெட்ட சக்தி ஒன்று, ஆக மொத்தம் இரு சக்திகள் உண்டு இரு சக்திகளும் நம்மை ஆட்டிவைக்கின்றன, கெட்ட சக்திகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே நாம் இறைவனை (அதாவது) நல்ல சக்தியை தொழுகிறோம் என்று சொல்வார்கள்.

சக மனிதர்கள் முக்கியம் என்றால், சக மனிதர்களின் உணர்வுகளும் முக்கியமானவைதானே அதனால்தான் சொல்லுகிறேன், நீங்கள் சொல்லியபடி திட்டமிட்டு ஒரு கட்டுப்பாட்டோடு செய்யும்போது எதுவுமே சிறக்கிறது, நாம் நம் மனதுக்குப் பிடித்தவற்றைச் செய்யலாம் தவறில்லை, அடுத்தவர்க்குத் துன்பம் தராமல் இருக்கக் கூடிய கட்டுப்பாடு வேண்டும் அதை விட்டு விட்டு உண்மையில் எது மிக முக்கியம்? விளங்க முடியாக் கடவுளா? அல்லது சக மனிதனா? என்கிற கேள்வியே தேவை இல்லை. விளங்க முடியாத பல விஷயங்களை விளங்கிக் கொண்டுதான் எல்லாம் செய்ய வேண்டுமென்றால் நாமெதையுமே செய்ய முடியாது. சக மனிதர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரவர் பாரம்பரியத்தைக் காப்பாற்றி ஆக வேண்டும், அதுதான் ஆன்மீகம். கடவுள் மட்டுமல்ல, மனிதன் கூட விளங்க முடியாதவன்தான். கட்டுப்பாடு என்பது எல்லாவித மனிதரையும், அவர்களின் உணர்ச்சிகளையும் மதிப்பது என்பதுதான்.

அவரவரை அப்பப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால்தான் மனிதம் வளரும், மனிதம் காப்பாற்றப்பட்டாலே ஆன்மீகம் காப்பாற்றப்படும்.நான் பொதுவாக எங்கு சென்றாலும் அங்கிருக்கும் மனிதர்களிடத்தில் பொதுவாக கேட்பேன் ”யார் உறவுக்காரர்கள்” என்று பலர் பலவிதமாக விளக்கம் சொல்வார்கள், ஆனால் நான் கடைசியாக சொல்வேன் இப்போது இங்கிருக்கும் நாம்தான் உறவுக்காரர்கள், ஏனென்றால் இப்போது இந்தக் கணத்தில் இங்கு என்ன நடக்கிறதோ அந்த நடபுக்கேற்ப நனமையாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும் முதலில் நமக்கு உதவப் போவது இங்கிருக்கும் நம்மில் ஒருவர்தான், பிறகுதான் மற்ற உறவுக்கோ, நண்பர்களுக்கோ செய்தி அனுப்புவோம்,ஆகவே நாம் தான் உறவுக்காரர்கள் என்று

கடவுள் நம்பிக்கை,உருவ வழிபாடு,அருவ வழிபாடு, மதம், கோவில், திருவிழா,தேரோட்டம், எல்லாமே மனிதனால் உருவாக்கப்பட்டவை. மனிதனாலேயே விஸ்தரிக்கப்பட்டவை, அவற்றை மனிதன் தான் செப்பனிட வேண்டுமே தவிர, கடவுள் முக்கியமா மனிதன் முக்கியமா என்று ஆராய்வே அவசியமற்றது என்றுதான் தோன்றுகிறது,ஆனாலும் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டால் மனிதம் என்னும் ஆணிவேருக்கு சரியான விளக்கம் என்ன என்பதை அறியலாம் என்னும் முயற்சியால் இக்கட்டுரையை எழுதுகிறேன்

கண்ணுக்கு தெரியாத கடவுளை விட புலனுக்கு தெரியும் மனிதன் முக்கியம் தான்.என்றால் அந்த மனிதன் தன் வாழ்க்கையில் மிக முக்கியமான பங்காக கடவுளை வைத்திருக்கிறானே “என்கிற பதில் என்னை ஆன்மீகத்தைப் பற்றி ஓரளவு எழுதலாம் என்று எண்ண வைத்திருக்கிறது, மனிதர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும்,உலகிலே நம்மை மீறிய சக்தி உண்டு என்று ஒப்புக்கொள்வர்,



குளிக்கலாம் வாரீகளா

' ஆரோக்கியக் குளியல் '

தினமும் குளிப்பது எதற்கு என்று ஒரு குழந்தை தன்னுடைய தாயாரைப் பார்த்துக் கேட்டதாகவும், அதற்கு அந்தப் பெண்மணி எப்படிப் பதில் கூறினால் அந்தக் குழந்தைக்கு ஏற்புடையதாக இருக்கும் என்பது தெரியாமையினால் பதில் கூறத் தயங்கியதாகவும் ஒரு செய்தியை மழலைகள் தளத்தில் திரு கல்பட்டு நடராஜன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். இன்னும் பல பெரியவர்களுக்கே அந்த சந்தேகம் இருக்கிறது. அவர்களுக்கும் புரியும் வகையில் குளையலைப் பற்றி யோசிப்போமா?
குறத்தி மகன் என்னும் திரைப்படத்தில் சுருளிராஜன் என்னும் நகைச்சுவை நடிகர் குறவர் கூட்டத்தில் ஒருவராக வருவார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன, "படிக்கச் சொன்னா பரவா இல்லேப்பா குளிக்கச் சொல்றாங்கோ" என்பார். அதைக் கேட்டவுடன் நமக்குத் தானாக சிரிப்பு வரும்.

எவ்வளவு பொருள் பொதிந்த வார்த்தைகள், குறவர்கள் குளிப்பதே கிடையாது. அவர்களைக் குளி என்றால் எவ்வளவு கடினமாயிருக்கும் அவர்களுக்கு? சமீபத்தில் அன்பே சிவம் என்னும் ஒரு திரைப்படத்தில் கமல்ஹாசன் ஏதோ சொல்ல முயல இடைமறித்து, "போதும் சார், எனக்கு குளிக்கக் கூடத் தெரியாதா? அதுக்குக் கூட நீங்க சொல்லித் தரணுமா? போய் வேலையைப் பாருங்க" என்பார் மாதவன்.

நம்மில் பலர் இப்போதும் இரவு தாமதமாகப் படுக்கப் போகும் நேரத்தினால் காலையில் சிறிது தாமதமாக எழுகிறோம். அப்படி தாமதமாக எழும்போது நேரமின்மையினால் வேகவேகமாகக் குளித்துவிட்டு, ஏதோ காலையில் கிடைத்த உணவை ருசியும் அறியாமல் அள்ளிப் போட்டுக்கொண்டு அவதி அவதி என்று அலுவலகத்துக்குச் செல்கிறோம். சிலர் அதற்கும் நேரமில்லாமல் குளியலறைக்குச் சென்று சிறிது சிறிது தண்ணீரில் முகத்தைக் கழுவிக்கொண்டு, சிறிது தண்ணீரைத் தலையிலும் தெளித்துக்கொண்டு வருவோம். அப்போது கேட்பார்கள், "என்ன இன்று காக்காய்க் குளியலா?" என்று. ஏன் அப்படிக் கேட்கிறார்கள் என்று யோசித்தால், காக்காய் திடீரென்று குளிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு நீர்நிலைகள் அருகிலே வரும். எப்போதுமே காக்காய்க்கு சந்தேகம் அதிகம். அதனால் யாராவது வந்துவிடப் போகிறார்களே, யாராலாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்றெல்லாம் நினைத்துக்கொண்டு தலையை ஒரு முக்கு தண்ணீரில் முக்கிவிட்டு, பலமுறை தலையை சிலுப்பிக்கொள்ளும். அதுபோல அரைகுறைக் குளியல் போட்டுவிட்டு வரும் நம்மை அப்படித்தான் கேட்பார்கள்.

என்னடா ஒரு சாதாரணக் குளியலுக்கு இவ்வளவு வியாக்யானங்களா என்று யோசிப்போருக்கு இன்னும் ஏன் குளிக்க வேண்டும் என்று நான் சொல்லவே இல்லையே. இப்போது சொல்கிறேன்.

நாம் ஒவ்வொரு நாளும் இரவில் தூங்கப் போகிறோம். நாம் தூங்கும்போது நம் புலன்கள் அனைத்தும் ஓய்வெடுக்கின்றன. சில முக்கியமான உறுப்புகளைத் தவிற, நம் உறுப்புகள் அனைத்தும் பல கழிவுகளை நம் உடலில் உற்பத்தி செய்கின்றன. அந்தக் கழிவுகள் நம் உடலில் சேரும்போது நம் உடலில் ஒரு துர்நாற்றம் ஏற்படுகிறது, அந்தக் கழிவுகளை சுத்தம் செய்யாமல் அப்படியே சேரவிட்டால் அந்தக் கழிவுகள் நம் உடலுக்கு நோயை விளைவிக்கும். ஆகவேதான் குளிக்க வேண்டும்.

அது மட்டுமல்ல, ஒவ்வொரு நாள் நாம் தூங்கும்போதும் விஷயம் தெரிந்த பெரியவர்கள் சொல்லுவார்கள் அது ஒரு தற்காலிக மரணம் என்று. ஆகவே நாம் பிறந்த போது நம்மைச் சுற்றி இருந்த வேண்டாத அழுக்குகளை நீக்க நம்மைக் குளிப்பாட்டுகிறார்கள். அது போல நாம் ஒவ்வொரு நாளும் இறந்து பின் மீண்டும் பிறக்கிரோம். அப்படிப் பார்க்கும்போது தினமும் நம்மைச் சுத்தம் செய்து கொள்ள குளித்துதானே ஆகவேண்டும், அதனால்தான் குளிக்கிறோம்.

குளிப்பது என்னும் வழக்கம் ஏன் ஏற்பட்டது, சுத்தமும் சுகாதாரமும் புரிய ஆரம்பித்தபோது, நீரினால் நம் உடலைக் கழுவினால் அசுத்தங்கள் நீங்கிவிடும் என்று உணர்ந்த போது, ஏற்பட்ட ஒரு நடைமுறைதான் குளியல் என்பது.

குளிப்பதில் எத்தனை வகைகள் இருக்கிறது என்று பார்ப்போம்.

முதலில் ஏற்பட்டது ஆற்றுக் குளியல். நாம் நதிக்கரையில்தான் நம் நாகரிகத்தை தொடங்கினோம். ஆற்றுக் குளியலில் பலவகையான அபாயங்கள் உண்டு. காவிரியில் நீர் ஓடிக்கொண்டிருக்கும், பெண்டிரும் ஆடவரும் குளித்துக் கொண்டிருப்பார்கள், திடீரென்று நீர் ஏகத்துக்குப் பெருகி வெள்ளமாய் வந்து பலரை அடித்துக்கொண்டு போயிருக்கிறது. அது மட்டுமல்ல ஆற்றில் குளிக்கும் போது எந்த இடத்தில் ஆழம் அதிகம், எங்கு குளித்தால் நீரோட்டம் நம்மை அடித்துகொண்டு போகாமல் இருக்கும் என்பது தெரிந்து குளிக்க வேண்டும். சில இடத்தில் பாறைகள் நீட்டிக் கொண்டிருக்கும். நாம் குளிக்கும்போது அந்தப் பாறைகள் நம் கையையோ காலையோ கிழித்துவிடக்கூடும். ஆக அந்த ஆற்றில் ஏற்கெனெவே குளித்துப் பழக்கப்பட்டவர்களிடம் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு பிறகு ஆற்றில் குளித்தால் நல்லது.

அடுத்ததாக கிணற்றுக் குளியல். பல கிராமங்களில் விவசாயத்தை முன்னிட்டுப் பெரிய கிணறுகளை வெட்டி வைத்திருப்பார்கள். அந்தக் கிணறுகளில் பல சிறுவர்கள் மேலிருந்து சத்தம் வரும்படியாக குதித்து நீரைக் கிழித்துக்கொண்டு நீந்திக் குளிப்பார்கள். அவர்களுக்குத் தெரியும் அந்தக் கிணற்றின் பக்கவாட்டுச் சுவரில் எங்கு பள்ளமாய் இருக்குமென்று. அங்கு போகும் போதுமிகவும் எச்சரிக்கையுடன் போவார்கள். அதுமட்டுமல்ல கிணற்றில் சில சமையம் தவளை, மீன்கள் பாம்பு போன்றவை இருக்கக் கூடும். அவைகள் வந்தால் எப்படி சமாளித்து மேலே வரவேண்டும் என்று அவர்களுக்கு இயல்பாகவே பயிற்சி வந்துவிடும்.

அடுத்ததாக குளங்களில் குளித்தல். இது மிகவும் ஆபத்தானது, ஏனென்றால் குளங்களில் பாசி போன்ற தாவரங்கள் நம்மை வழுக்கி விட்டுவிடும். அதுமட்டுமல்ல, தாமரை, அல்லி போன்ற மலர்களின் கொடிகள் குளங்களில் கீழே வேரூன்றி இருக்கும். அந்தத் தாவரத்தின் தண்டுகள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு இருக்கும். நாம் கீழே சென்று நீந்தும் போதோ, அல்லது பாசியின் வழுக்கலாலோ உள்ளே விழுந்து கீழே சென்று மேலே வர முயலும் போது நம் கால்கள், கைகள் அந்தத் தாவரத்தின் பின்னலில் சிக்கிக்கொண்டு நம்மை மேலே வரமுடியாமல் செய்துவிடும் அபாயம் உள்ளது. இதனால் மூச்சுத்திணரி இறக்கும் வாய்ப்பு அதிகம்.



அடுத்ததாக கடல் குளியல். மாசிமகம் அன்று கடலில் குளித்தால் புண்ணியம் என்னும் நம்பிக்கை இருக்கிறது, அப்படிக் கடலில் குளிக்க ஆசை கொண்டோர் கவனிக்க வேண்டிய பல நுணுக்கங்கள் இருக்கின்றன. கடல் அலைகள் கடலின் ஓரத்திலேதான் இருக்கும். அந்த அலைகளில் லாவகமாக இறங்கி நீந்தி நடுக்கடலுக்கு செல்ல வேண்டும். அப்படிச் செல்லும்போது நம்மால் எவ்வளவு தூரம் நீந்த முடியும் என்று நம்மை, நம்முடைய திறனை எடைபோடாமல் அதிக தூரம் கடலுக்குள் செல்லக் கூடாது. நீந்தத் தெரியாதவர்கள் கடலில் இறங்கவே கூடாது, ஏனென்றால் அலைகள் கரைக்கு வரும்போதே சீற்றத்துடன்தான் வரும். வந்துவிட்டுப் பின்னுக்குத் திரும்பும்போது மிகவேகமாகத் திரும்பும். அப்படித் திரும்பும் கடலலை என்னதான் எச்சரிக்கையுடன் செயல்பட்டாலும் காலை வாரி இழுத்துக்கொண்டு போய்விடும்.

நீந்தத் தெரிந்தவர்களா யிருந்தாலும் கடலுக்குள் போகும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனென்றால் நீந்தத் தெரிந்தால் மட்டும் போதாது. கடல் நீருக்கு இயல்பாகவே ஒரு அழுத்தம் உண்டு. அந்த அழுத்தத்தை சமாளிக்கப் பழக வேண்டும். அதுவுமன்றி சுறா, திமிங்கிலங்கள் போன்ற பெரிய வகை மீன்கள் கடலில் உண்டு, அவைகளிடம் மாட்டிக்கொண்டால் தப்பிப்பது கடினம்.

சரி ஆறு, குளம், கிணறு இவைகளில் குளிப்பதற்கு இவ்வளவு தெரிந்திருக்க வேண்டுமா நமக்கெதற்கு வம்பு என்று வீட்டிலேயே குளியலறையில் குளிக்கலாம் தவறில்லை, ஆனால் குளிக்க வேண்டும்.

ஆமாம் ஏன் குளிக்கவேண்டும் என்று தெரிந்து கொண்டோம் எப்படிக் குளிக்க வேண்டும் என்று பார்க்கலாமா? என் தாயார் எனக்கு சொல்லிக்கொடுத்த ஒரு ரகசியத்தை இப்போது சொல்லப் போகிறேன்.

எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊர் நீர்நிலைகளில் குளிக்கும்போது அந்த நீர்நிலை குளிப்பதற்கு ஏற்றதுதானா என்று தெரிந்து கொண்டு குளிக்க வேண்டும். அப்படிக் குளிப்பதற்கு முன்னால் அந்த நீர் நிலையிலிருந்து சிறிதளவு தண்ணீரை வலது கைகளின் உள்ளங்கை அளவு எடுத்து மூன்று முறை குடித்துவிட்டு, பிறகு குளித்தால் அந்த நீர் நம்மை பாதிக்காமல் இருக்கும் என்பார்கள், ஏனென்றால் உள்ளே இருப்பதும் அந்த நீர்நிலையின் தண்ணீர், வெளியே நம் உடலில் படுவதும் அந்த நீர்நிலையின் தண்ணீர் எனும்போது இரண்டும், அதாவது உள்ளும் புறமும் சமனப்பட்டு எவ்வித எதிர் விளைவுகளும் ஏற்படுத்தாமல் இருக்கும் என்பார்கள் என் தாயார். இன்று வரை நான் அதைக் கடைபிடித்து இருக்கிறேன். நாடகம், திரைத்தொடர்கள், திரைப்படம் போன்றவைகளில் நடிக்க நான் பல ஊர்களுக்கு சென்றிருக்கிறேன். பல நீர் நிலைகளில் குளித்திருக்கிறேன், ஆனால் எந்த நீர்நிலைகளும் என்னை பாதித்தது இல்லை.

வீட்டில் நாம் குளிக்கும்போது நீரை அதிகம் செலவழிக்காமல், ஆனால் சுத்தமாகக் குளிப்பதற்கு ஒரு முறை இருக்கிறது. நீரால் முதலில் உடலை நனைத்துக்கொண்டு நாம் உபயோகிக்கும் சோப்பை எடுத்து முதலில் முகத்தை சுத்தம் செய்துவிட்டு, நீரால் கழுவிவிட்டு பிறகு உடலை சுத்தம் செய்ய ஆரம்பித்தால் கண்களில் சோப்பு உள்ளே சென்று கண்கள் எரிவதை தடுக்கலாம். மற்றும் நாம் கண்களால் நன்றாகப் பார்த்து மற்ற பாகங்களை சுத்தம் செய்ய வசதியாய் இருக்கும். சோப்பைக் கைகளில் தடவிக்கொண்டு கைகளால் உடல் முழுவதும் தேய்த்துக்கொண்டு பிறகு நீரைத் திறந்து குளிக்க ஆரம்பித்தால் குறைவான அளவு தண்னீரிலேயே சுத்தமாகக் குளித்து விடலாம். பிறகு தலையில் தண்ணீரை ஊற்றி ஷாம்பூவோ, அல்லது சிகைக்காயோ தேய்த்துக்கொண்டு உடனே தண்ணீரால் தலையைக் கழுவிவிட்டு உடனடியாக முதலில் தலையைத் துடைத்துக் கொண்டால் சளிபிடிப்பது, தலை வலி போன்ற தொந்தரவுகளிலிருந்து தப்பித்துவிடலாம். பிறகு உடலை சுத்தமாகத் துடைத்துக்கொண்டு வெளியே வந்து கன்னடியில் முகம் பார்த்துத் தலை சீவும் நேரத்துக்குள் தலை முடி காய்ந்து பதமாகவும் இருக்கும்.

முக்கியமான ஒரு செய்தி இருக்கிறது. தூங்கும் போது நம் உறுப்புகள் இளைப்பாறுகின்றன. அப்படி இளைப்பாறும் போது அந்த தசைகள், இறுகிவிடுகின்றன. அப்படி இறுகிவிட்ட தசைகளைத் தளர்த்தி எளிதாக செயல்படுத்த நம் உள்ளங்கைகளினால் நன்றாகத் தேய்த்து விடுவதால் அத்துணை தசைகளும் மீண்டும் புத்துணர்வு பெற்று இயல்பாக இயங்கத் தொடங்கும்.

இதைத்தான் அழகு நிலையங்களில் மசாஜ் என்று சொல்லுகிறார்கள். மருத்துவமனைகளில் ஹீட் தெரப்பி என்றும் சொல்கிறார்கள். நம் பணத்தையும் வீணடித்து இவ்வாறெல்லாம் செய்வதை விட தினமும் குளிக்கும்போது நம் உள்ளங்கைகளால் நாமே நம் உடலை நன்கு தேய்த்துப் புத்துணர்வு பெறச் செய்யலாமே. என்ன தினமும் குளிப்பது எவ்வளவு நல்லது என்று புரிகிறதா? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமன்றோ?

மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ


தாழம்பூவே தங்க நிலாவே

” தாழம்பூவே தங்க நிலாவே ‘




மார்கழி மாதம் பிறந்த நாளிலிருந்து, அருகிலிருக்கும் ஆலயத்திலிருந்து ஒலிபெருக்கி மூலமாக ஒலிக்கும் திருப்பாவை, திருவெம்பாவை போன்ற பக்திப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே விடியற்காலையில் என் பெண் எங்கள் வீட்டு வாசலில் போடும் கோலங்களையும் ரசித்துக் கொண்டும், உபன்யாசங்கள், முடிந்த போது இசைவிழாக் கச்சேரிகள் கேட்டுக்கொண்டும்,நம் அறிஞர்கள் எழுதிய இசைமறுவறல்கள் படித்தும், இத்தனை நாட்கள் எங்கள் ஆழ்வார் ஆண்டாளைப்பற்றி அனைத்து அறிஞர்களும் எழுதிய அமிர்தம் போன்ற விளக்கங்களப் படித்தும், முழுவதும் அனுபவித்து ஆனந்தமடைந்தேன்.

நாளை வைகுண்ட ஏகாதசி, எல்லா வைணவ ஆலயங்களிலும் வைகுண்ட வாசல் திறக்கும்,வைகுண்ட வாசல்திறக்கும் அந்த சுபமுகுர்த்த வேளையில் மானுடர்களாகிய நாம் மனதும் உடலும் சுத்தமாக, அந்த வாயிலின் வழியே நுழைந்து அங்கு இறைவனை தரிசனம் செய்தால் வைகுண்டம் செல்லலாம் என்னும் ஆத்திக அன்பர்களின் நம்பிக்கையின் படி அனைத்து மக்களும் ஆலயங்களுக்கு சென்று வழிபடும் நாள்,

உத்திரமேரூரிலிருந்து ஒரு உறவுக்காரப் பெண் என் மனைவிக்கு தாழம்பூவை அனுப்பி இருந்தாள் தாழம்பூ வாசனைக்கு பாம்பு வரும் என்று சொல்லுவார்கள்,மின்னல் தெறிக்கும் வேளையிலே தாழை மடல் விரியும் என்றும் தாழம்பூ பூக்கும் என்றும் சொல்லுவார்கள், அது மட்டுமல்ல தாழம்பூவில் சிறு நாகம் என்று சொல்லக்கூடிய சிறு பாம்பு இருக்கும்,அந்தப் பூநாகம் கடித்தால் பிழைப்பது கடினம் என்றும் சொல்லுவார்கள் ஆகவே தாழம்பூவை நன்கு சோதித்துப் பிறகே கூந்தலில் சூடவேண்டும் என்று என் அன்னையார் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பொதுவாக என் வீட்டில் இறைபக்தி உண்டு என்னும் காரணத்தால் புதிய துணிமணிகள், நகைகள், வீட்டிலே சமைக்கும் உணவுப் பொருட்கள் அனைத்தையுமே ஸ்வாமிக்கு நிவேதனம் செய்து விட்டு அதன் பின்னர் உபயோகிப்பது வழக்கம். அதேபோல் தாழம்பூவையும் ஸ்வாமிக்கு அணிவித்து பிறகு வீட்டில் உள்ள பெண்மணிகள் சூடிக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். ஆகவே என்னுடைய இயல்பான எச்சரிக்கையான குணத்தினால் அந்த தாழம்பூவை பிரித்து அதில் நன்கு சோதனையிட்டு பிறகு என் மனைவியிடம் கொடுத்தேன்.

பாசத்தோடு தாழம்பூவை அனுப்பி இருக்கும் அந்தப் பெண்ணின் அன்பில் எனக்கு சந்தேகமில்லை, ஆனால் அந்தப் பெண்ணிற்கு தாழம்பூவின் இயல்புகள் தெரியுமோ தெரியாதோ என்னும் எண்ணத்தில்தான் சோதனை செய்தேன். ஒரு எச்சரிக்கைதான் இதற்கும் காரணம், ஆனால் இந்த எச்சரிக்கைக்குப் பின்னால் இருக்கும் என் சுயநலத்தை எண்ணிப் பார்த்தேன் வெட்கமாக இருந்தது.

நான் என் மனைவியிடம் சொன்னேன் எதற்கும் தாழம்பூவை ஸ்வாமிக்கு சார்த்தி அணிவித்த பிறகு நீ சூடிக்கொள் என்று.

எப்பொருளையும் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு பிறகு நாம் உபயோகிப்பது என்ன காரணத்தால் என்று எண்ணிப் பார்க்கையிலே அனேக காரணங்கள் தோன்றினாலும் நமக்கு ஒரு பிறப்பையும் தந்து நமக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களையும் அளித்த இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாக அவருக்கு நிவேதனம் செய்து விட்டு உபயோகிக்கிறோம் என்பது ஒரு காரணம்.

பொதுவான நம்பிக்கை என்னெவென்றால் நாம் உபயோகிக்கும் பொருட்களில் ஏதேனும் தோஷங்கள் இருந்தால் அவைகளை ஸ்வாமி நீக்கிவிட்டு நமக்கு நன்மை அளிக்கக் கூடிய ப்ரசாதமாக மாற்றித் தருவார் என்னும் ஆன்மீகவாதிகளின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நாம் எல்லாவற்றையும் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்கிறோம் என்பது பொதுக் கருத்து.

இப்படிப் பார்க்கும் போது இறைவனை தோஷங்கள் எதுவும் தாக்காது, அவன் சர்வ வல்லமை படைத்தவன் என்று நாம் மதிக்கிறோம் என்று தோன்றினாலும், நாம் செய்வது சரியா என்று ஒரு எண்ணம் தோன்றுகிறது, ஏனென்றால் என் தாயார் குளித்து சுத்தமாக தன் கையாலே சமைத்த உணவுப் பொருட்களை ஸ்வாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு பிறகே எங்களுக்கு அளிப்பார்கள். அது வரை என்னதான் பசித்தாலும் காத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் என்னும் வழக்கத்தை எங்களிடையே விதைத்தார்கள்.

அந்த வழக்கத்தினால், பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்னும் மூன்று சொற்களின் பயன் என்னவென்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது, நல்ல வேளை என் மனைவியும் அதே வழக்கத்தை கடைபிடிக்கிறாள்.

ஆனால் புதியதாக திருமணம் ஆன என் மகள் சமைத்துக் கொண்டிருக்கும் போது அவள் சமைக்கும் ஒவ்வொரு உணவுப் பண்டத்தையும் முதலில் கொஞ்சம் ருசி பார்த்துவிட்டு வைப்பதைப் பார்த்து அவளிடம் கேட்டேன், முதலில் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்யாமல் இதுபோல நீ ருசித்துப் பார்க்கிறாயே இது நியாயமா என்று.

அதற்கு அவள் சாமர்த்தியமாக என்னிடம் சொன்ன பதில் என்னை யோசிக்க வைத்தது, அப்பா நானே சமையல் கலைக்கு புதியவள் ஏதோ ஒரு தைரியத்தில் சமைக்கிறேன், அதன் ருசி சரியில்லாமல், என் கணவருக்கு அளிப்பதற்கு என் மனம் இடம் கொடுக்கவில்லை. நாம் மரியாதை அளிக்க நினைப்பவருக்கு பதமான சுவையோடு கூடிய குற்றமில்லாத உணவை அளிப்பதுதானே நியாயம். அதனால்தான் நான் ருசித்து விட்டு அந்த உணவுப் பொருட்களில் இருக்கும் குறைகளைக் களைந்து சுவையாக மாற்றி பிறகு அவருக்கு அளிக்கிறேன் என்றாள்.

சாதாரண மானுடப் பெண்ணிற்கே தான் காதலிக்கும் தன் கணவன் மேல் உள்ள மரியாதையாலும் தன்னுடைய அக்கரையினாலும் கணவனுக்கு எந்த விதத்திலும் ஒரு குறையும் வந்துவிடக் கூடாது என்று, தான் ருசி பார்த்துவிட்டு குற்றம் களைந்து பிறகு கணவனுக்கு அளிக்கவேண்டும் என்னும் நல்லெண்ணம் இருக்கிறதே!!

அப்படியானால் ஆண்டாள் எப்படியெல்லாம் அரங்கனை போற்றி இருப்பாள் என்று நினைக்கையிலே மனம் தழுதழுக்கிறது.

ஆத்மார்த்தமாக காதலித்து, பக்தி செய்த அடியவர்களான ஆழ்வார்கள் இறைவனை, மூலப்பொருளை எவ்வளவு உயர்வாக வைத்திருந்தார்கள், என்பதைக் காட்டும் இலக்கியங்கள் நமக்கு பக்தியை உணர்த்துகின்றன.

தான் கடித்துப் பார்த்துவிட்டு குற்றம் நீக்கி ஸ்ரீராமனுக்கு வண்ணமாகவே, சபரி அவைகளை அளித்தாள் என்பதில் வியப்பேதுமில்லை, குற்றமும் இல்லை என்றே தோன்றுகிறது. இச்செய்கை சபரியின் அளவிடமுடியாத பக்தியைக் காட்டுகிறது.

அனைவரும் என் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தும், நம் வீட்டுக்கு வா கண்ணா, என்று பக்தியுடன் அழைத்த விதுரரின் அழைப்பை ஏற்று, அவர்தம் குடிலுக்கு சென்ற பகவான் கிருஷ்ணனைக் கண்ட விதுரர் தன்னை மறந்த நிலையில் வாழைப்பழத் தோல்களை கிருஷ்ணனுக்கு அளித்து பழத்தை கீழே போட்டுவிட்டு நெக்குருகி ஆனந்தக் கண்ணீர் வழிய பரவச நிலையிலிருந்த விதுரரின் நிலையை எண்ணிப்பார்த்து பரவசமடைந்தேன், அப்படி பக்தியோடு அடியவன் அளித்த பழத்தோல்களை சற்றும் முகம் சுளிக்காமல், திருப்தியோடு உண்ட வெண்ணையுண்ட வாயன் கிருஷ்ணனின் லீலை நம்மை வியக்க வைக்கிறது.

சுய நிலை அடைந்து பதறிப்போய் தான் செய்த தவறுக்கு வருந்தி விதுரர் பூரண உணர்வோடு பழத்தை அளித்த போது அதை மறுத்து, தன்னை மறந்த நிலையில் விதுரர் அளித்த வாழைப்பழத்தோலே தனக்கு உவப்பானது என்று அருளி, அடியவர்களின் பக்தி எப்படி இருக்க வேண்டும் என்று நமக்குணர்த்திய பரமன் கிருஷ்ணனின் லீலையை அனுபவிக்கிறேன்.

அப்படி இருக்க ஸ்ரீரங்கன் மேல்பக்தியும், அளவிடமுடியாத காதலும் கொண்ட ஆழ்வார் ஆண்டாள் திருவரங்கனுக்கு எந்த ஒரு தீங்கும் வந்து விடக் கூடாது என்று எண்ணம் கொண்டதால்தானோ தான் சூடி மாலை அவனுக்களித்தாளோ என்று தோன்றுகிறது.

என்னதான் பெரியாழ்வார் பக்தியோடு சுத்தம் செய்த மலர்களைக் கொண்டு மாலை கட்டி இருந்தாலும் அம்மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு சற்றும் உறுத்தல் இல்லாமல் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்து பிறகு ஸ்ரீரங்கனுக்கு அளிக்கலாமே என்னும் எண்ணத்தால் தான் சூடி மாலை தந்தாளோ கோதை என்று தோன்றுகிறது.

இன்னமும் அந்த மாலைகளில் ஏதேனும் குற்றம் இருந்து விடப் போகிறதே, அந்தக் குற்றங்கள் தன்னை பாதித்தாலும் பரவாயில்லை, அரங்கனைப் பாதித்து விடக்கூடாது, அதனால் குறைகளைக் கண்டுணர்ந்து களைய வேண்டுமே என்று நினைத்து குறை ஒன்றுமில்லாத கோவிந்தனுக்கு குறை களைந்து தான் சூடி மாலைதனை அளித்தாளோ ஆண்டாள் என்று தோன்றுகிறது.

ஸ்ரீரங்கனுக்கு ஆண்டாள் ஆழ்வாரா,இரண்டறக் கலந்த பாகம் பிரியாளா, அல்லது தாய்மையோடு கூடிய பாசத்தோடு கூடிய தாயாகவும் ஆனாளா?

அவன் மடியில் தழும் சேயாகவும் ஆனாளா?

அடடா என்னே பெரியாழ்வார் கண்டெடுத்த சின்னாழ்வார் ஆண்டாளின் பெருமை?

அதனால்தான் தாய்க்குப் பின் தாரம் என்னும் சொல்வழக்கு ஏற்பட்டதோ என்று தோன்றுகிறது

அன்புடன்
தமிழ்த்தேனீ