திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Tuesday, January 13, 2009

பரிதி இளம் உழுதி


” சூரிய உழவன் அல்லது பரிதி இளம் உழுதி ”


திரு வள்ளுவன் மனதுழுதான்,
மறுவள்ளுவன் வயலுழுகிறான்
உழுகின்ற நாளெல்லாம் திருநாளே
பரிதியாய் பரிவாய் அவனெழுகின்ற திருநாளே
அவன் வாராத நாளென்றும் வெறு நாளே

கதிரவன் தானே எழுகிறான் கதிர்களால் உழுகிறான் ,
ஏழு வண்ணக் குதிரைகள் தன் தேரில் பூட்டியே
திண்ணமாக வருகிறான் வாழ்வின் இயலுழுகிறான்
தரணியிலே தர்மத்தை பகிர்ந்தளிக்க வருகிறான்
சுற்றுப்பாதை தன்னிலே கட்டுப்பட்டு வருகிறான்
தர்மமென்னும் விதியையே நமக்களிக்க வருகிறான்

பட்டுக் கதிர் சுட்டியே தொட்டு நம்மை அணைக்கவே
தொடர்ந்து மிளிர வைக்கவே,கெட்டவைகள் விலக்கியே
வாழ்வை ஒளிர வைக்கிறான், பட்டு தூய்மையாக்கியே
மனதைக் குளிர வைக்கிறான்,கொட்டும் ஒளி அருளியே
சுழன்று கொண்டே வருகிறான்

தொழுதாலும் தவிர்த்தாலும் பொதுவான அருள்கிறான்
மனிதத்தின் வேருக்கு வலுவாக மிளிர்கிறான்
மண்ணை வளம் செய்ய தரமான வருகிறான்
முப்போக விளைச்சலுக்கு உரக் கதிராக வருகிறான்
தீமை கண்டு பொங்கியே தீமைகளை அழிக்கவே
போகி போகி போகி என்று தீயிட்டுக் கொளுத்துவோம்
உலகுக்கே பொதுவான தர்மத்தின் சக்கரம்
தாயாக நம்மையே தாங்கின்ற நற்கரம் நீட்டுகின்ற
நற்கரம் அருளுகின்ற பொற்கரத்தான் தாளை வணங்குவோம்

அவனளித்த அரிசியும், அருமையான வெல்லமும்,
விளைந்து வந்த கரும்பையும்,வாழவைத்த வாழையும்
அவனளித்த நெருப்பையே அடுப்பில் அங்கு மூட்டியே
அதன் மீது இருத்தியே ஆக்கும் பொங்கல் பொங்கவே
பாலும் ஊற்றி காய்ந்ததும் பொங்கிவரும் வண்ணமாய்
பொங்குகின்ற போதிலே பொங்கலோ பொங்கலென்று
ஓங்கும் குரல் எழுப்பியே ஒளியவனை வணங்குவோம்
பொங்குகின்ற நம் மனதை பொங்கலிட்டு பதப்படுத்தி
தங்குகின்ற மனிதம் தனை தாங்குகின்ற சக்கரம்

நன்மை கொண்டு களிக்கவே, தீமை கண்டு பொங்குவோம்
தீமைகளை கழித்துவிட்டு நன்மைதனை வளர்க்கவே
வாழையடி வாழையாய் வந்ததொரு நன்னாளில்
ஆகாத சோர்வகற்றி ஆன்மாவை வளமாக்கி
புத்தம் புதுமலராய் நித்தம் நித்தம் நம் மனமும்,
மலரும் வண்ணம் ஆரியமோ திராவிடமோ
சாதி மத பேதமின்றி வைய்யமெல்லாம் ஒளிகூட்ட
தவறாமல் மலர்ந்து வரும் தர்மசக்கரம்,

தைமாதத் திருநாளில் விடியும் வேளை
நாமெழுந்து நீராடி நற்காலைப் பொழுதினிலே,
நல் வேளயது தனிலே முத்தான அரிசியுடன்
இனிப்பான வெல்லமதை,அளவோடு நாம் சேர்த்து,
காமதேனு மடிகறந்த அமுதமென்னும் பால் சேர்த்து,
பொங்கி வரும் வேளையிலே,பொங்கலோ பொங்கல்
என்றே நம் வாழ்வும் இன்பமுற இயற்கையின்
தாள் பணிந்தே இறைவன் நாமமது நாம் சொல்லி


நல்லறமும் தருமங்களும்,பொங்கலோ பொங்கலென்று
மனமொத்து உரத்துச் சொல்லி,வையகத்து மாந்தரெல்லாம்
வாழ்வாங்கு வாழ்ந்திடவே,பொய்யகற்றி மெய்யுணர்ந்து
பொங்கல் திருநாளில் மங்கலமாய் நாம் களிப்போம்
நல்லேர் உழவர்களும், சொல்லேர் உழவர்களும்
மனமென்னும் பூமிதனை உழுது விளைத்தல் போல்
ப்ரபஞ்ஜத்தை தினம் உழுது,ஞான ஒளி பரப்பும்
இளம்பரிதி இறைவனுக்கே கதிரவனின் காலடியில்
நன்றி சொல்ல ஒரு வாய்ப்பு நாளாய் எண்ணி
நல்வாழ்வு தனை நாடி நன்மைகளை பொங்கிடுவோம்

ஆர்.கிருஷ்ணமாச்சாரி என்கிற
கவிஞர் தமிழ்த்தேனீ
rkc1947@gmail.com , http://thamizthenee.blogspot.com , http://peopleofindia.net

முப்பது மாலை

ஆண்டாள் ஆழ்வார் இயற்றிய முப்பது பாசுரங்களையும் நாம் எல்லோருமே நம்சிற்றறிவுக்கு எட்டின வரையில் அனுபவித்து வருகிறோம்,

திருப்பாவையின் அதே முப்பது பாசுரங்களை ஸம்ஸ்க்ருதம்,ஹிந்தி,ஆங்கிலம்,இன்னும் பல மொழிகளைக் கற்றவரும், டாக்டர் பட்டம் பெற்றவரும்,ஜனாதிபதி பரிசும் பெற்றவரும் ,ஸ்ரீஸந்நிதி ஸிஷ்யர் திருகோஷ்டியூர் ஸ்வாமி
திருவடியில் காலஷேபங்கள் செய்தவரும்,விஷ்ணுசஹஸ்ரநாம பாஷ்யம் எழுதியவரும்,ஸம்ஸ்க்ருதத்திலும்,ஹிந்தியிலும்,
ஆங்கிலத்திலும்,பல புத்தகங்கள் எழுதியவரும், திருப்பாவை மாலை என்னும்நூலையும் எழுதியவருமான புதுக்கோட்டை ஸ்ரீ உ.வே ஏ ஸ்ரீனிவாசராகவாச்சாரியார் ஸ்வாமி(வைகுண்டவாசி)
என்னும் பெருந்தைகையார்,ஸ்ரீ ந்ரும்மப்ரியா என்னும் புத்தகத்தில் அவருக்கே உண்டான வித்வத் பாணியில் அனுபவித்திருக்கிறார் அதை படித்தவுடன் அனைவருக்கும் தெரியப்படுத்தலாமே என்னும் நோக்கில் அவைகளின் சிறு தொகுப்பை இங்கு இடுகிறேன்
“சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே என்று ஆண்டாள் அருளியதற்கு காரணமே”
ஆண்டாள் திருப்பாவை முப்பதையும் சொன்னது மாத்திரமே தான் என்றாளாம்,அதாவது கவிமார்க்க ரீதியில் கவிகள் தாம் செய்யும் கவனங்கள் தங்களுக்கும் தெரியாமலே உள்ளிருந்து பரவசமாய் வெளிவருவது என்பது கவிகளின் அனுபவ விசேஷம்,
அதுவுமன்றி பதங்களை அடுக்கி அடுக்கி தன்னைப் பெற்ற
பெரியாழ்வாரின் மகிமையை அணிபுதுவைப் பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் என்று கொண்டாடி அப்பேற்பட்டவரின் கோதை என்ற பதத்துக்கும், உண்டாகியிருக்கிற வாக்விபவத்தையும் குறிப்பிட்டவளாய், தான் சொன்ன
என்றதால் அத்தைகைய பெரியாழ்வாரின் புத்ரி ஆனதினாலேயே தனக்கு அப்படிச் சொல்லும் சக்தி வாய்த்தது என்பதையும் நிர்த்தேசிக்கிறாள் என்று அருளும் இவர்


பாசுரம் ------------------- மாலையின் பெயர்


1.நாராயணனே நமக்கே– பாரோர் புகழ்மாலை
2.வையத்து வாழ்வீர்காள்- உஜ்ஜீவன மாலை
3.ஓங்கி உலகளந்த- நீங்காத நிறைந்த செல்வ மாலை
4.ஆழிமழைக்கண்ணா- மார்கழி நீராட்ட மாலை
5.மாயனை மன்னு வட- பாபநாச மாலை
6.புள்ளும் சிலம்பின காண்- உள்ளங்குளிர் மாலை
7.கீசுகீ சென்றெங்கும்- தேஜோ மாலை
8.கீழ்வானம் வெள்ளென்- ஆராய்ச்சியருள் மாலை
9.தூமணி மாடத்து- ஸஹஸ்ர நாம மாலை
10.நோற்றுச் சுவர்கம்- தேற்ற மாலை
11.கற்றுக் கறவை- பொருள் மாலை
12.கனைத்திளங் கற்றெருமை- மான மாலை
13.புள்ளின் வாய் கீண்டானை- கள்ளம் தவிர் மாலை
14.உங்கள் புழக்கடை- பங்கயக் கண்ணான் மாலை
15.எல்லே இளங்கிளியே- மாயன் மாலை
16.நாயகனாய் நின்ற- நேய மாலை
17.அம்பரமே தண்ணீரே- உறங்கா மாலை
18.உந்து மதகளிற்றன்- திறப்பு மாலை
19.குத்து விளக்கெரிய- தகவு மாலை
20.முப்பத்து மூவர்- விளம்பாஸஹத்வ மாலை
21.ஏற்ற கலங்கள்- போற்றும் மாலை
22.அங்கன் மா ஞாலத்து- கடாக்ஷ மாலை
23.மாரி மலைமுழஞ்சில்- பகவந் நியமன மாலை
24.அன்றிவ்வுலகம்- பகவத் க்ருபா மாலை
25.ஒருத்தி மகனாய்ப் பிறந்து- துக்க நிவாரண மாலை
26.மாலே மணிவண்ணா- பகவதநுக்ரஹ மாலை
27.கூடாரை வெல்லும்- பகவத்ஸம்ச்லேஷ மாலை
28.கறவைகள்- புருஷார்த்த மாலை
29.சிற்றம் சிறுகாலே- பாரமைகாந்த்ய மாலை
30.வங்கக் கடல் கடைந்த- ப்ரம்மானந்த மாலை


என்று முப்பது மாலையாக்கி அனுபவித்திருக்கிறார்
இவைகளைப் பற்றிய விளக்கங்கள் படிக்க வேண்டுமென்றால்
டிசம்பர், 2008, ஜனவரி 2009 ந்ரும்ஹப்ரியா ப்ரதிகளைப் படிக்கலாம்


அன்புடன்
தமிழ்த்தேனீ