திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Sunday, March 8, 2015

திருக்கார்த்திகை தீபம் 2015

கார்த்திகை  என்றாலே  இளம் பனி சூழ்ந்த  சுற்றுச் சூழலும், ஆங்காங்கே  ,மாட விளக்குகளும், திருவண்ணாமலை தீப ஜோதியில்   உண்ணாமலை அம்மன்  தன் துணையான  திருவண்ணமலையாருடன்  ஜகத் ஜோதியாக எழுந்தருளி  பக்தர்களின் கண்ணுக்கு  விருந்தாக  காட்சி அளித்தும்    தொலைக் காட்சியிலாவது   அனைத்து பக்தர்களும் கண்டு மகிழும் வண்ணம்
கையிலே  வேர்கடலை உருண்டை, முந்திரி உருண்டை ,அப்பம்  போன்ற  இனிப்பான  தின்பண்டங்கள்.

வாசற்படிக்கு சென்றால்  எல்லா வீட்டின்   முன்பக்க பின்பக்க  சுவர்களில்  அலங்காரமாய் விளக்குகள்ஆஹா  இந்திர லோகமாய்க் காட்சி அளிக்கிறது

கார்மேகம் சூழ்ந்து மாரி பெய்த ஐப்பசி
மாதமும் தான் முடிந்து சீர் மேகமாய்
வானும் தெள்ளத் தெளிவாக முழு மதி
வானிலே தோன்றிடும் வேளையிலே

கார்த்திகை மாத வரவேற்பு கையிலே
தீபமேந்தி மெய்யிலே பட்டுடுத்தி
ஞான விளகேற்றும் மோன தேவதைகள்
தீப விளக்கேற்றி ஆங்காங்கே வைக்கின்றார்

கிழக்கு நோக்கி, திருவண்ணாமலையிலே
பெருந்தீபம் ஜோதியாத் தான் தெரிய
சூரியனும் பூமியிலே தானிறங்கி ஒளிர்கிறானோ
என்றெண்ணித் திகைக்கின்றார் தேவருமே

பூமியிலே நக்ஷத்திரங்கள் தாம் இறங்கி
பூப் பூவாய் ஒளிர்கிறதோ என்றெண்ணி
வான் வெளியிலே அதிசயிக்கின்றார்
முப்பத்து முக்கோடி தேவருமே!

நம் குலப் பெண்டிர் ஏற்றுகின்ற
தீபமெலாம் குலம் காக்க வேண்டித்தானே
குலவிளக்காய்  வந்த அவர் குளித்து
புத்தம் புது மலராய்  புத்தாடை

தாமணிந்து திரு விளக்கை  ஏற்றுதல்
நலமேயாம் தேவர்களும் மகிழ்ந்தே
ஆசீர்வாதங்களை கார் முகிலின் தூரல்களாய்த்
தூதனுப்பி மகிழ்வாரே கார்த்திகைப் பெருநாளில்

அன்புடன்
தமிழ்த்தேனீ



அகில உலகப் பெண்கள் நாள்

                   “அகில உலக பெண்கள் நாள் “

ஒவ்வொரு வருடமும்   மார்ச் மாதம் 8ம் தேதி சர்வதேச பெண்கள்  தினம்   அல்லது  அனைத்துலக பெண்கள் நாள் என்று  கொண்டாடுகிறோம்.
இறைவன்  படைப்பிலே உருவான அத்துணை  ஜீவராசிகளிலும்  பெண்பாலினமும்  ஆண்பாலினமும்  படைக்க்கப் பட்டிருக்கிறது
ஆனால் மனிதர்களத் தவிர  மற்ற ஜீவராசிகள் பெண் அடிமையென்றும் ஆண் ஆளுபவன்  என்றும் பேதம் பார்ப்பதில்லை 
ஆண்கள் கற்பழிப்பு  கொலை போன்ற  செயல்களை செய்து விட்டு  அதை நியாயப்படுத்துவது போலப் பேசுவதும் , பெண்கள்  வீட்டை விட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் வெளியே  வரக் கூடாது  அப்படி வருதல் முறையன்று   என்றெல்லாம்  பிதற்றுவதும் , அப்படிப் பிதற்றும் குற்றவாளியின்  பிதற்றலை பேட்டி எடுத்து மக்களுக்கு  அவற்றை  ஒலி ஒளிக் காட்சிகளாக அளிக்கும் ஊடகங்களும்  தவறாக  தங்கள் விளம்பரத்துக்காகவும்  பணம் ஈட்டுவதற்காகவும்  பயன்படுத்துவதைப் பார்த்தால் நாம் இன்னமும் கற்காலத்திலேயே  இருக்கிறோமா  என்று சந்தேகம் வருகிறது.
. சகோதரியும்  பெண்தான் , தாயும் பெண்தான், மனைவியும் பெண்தான், மகளும் பெண்தான். ஆகவே  ஒவ்வொரு உறவு முறையிலும்  பெண்களை  அந்தந்த  உறவுக்கேற்ப  நடத்த   பழக்கிய பின்னரும்
மாக்கள்  என்னும் நிலையிலிருந்த  நாம்  படித்து  அறிவு பெற்று, விஞ்ஞானத்தில் முன்னேறி நம்மைப் பண்படுத்திக் கொண்டு மக்களாக மாறி இக்காலத்திலும்  இன்னமும் ஆண்களில் சிலர்   மாக்கள்  என்னும் மிருகத்தின்  மன நிலையிலிருந்து  மாறாமல் தராதரம் பாராமல்  எல்லாப் பெண்களையுமே பெண்களை  போகப் பொருளாக பார்க்கும் மனோ நிலையிலிருந்து ஆண்கள் மாற வேண்டும்..
பெண்களைப் பற்றி  பலவிதமான கருத்துகள் ஆண்கள் மனதிலே இருந்தாலும்  தொடக்க காலம் முதலே  பெண்கள் அனைவருமே  ஆண்களுக்கு சமமானவர்கள்  அல்லர் என்னும் எண்ணம் கொண்டவர்கள் ஆண்கள். அதனாலேயே  இலக்கியங்களிலும் , காவியங்களிலும் மற்று சரித்திரங்களிலும்  ,புதினங்களிலும்  இன்றைய  திரைப்படங்கள் நெடுந் தொடர்கள்,  கதைகள்  எல்லாமே இதே கருத்தை  ஒட்டித்தான்  தயாரிக்கப் படுகிறது.
ஆனால் பெண்  என்பவள்   மஹா சக்தி   என்று ஒப்புக் கொள்ளப்படும்   புராணங்களில் கூட  ஒரு குறிப்பிட்ட  எல்லைக்கு  மேல்  ஆண்தான் உயர்ந்தவன்  , பெண்  அவனுக்கு  சேவகம் செய்யவே இருக்கிறாள்  என்றே போதிக்கப் படுகிறது.
இந்த  நவீன  விஞ்ஞான யுகத்திலும்   இன்னமும்  ஆண்களும் பெண்களை சரியாக உணரவில்லை , பெண்களும்  தங்கள் சக்தியை  முறையாக  முழுமையாக உணரவில்லை  என்றே  தோன்றுகிறது.
பழைய  காலத்திலிருந்து  ஒரு சொல்வழக்கு   இன்னமும்  தொடர்கிறது, அது    “ பெண் புத்தி  பின் புத்தி “ என்பது
அந்தச் சொல்வழக்கை  நாம் தவறாக பொருள் புரிந்துகொண்டிருக்கிறோமோ  என்பது என் சந்தேகம்.  ஒரு பெண் குழந்தை  பிறக்கிறது,  பெண் குழந்தைகள் கர்ப்பகாலத்தில் அதிக காலம் கர்ப்பக் க்ருகத்தில் இருக்கும் ஆனால் ஆண்குழந்தை குறிப்பிட்டபடி 10 மாதத்திலேயே பிறந்துவிடும்,
பெண் குழந்தைகள் தாமதமாக  பிறக்கும், ஆண் குழந்தைகள் சீக்கிம் அதாவது  பத்து மாதங்களுக்கு முன்னரே பிறக்கும் ,இது அனுபவ பூர்வ உண்மை
ஆண் முந்திக்கொள்கிறான்,  ஏனென்றால் எல்லாவற்றுக்கும் அவசரம் , நிதானமின்மை. இல்லறத்தில் அவசரப்பட்டு உணர்ச்சி கொள்பவன் ஆண் ,அதே போல அவசரமாக உணர்ச்சிகள் தணிந்து போவதும் ஆணுக்குதான்
ஆனால் பெண் அப்படியல்ல  யோசிப்பவள், நிதானமாக தீர்க்கமாக யோசித்து  செயலாற்றுபவள்,  பெண்கள் மிக நிதானமாக  உணர்ச்சி கொள்வார்கள், அதேபோல் அதிலேயே தங்கி  நிதானமாக உணர்ச்சியை  தணிப்பார்கள். எல்லாச் செயலிலும் பெண்களுக்கும் ஒரு நிதானம் இருக்கும்
ஒரு குடும்பத்தில் உருக்கும் ஆண்கள் மூத்தவர்களாக இருந்தாலும்  அந்தக் குடும்பத்தில் இருக்கும்  பெண்  ஆலோசனைகளை   சரியாகச் சொல்லும் திறம் கொண்டவளாக இருப்பாள்.  பெண்களை மதிக்காத  ஆண்கள் விவேகமில்லாதவர்கள்.
நான் அடிக்கடி சொல்வேன் பெண் ஒரு சிறந்த  நிர்வாகியாய் இருக்கிறாள் என்று தெரிந்தால்  கணவன்  நிர்வாகத்தை அவளிடம் கொடுக்கலாம். இவனை விட அவள் நிர்வாகத்தை நன்று திட்டமிட்டு நடத்துவாள் என்று
ஆனால் வேதப்படிப் பார்த்தால்முதலில் தோன்றியவள் சக்தி,ஆதிசக்தி, அந்த ஆதிசக்தி தோன்றிய பின்னர்தான்  அந்த ஆதி சக்தி தன்னிலிருந்து விஷ்ணுவை உருவாக்கினாள், விஷ்ணுவின் நாபிக் கமலத்திலிருந்து ப்ரும்மாவை தோற்றுவித்தாள், அதன் பின்னர் சிவனைத் தோற்றுவித்தாள் ஆகவே பெண் புத்தி பின்னால் விளையப் போகும் அனைத்தையும் அறிந்த பின் புத்தி என்று பொருள் கொள்வோமே.
இயற்கையிலேயே  கவனித்துப் பார்ப்பவர்களுக்கு புரியும்
பெண் குழந்தைகள் வெகு சீக்கிமே  கவிழ்ந்து கொள்ளும், தவழத் தொடங்கும்,உட்காரத் தொடங்கும், நிற்கத் தொடங்கும், நடக்கத் தொடங்கும்,
ஆனால் ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகளைவிட காலதாமதமாகவே அனைத்து இயக்கங்களையும் செய்யும்,
ஏன் இப்படி என்று ஊன்றிக் கவனித்தால் இறைவனின் படைப்பின் ரகசியம் ,ஆச்சரியமான  விஞ்ஞான ரகசியம் புரியும்
இயல்பாகவே குழந்தைப் பருவத்தில் பெண்களுக்கு உடல் உறுப்புகள்
உடலின் எந்த பாகத்திலும் வெளியே துறுத்திக்கொண்டிராது,
ஆனால் ஆண் குழந்தைகளுக்கு  முக்கியமான உறுப்புகள் உடலைவிட்டு வெளியே துறுத்திக்கொண்டிருக்கும்
ஆதலால் முதலில் இயக்கங்களை தொடங்கும் பெண் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் வராது, ஆனால் ஆண் குழந்தைகள் வேகமாக இயங்கத் தொடங்கினால், பழக்கமின்மை காரணமாக கீழே விழுந்தால் துறுத்திக்கொண்டிருக்கும் ஆண் உறுப்பில் தாக்குதலை வாங்க வேண்டி வரும்,   அதனால் இயக்கங்கள் உடல் உறுதி பெற்று பெற்றுத்தான் மெதுவாக இயங்கும் ஆண் குழந்தைகளுக்கு, ஆனால் தாமதமாக வந்தாலும் பெண் குழந்தைகள் தளர்ச்சியின்றி வரும்
அதைத்தான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவாரு  என்பர்
எந்த ஒரு மோசமான சூழ்நிலையிலும் பெண்கள் நிதானப் படுத்திக்கொண்டு யோசிப்பதைப் போல ஆண்களால் முடிவதில்லை
உதாரணமாக ப்ரசவ காலத்தில், பத்து மாதம் சுமக்கும் காலத்திலும்,ப்ரசவம் நிகழும் நேரத்திலும், பதறாமல் இருக்க பெண்களால் முடியும்
ஆனால் அந்தப் பெண்கள் மேல் பாசம் வைத்திருக்கும் ஆண்கள் பதறிக்கொண்டிருப்பார்கள்,
ஆனால் வெற்றிகரமாக ப்ரசவத்தையும் முடித்துக்கொண்டு கணவனுக்கும் ,தகப்பனுக்கும் தைரியம் சொல்பவள் பெண்
இன்னும் நுணுக்கமாக ஆராய்ந்தால்
பிறப்பு என்றால் இறப்பும் இயற்கையே
ஒரு பெண்ணை  தவிக்க விட்டுவிட்டு ஒரு ஆண் அதாவது கணவன் இறந்து போகும் நிலை எற்பட்டால் துக்கத்தையும் ,சோகத்தையும் தாங்கிக்கொண்டு ஒரு பெண்ணால் அவளுடைய அடுத்த கடமைகளை கவனிக்க மனவலு இருக்கிறது,அந்தப் பெண் தாயுமாகி தந்தையுமாகி அனைவரையும் அரவணைத்துக்கொண்டு மீண்டு விடுவாள், தன் குழந்தைகளையும் நல்ல நிலைக்கு உயர்த்திவிடுவாள், ஆனால்
அப்படி கணவனை விட்டு மனைவி இறக்கும் நிலை வந்தால் ஒரு ஆணால் பதறாமல்,எண்ணம் சிதறாமல் இருக்க முடிவதில்லை, அவனுடைய கடமைகளை சரியாக நத்த முடிவதில்லை என்பது கண்கூடு,ஒன்று அவன் குழந்தைகளை,கடமைகளை  சரிவர ஆற்ற முடியாமல் திகைத்துப் போவான், மனமொடிந்துபோவான்,  பதறுவான்  அல்லது மனம் சிதறுவான். தன் சுகத்துக்காக தன் கடமைகளை மறந்து மற்றோர் பெண்ணை நாடி, தான் பெற்ற குழந்தைகளையும் தன் பெற்றோர்களையுமே மறந்துவிடும் ஆண்கள் தான் அதிகம்,  தாயுமானவன்  என்னும் உயர்ந்த நிலையை அடையும் ஆண்கள் கோடியில் ஒருவரே. 

நிதானமாக  ஆராயாமல்  அவசரகதியில் முடிவுகளை எடுப்பவன் ஆண்.  நிதானமாக யோசித்து தீர்க்கமான முடிவுகளை எடுப்பவள் பெண்
அதனால்  பெண் புத்தி பின் புத்தி என்பதை, பின்னால் வரபோக்கும் எந்த ஒரு நிகழ்விலும் பதறாமல். முன்கூட்டியே யோசித்து முடிவெடுக்கும் தீர்க்க தரிசிகளுக்கு பின் புத்தி என்று பெயரென்றால்
அதை அப்படியே ஒப்புக்கொள்கிறேன்  ஆமாம்
 பெண் புத்தி பின் புத்திதான் 

அன்புடன்
தமிழ்த்தேனீ