திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, February 19, 2009

நிலப்பிரண்டை

சமீபத்தில் நான் நடித்துக்கொண்டிருக்கும் கோகுலத்தில் சீதை என்னும் தொலைக் காட்சித் தொடரில் நடிப்பதற்காக சென்ற ஒரு இடத்தில் எனக்கு மனைவியாக நடிக்கும் ஒரு பெண்மணியின் தகப்பனார் சேலத்து ஆசாமி,சுமார் 80
வயது இருக்கும், அவரிடம் அவரிடம் ஆத்மஞானம், இந்துமதம், நம் நாட்டின் பெருமைகள், என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கடைசியாக அவருடைய ஊரான
சேலத்தைப் பற்றி கேட்டேன், அப்போது அவர் கூறிய விவரங்களை வீட்டுக்குவந்து எழுதினேன்’அந்த விவரங்கள்:


சேலத்தில் மிகவும் விசேஷமான
கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு)

மலைமேல் அர்தநாரீச்வரர் திருக் கோயில்
ஆங்கே ஆணும் பெண்ணும் சமம் என்பதை நிருப்பிக்கும் வகையில் இறைவன் ஆண்பாதி,பெண்பாதியாய் அர்தநாரீஸ்வரராய்க் திருக் கோலம் கொண்டுள்ளார்

ஆங்கே மலைமேலே உள்ள கருப்பக்கிரகத்தில்
அந்த அர்தநாரீஸ்வரர் பெருமானின் திருவடியின் கீழே
ஒரு சுனை இருக்கிறது எப்போதும் வற்றாத சுனை அது
அருச்சகர் அர்ச்சனை முடித்த பின் அந்தச் சுனையிலிருந்து நீரை எடுத்து பக்தர்கள் மேல் தெளிப்பர், பக்தர்களும் அந்த நீரை அருட் ப்ரசாதமாய் வணங்கி ஏற்றுக் கொள்வர்

அதே சேலத்திலே கஞ்ச மலை என்றொரு மலை இருக்கிறது, ஆங்கே சித்தர் கோயில் ஒன்றும் இருக்கிறது, இன்றும் அங்கே சித்தர்கள் வலம் வருகிறார்களாம்,
அந்த மலையின் அடிவாரத்திலே தடையாண்டி ஊற்று என்றொரு ஊற்று இருக்கிறது, ஈரோடு ,சீரகாபாடி பக்கம் வருகிற இந்த ஊற்றுத்தண்ணீர் பல வியாதிகளுக்கு,
குறிப்பாக மேகரோகம்,போன்ற சரும வியாதிகளை குணமாக்கும் மூலிகைத்தண்ணீர் என்பது நம்பிக்கை
ஆனால் உடலில் சோப்பு போன்றவைகளை தடவிக் கொண்டு குளிக்கக் கூடாது,என்கிறார்கள் அங்கிருப்பவர்கள்
கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு)

கொங்குநாட்டுத் தலம். இத்தலம் சங்ககிரிதுர்க்கம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 9 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. ஈரோட்டி லிருந்தும் நாமக்கல், சேலம் ஆகிய ஊர்களிலிருந்தும் பேருந்து மூலமாகவும் இத்தலத்தை அடையலாம். மலைமேல் கோயில் வரை செல்லப் பேருந்து வசதி உள்ளது.இத்தலம் திருச்செங்கோடு, திருச்செங்குன்றூர், நாகாசலம் என வழங்கப்பெறும். மேலவீதியிலிருந்து பார்த்தால் மலை, நாகம் போல் தோன்றுவதால் நாககிரி எனப்பெற்றது. சுப்பிரமணிய சுவாமி சந்நிதி தனியே அமைந்துள்ளது. சுவாமி சந்நிதி மேற்குப் பார்த்தது. முருகன் சந்நிதி கிழக்குப்பார்த்தது. விஷ்ணுகோயில் கோயிலுக் குள்ளேயே தனியேயிருக்கிறது. சுவாமி அர்த்தநாரீசுவரர். அம்மை பாகம்பிரியாள்; அர்த்தநாரீசுவரி. விஷ்ணுவுக்கு ஆதிகேசவப் பெருமாள் என்று பெயர். அர்த்தநாரீசுவரர் பாதத்தில் ஒரு சிறு ஊற்று இருக்கிறது. இது விறல்மிண்ட நாயனாருடைய அவதாரஸ்தலம். தீர்த்தம் பிரமதீர்த்தம் முதல் 16 தீர்த்தங்கள் உள்ளன. முழுநிலவு நாளிலும் , மறை நிலவு நாளிலும் பக்தர்கள் அந்த மலையின்மேல் சென்று இரவு தங்குவார்கள்,உண்பதற்கு வேண்டிய,உணவுப் பொருட்களை மட்டும் எடுத்துச் சென்ரால் போதும், சுத்தமான குடிதண்ணீர் ஆங்கே மலைமேல் கிடைக்கிறது ஆங்கே மலைமேல் கிணறு மற்றும்,சுத்தமான ஓடை இருக்கிறது, அடிவாரத்தில் உணவு விடுதிகள் இருக்கின்றன,ஆனால் சைவ உணவு மட்டுமே கிடைக்கும் ,அசைவ உணவு விடுதிகளுக்கு அங்கே தடை விதித்திருக்கிறார்கள், ஒவ்வொரு முழுநிலவு நாளிலும்,மறை நிலவு நாளிலும்,குறைந்தது ஐம்பதாயிரம் பேர் வருகிறார்கள், அதேபோல கொல்லி மலையிலும்,இன்னும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக மக்கள் நம்புகின்றனர்

கொல்லி மலையில் இந்தியாவிலேயே பெரிய மூலிகைப் பன்ணை அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது, மற்றும் செம்மேடு, சுவாலக்காடு, அரபளீஸ்வரர் திருக்கோயில்,
கொல்லி மலை நீர்விழுச்சியில் நீராடி அரபளீஸ்வரரை தரிசனம் செய்வார்கள்,இந்தியாவிலேயே கரடிகள் இந்த பகுதியில் மிக அதிகம்ம் அந்த மலையிலே வாழும் பூர்வகுடிகள் மலைவாழ் மக்கள் என்றும், மலைக்
கௌண்டர்கள் என்றும் அழைக்கப் படுகின்றனர்,அந்தக் கொல்லி மலையில் மரங்களில் பாம்புகள் தலை கீழாகத் தொங்கிய படி இருக்கும் காட்சியை காணலாம், பலாப்பழம்,அன்னாசி,,பேரிக்காய்,கொய்யா, மாம்பழம், காப்பி,அதிகம் விளைகிறது,மான்களும் மயில்களும் அங்கே சுற்றித் திரியும் அந்தக் கொல்லி மலையின் அடிவாரத்திலே

வசிய மை விற்போர் அதிகம்பேர் இருக்கிறார்கள்,அவர்கள் விக்ஸ் டப்பா என்று சொல்லும் ஒரு டப்பாவிலே மையை நிரப்பிக் கொடுத்துவிட்டு அதற்கு வசிய மை என்று பெயர் சொல்லுவார்கள், அவற்றை நம்பி 300, 400 ரூபாய் கொடுத்து வாங்கி ஏமாறுவோர் பலர், அந்த கொல்லி மலையில்
குறிப்பாக இரண்டு வேர்களைப் பற்றி கூறுகிறார்கள்

1.தலைவணங்கி வேர்

இந்தத் தலைவணங்கி வேரை வைத்திருப்பவர்களை யாரும் எதிர்க்க மாட்டார்கள் ,பணிந்து போவார்கள் எதிரிகள் என்று சொல்லுகிறார்கள்,

2,மலைமுழுங்கி வேர்

இந்த மலை முழுங்கி வேரை வைத்திருப்பவர்களுக்கு எப்படிப்பட்ட கடினமான
காரியங்களையும் அனாயாசமாக செய்யும் ஆற்றல் வந்து விடும் என்று சொல்லுகிறார்கள்,அது மட்டுமல்ல அவர் என்ன காரியங்கள் செய்கிறார், எப்படிச் செய்கிறார்,என்னும் ரகசியங்களை மற்றவர் கண்ணிலிருந்து மறைக்குமாம் அந்த
வேர்,எப்படிப்பட்ட சிக்கலில் மாட்டிக்கொண்டாலும், அதிலிருந்து மீண்டு வர இந்த மலைமுழுங்கி வேர் உபயோகப்படும் என்று சொல்லுகிறார்கள்,இவற்றையெல்லாம் விட அதிசியமாய் ஒரு செய்தி சொல்லுகிறார்கள், அந்தக் கொல்லி மலையில் தரையிலே ஒரு செடி தன்னைத்தானே சுற்றிக்கொண்டே இருக்குமாம், அந்தச் செடிக்குப் பெயர் நிலப்பிரண்டை என்று சொல்கிறார்கள், நிலத்திலே பிரண்டு கொண்டே இருக்குமாம், அந்த நிலப்பிரண்டைச் செடி பல நோய்களைத் தீர்க்கும் சஞ்சீவினி ,மூலிகை என்றுசொல்லுகிறார்கள், மூலிகைகளைப் பற்றிய விவரங்கள் தெரிந்தோர் கண்ணுக்கு மட்டுமே தென்படுமாம்,அந்த நிலப்பிரண்டை செடியை அவர்கள் மூலிகை எடுக்கும் விதமாக காப்புகட்டி மந்திர உச்சாடனம் செய்து பிறகு ஒரு குறிப்பிட்ட வேளையில்தான் எடுப்பார்களாம்,அப்படி எடுத்து வந்த நிலப்பிரண்டை செடியை சுத்தமானஇடத்தில் வைத்து, அதற்கு வேண்டிய பூசைகளை செய்து பத்திரமாக பாதுகாத்தால் அந்த செடி மிக நன்மை பயக்குமாம்சமீபத்தில் கொல்லி மலைக்கு சென்றிருந்த ஒரு நண்பர் கூறினார் , அவர் நடந்து வரும் போது செடிகளே இல்லாத சமதரையில் திடீரென்று அவர் கண்ணில் பட்டிருக்கிறது அந்தச் செடிகள், அவை தன்னைத்தானே சுற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்து வியந்த அவர் அந்தச் செடிகளின் அருகிலே சென்றவுடன் அவை சுழலுவதை நிருத்தி விட்டனவாம், அதன் இலையைப் பறித்து முகர்ந்து பார்த்திருக்கிறார்,அவருக்கு எந்த ஒரு மணமும் கிடக்கவில்லை ,அவ்வழியாக வந்த ஒரு பெரியவர் இவரிடம் வந்து என்ன பார்க்கிறாய் என்று கேட்க இவர் அந்தச் செடியைக் காண்பிக்க கையை அங்கே நீட்டிய போது அந்தச் செடிகள் இருந்த சுவடே தெரியவில்லையாம்

மீண்டும் அந்தப் பெரியவர் கையைக் காட்டியவுடன் அந்தச் செடிகள் பரவலாக கண்ணுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது,அப்போது அந்த பெரியவர் கூறினாராம் அந்தச் செடிக்குப் பெயர் நிலம் பிரண்டை ,அது ஒரு மூலிகை என்று சாதாரணமாக நம் வீட்டில் வைத்திருக்கும் துளசி, வேப்பிலை,கருவேப்பிலை, போன்ற செடிகளில் இருந்து கூட அந்தச் செடிகளின் அனுமதியை மனதாரக் கேட்டு பின்தான் பறிக்க வேண்டும் என்பர், அப்படி இருக்க அபூர்வ மூலிகைகளை பறிக்கும் போது காப்பு கட்டி மந்திர உச்சாடனம் செய்து எடுத்தால்தான் பலன் தரும்,அதிலும் குறிப்பாக அந்த மந்திர உச்சாடனங்கள் ஒவ்வொரு மூலிகைக்கும் ஏற்றவாறு நாட்கள், நேரங்கள், மாறு படும் , உருவேற்றும் பொழுது உருவேற்றுபவரின் மனதிலேயே ஒரு அறிகுறி காட்டுமாம், உச்சாடனங்களின் நிறைவை.


அன்புடன்
தமிழ்த்தேனீ