திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Wednesday, February 2, 2011

”கனவு மெய்ப்படவேண்டும் “ சிறு கதை வல்லமை இதழில்

 ”கனவு மெய்ப்பட வேண்டும்” சிறுகதை வல்லமை இதழில் படிக்க  சொடுக்குங்கள்
http://www.vallamai.com/?p=1874

அரங்கமே மின்விளக்குகளாலும் அனைத்து நாடுகளின் விஞ்ஞானிகளாலும் பொதுமக்களாலும் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. அதி நவீன கணினியின் உதவியால் அரங்கத்தின் திரையில் எல்லா நாடுகளும் கண்டு களிக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்ட வெள்ளித் திரை மின்னிக்கொண்டிருந்தது. ஒரு அதி நவீன நான்கு சக்கர விசை வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. எல்லோர் முகத்திலும் ஆச்சரியக் குறி நிரந்தரமாக அவதானித்திருந்தது.


ஒரு பக்கம் நவீன விஞ்ஞானத்தில் முன்னேறி இருந்தாலும் அதிகமாக எரிபொருளை இயற்கையாகவே வைத்திருக்கும் நாடுகளிடம் எரிபொருளுக்குக் கையேந்தும் நிலை. மற்றொரு பக்கம் எரிபொருளின் விலையைக் குறைக்க வழி தெரியாமல், மாற்று எரிபொருளை இயற்கையான சூரிய வெளிச்சத்திலே இருந்து கண்டுபிடித்தாலும் நீரிலே உள்ள சக்தியை எரிபொருளாக உபயோகிக்கும் வழிமுறைகள் தெரிந்தும் அந்தத் தொழில்நுட்பங்களை வளர்க்காமல் தங்களை மட்டுமே வளர்த்துக்கொள்ளும் சுயநல அரசியல்வாதிகள் ஒரு புறம்.

இப்படி இருக்கும் இந்த நிலையில் மக்களுக்கு ஆச்சரியம் கலந்த ஆனந்தம். மாற்று ஏரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதா! அதுவும் குறைவான செலவில் அதிக சக்தி அளிக்கும் மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதா! பெட்ரோல், டீசல், மின்சாரம் போன்ற அத்துணை எரிபொருட்களுக்கும் விமானத்துக்கும் அணு ஆயுதத்துக்கும் விண்கலத்துக்கும் அதையும் தாண்டி உலகத்தில் தேவையாய் இருக்கும் அத்துணை சக்திகளுக்கும் மாற்றாகப் பயன்படுத்தும் வகையில், உலகமே மின்சாரத் துணை இல்லாமல் இரவிலும் பகலிலும் ஒளியோடு மின்சாதனப் பொருட்கள் அத்தனையும் இயங்கும் வசதியோடு மொத்தமாக ஒரு மாற்றுக் கண்டுபிடிப்பு நிகழ்த்தியிருக்கும் விஞ்ஞானி ‘ஆதிமூலத்தை’ மேடையிலே காணப் போகும் பரபரப்பு, பிரபஞ்சத்தின் ஆச்சரிய விழிகளை இமை மூடாமல் வைத்துக்கொண்டிருந்தது.

உலகத்தில் இருக்கும் அத்தனை தொலைக்காட்சிகளும், ஒருங்குவிக்கப்பட்டு உலக மக்கள் அத்தனை பேருமே, திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள், விளையாட்டுச் செய்திகள்… அத்தனையும் மறந்து விட்டு தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் ஆச்சரியத்துடன் காத்திருந்தனர்.

திரையிலே விஞ்ஞானி ஆதிமூலம், ஒரு மந்திரவாதி போல் தன்னுடைய தளர்ந்த நடையுடன் நிதானமாக நடந்து வந்து, நடு மேடையில் நின்று, அத்தனை பேரையும் குனிந்து வணங்கினார். அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது…!!!! அடங்கியது!!

விஞ்ஞானி ஆதிமூலம் பேச ஆரம்பித்தார்.

“இன்னும் சில நிமிடங்களில் நம்முடைய கண்டுபிடிப்பான அத்துணை சக்திகளுக்கும் ஒரே தீர்வான மாற்றுப் பொருள், இங்கு அனைவருக்கும் காட்டப்படும். அதற்கு முன்னால் ஒரு சிறு விஷயத்தை எல்லோரும் பகிர்ந்துகொள்ளுவோம். எனக்கும் என் மகனுக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சிறு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் முடிவில் என் மகன் சொன்னான், ‘மனிதன் நினைத்தால் எல்லாவற்றையும் படைக்க முடியும். ஆகவே கடவுள் என்பது பிரமை. வேண்டுமென்றே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. கடவுள் என்பது மாயை’ என்றான். அவன் சொன்ன அந்தச் சொல்தான் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்த, என்னைத் தூண்டியது.

நான் சொன்னேன், ‘ஏற்கெனெவே இருக்கும், அல்லது படைக்கப்பட்டிருக்கும் மூலப் பொருள் இல்லாமல் எதையுமே மனிதரால் உருவாக்க முடியாதென்று. மனிதன் கண்டுபிடிக்கிறான். உருவாக்குவதில்லை. எப்போதும் மனிதனால் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லாததைப் புதியதாக உருவாக்க முடியாது. இருப்பதைத்தான், கண்டுபிடிக்கத்தான் முடியும். ஆகவே எப்போதும் இறையை, மூலத்தை, இல்லையென்று சொல்ல முடியாது’ என்றேன்.

ஆனால் அவன் வார்த்தைகள் என்னை மனிதனின் உச்சக்கட்ட சக்தியை எட்ட வேண்டும் என்று வெறிகொள்ள வைத்தது. அதன் முடிவுதான் இப்போது நாம் கண்டுபிடித்திருக்கும் மாற்றுப் பொருள்.”

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென்று அரங்கமே இருளில் மூழ்கியது ஒரே ஒரு விநாடிதான். மறுபடியும் மீண்டும் ஒளிவெள்ளம் சூழ்ந்தது.

“இப்போது நாம் கண்டு பிடித்திருக்கும் மாற்று மூலப் பொருளால்தான் இந்த அரங்கமும் செயல்படுகிறது” என்றார் ஆதிமூலம். விஞ்ஞானி ஆதிமூலத்தின் கையில் ஒரு சிறு குப்பி இருந்தது. அந்தக் குப்பியிலிருக்கும் சிறு மாத்திரை வடிவில் இருந்த ஒரு மாற்றுப் பொருளைக் கையிலெடுத்து ஒரு முறை காட்டிவிட்டு அந்த மாத்திரையை மேடையில் இருந்த ஒரு நான்கு சக்கர விசை வாகனத்தின் எரிபொருள் நிரப்பும் சேமிப்பு அறையின் வாயில் இட்டார் ஆதிமூலம். இப்போது இந்த வாகனத்துக்கு நான் அளித்த, நம்முடைய கண்டு பிடிப்பான மாற்றுப் பொருளின் உதவியால் வாகனம் இயங்கத் தொடங்கும் என்றார். இயங்கத் தொடங்கியது…. புகையோ, நாற்றமோ, வெப்பமோ இல்லாமல்.

அவர் சொன்னார், “இனி இவ்வாகனத்துக்கு பல வருடங்களுக்கு எரிபொருள் தேவை இல்லை” என்று. உலகமே அதிர்ந்தது…. கைகூப்பியது. மகிழ்ந்தது. “இனி எப்போதும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு என்னும் பேச்சுக்கே உலக அளவில் இடமில்லை” என்றார் விஞ்ஞானி ஆதிமூலம்.

ஒரு விமானம் பரிசோதனை முயற்சியில் பறக்க ஆரம்பித்தது….. ஒரு விண் கலம் மாற்றுப் பொருளின் உதவியால் நெருப்போ, வெப்பமோ இல்லாமல் அதி விரைவாக வானில் உயர்ந்தது இலக்கை நோக்கி பறந்தது. உயிரோட்டமான காட்சி அரங்கத்தில் இருந்த திரையில் நேரிடைக் காட்சியாக காட்டப்பட்டது. உலகம் ஆச்சரியத்தினால் மௌனமானது. அந்த மௌனத்தைக் கிழித்துக்கொண்டு மீண்டும் ஆதிமூலம் பேச ஆரம்பித்தார்.

“கண்டு கொண்டேன் மூலப் பொருளை. நாம் கண்டுபிடிக்கும் அனைத்து விஞ்ஞான சாதனங்களுக்கும் சக்திகளுக்கும் தேவையான மாற்று மூலப் பொருளைக் கண்டுகொண்டேன். இப்போதும் சொல்கிறேன் இந்த மாற்று மூலப் பொருளை ஏற்கெனெவே இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் மூலப் பொருட்களை வைத்துத்தான் உருவாக்கினேன் ஆகவே மூலப் பொருளில்லாமல் எதையும் உருவாக்க முடியாது என்பது நிரூபணமாகிவிட்டது. ஆகவே அனைத்துக்கும் மூலப் பொருளாகிய ‘ஆதிமூலத்துக்கு’ நன்றி..

நான் ‘ஆதிமூலம்’ என்று சொன்னது என்னையல்ல, இறைவனை….. ஆகவே ‘இறைவனுக்கு’ வணக்கம்” என்றார்…. உலகமே அதிர்ந்தது……… தலை வணங்கியது!

விஞ்ஞானி ஆதிமூலமும் தலைவணங்கினார். எங்கிருந்தோ ஒரு துப்பாக்கியின் தோட்டா, அவருடைய இதயத்தின் மையப் புள்ளியைத் தாக்கியது.



 
அன்புடன்

தமிழ்த்தேனீ