திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, June 26, 2008

பழமொழி ஆய்வு எண் 10

சாண் ஏறினால் முழம் வழுக்கும்

எண் சாண் உடலுக்கு சிரசே ப்ரதானம்
அவரவர்க்கு அவரவர் கை அளவே ஒரு சாண் என்பது
அவரவர் கையாலே அளந்து பார்த்தால் அவரவர் உடல்
எட்டு சாண் அளவைக் கொண்டதாக இருக்கும்
அவர்களின் முழங்கையின் அளவே முழம் என்று சொல்லுவார்கள்
அதனால்தான் இப்போதும் பூக்காரிகள் தங்களுடைய
முழங்கையின் அளவையே ஒரு முழம் என்று
அளந்து பூ விற்கிறார்கள்
இன்னும் சற்று யோசித்து சிறு பெண்களை
போடவைத்துவிட்டு கொஞ்சம் ஒதுங்கியே உட்கார்ந்து
பணத்தை மட்டும் வாங்கி மடியில் சொறுகிக் கொள்ளுவார்கள்
அவர்களின் கணக்குப்படி சிறு பெண்ணின் முழங்கை அளவு
பூ அளந்து கொடுக்கும்போது ,பூ வாங்குவோருக்கு
கண்ணில் முழம் அளத்தல் பட்டாலும் பெறும் அளவு
குறைவாகவே இருக்கும் அதனால் லாபம் அதிகம்
வரும் என்பது அந்தப் பூக்காரிகளின் திறமையான கணக்கு


என்ன ஒரு கணக்கு இறைவனின் கணக்கு
சரியான விகிதாசாரத்திலே அமைக்கப்பட்ட படைப்புகள்
இதை ஆராய்ந்து சொல்லிய பெரியோர்கள் எவ்வளவு அறிவாளிகள்....?

முன்பெல்லாம் வழுக்கு மரம் என்று ஒன்றைத் தயார்
செய்வார்கள், அந்த வழுக்கு மரத்தை நன்றாகத் தேய்த்து
பிசிறில்லாமல் வழு வழு வென்றிருக்கும்படி செய்வார்கள்
அந்த வழுக்கு மரத்தில் விளக்கெண்ணையை நன்கு பூசுவார்கள்
பிறகு அந்த மரத்தின் உச்சியில் ஒரு பண முடிப்பை
கட்டுவார்கள், அதன் பிறகு அந்த வழுக்கு மரத்தை
ஒரு குறிப்பிட்ட இடத்தில் செங்குத்தாக நடுவார்கள்
அந்த மரம் ஒரு குறிப்பிட்ட உயரத்தைக் கொண்டிருக்கும்

மக்களின் மனோ உறுதியை சோதிக்க பந்தயம் கட்டுவார்கள்
யார் அந்த வழுக்கு மரத்தில் ஏறி அந்தப் பணத்தை
எடுக்கிறார்களோ அவர்களுக்கே அந்தப் பணம் என்று,
மக்களுக்கு விடாமுயற்சியை,மனோதிடத்தை, ஏற்படுத்த
இது போன்ற போட்டிகள் வைப்பார்கள்
பலர் அந்த வழுக்கு மரத்தில் ஏறி தங்களின் விடா முயற்சியை
மனோதிடத்தை தங்களே பரிசோதித்துக் கொள்ளும் முறையில்
முயற்சி செய்வார்கள்,
அப்படி அந்த வழுக்கு மரத்தில் ஏற முயற்சி செய்பவர்கள்
தங்கள் உள்ளங் கால்களாலும், உள்ளங் கைகளாலும்
உள்ளத்தில் உறுதியோடும் ஏற முற்பட்டாலும் அந்த வழுக்கு மரத்தின் இயல்புக்கு ஏற்ப அது வழுக்கிக் கொண்டே இருக்கும்
உள்ளங்கைகளால் பிடித்து அந்த முயற்சியை அவர்கள்
செய்யும் போது உள்ளங்கையின் அளவாகிய சாண்
என்னும் அளவு அந்த மரத்தில் ஏறும்போது
அது ஒரு சாண் ஏறுதலாகிறது,மேலும் முழங்கையின் பிடிமானத்தை துணைக்கு அழைத்துக் கொள்ளும் அவர்களின் உடல் வழுக்கும் போது முழங்கையின் அளவாகிய ஒரு முழம் அளவுக்கு கீழே இறங்கி விடுகிறது,ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும் அதன் வழுக்கும் தன்மையினால் அவர்கள்வழுக்கி கீழே இறங்கும் அளவைப் பார்த்தால் ஒவ்வொரு முறையும் ஒரு முழம் அளவுக்கு
கீழே இறங்கி விடுவர்,மீண்டும் முயற்சி செய்து ஒரு சாண் ஏறுவர்
அவ்வளவு கடினமான முயற்சியிலும் வெகு சிலரே மரத்தின்
உச்சி வரை ஏறி தான் எண்ணிய காரியத்தை முடிப்பர்

ஆகவே முயற்சி என்று செய்ய ஆரம்பித்தால் வரும் தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து போராடி முன்னுக்கு வரவேண்டும்
முழம் சறுக்கினாலும் சாண் ஏறிவிட்டோம் என்னும் எண்ணத்தை நம் மனதில் ஆழப் பதித்துக் கொண்டு முன்னுக்கு வந்து லட்சியத்தை
அடைய வேண்டும் என்று நம்மை ஊக்குவிக்கவே

சாண் ஏறினாலும் முழம் சருக்கும்
என்று நம்மை எச்சரித்துவிட்டு சென்றனரோ பெரியவர்கள்..?

அன்புடன்
தமிழ்த்தேனீ

No comments: