திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, June 26, 2008

பழமொழி ஆய்வு எண் 8

இக்கரைக்கு அக்கரை பச்சை
இது ஒரு அருமையான சொல்லாடல்
முதுமொழி,அல்லது பழமொழி

பசுமையும் ,பனி மேகங்களும்,
கானலும் ,நாம் இருக்கும் இடத்தில்
தெரியாது....
இங்கிருந்து பார்த்தால் அங்கிருப்பது போலவும்
அங்கிருந்து பார்த்தால் இங்கிருப்பது போலவும் தோன்றும்

ஆனால் நமக்கு எப்போதுமே
இங்கிருக்கும் பச்சை தெரிவதே இல்லை
அதாவது தோட்டத்துப் பச்சிலை நம் கண்ணுக்கு தெரியாது
பச்சிலை மருத்துவர் சொல்லும்போதுதான்
அந்தச் செடி மூலிகை என்றே நமக்குத் தெரியும்
எப்போதுமே நமக்கு ஒரு குணமுண்டு
நம்மவர் அறிவாளியாய் இருந்தாலும்
அவர்கள் சொல்லும் போது மதிக்காத
நாம் அயல் நாட்டார் சொன்னால்
உடனே மதிப்போம்
அப்படி ஒரு குணம் நமக்கு இருக்கிறது

வெளி நாட்டுக்கு சென்று அங்கு எங்கேயும்
குப்பையை போட முடியாமல் பத்திரமாக வைத்திருந்து
அயல் நாட்டில் கடைப்பிடித்த அத்தனை நற்குணங்களையும் தூக்கி எறிந்துவிட்டு, விமானம் மும்பையில் வந்து
இறங்கிய வுடனே கண்ட இடத்தில் அதே
குப்பையை போட்டு போட்டுவிட்டு செல்பவர்கள்
தாமே நம்மில் பலர்
தண்டனை கிடைக்குமென்றால் ஒரு மாதிரி தண்டனை
கிடைக்காது என்கிற தைரியமிருந்தால்
ஒரு மாதிரிநடப்பவர் நம்மில் பலபேர்

சந்தர்ப்பம் கிடைக்காமையினால் தவறு செய்யாதவனை விட
சந்தர்ப்பம் கிடைத்தும் தவறு செய்யாதவன்தான்
உண்மையான நேர்மையாளி.....
வெளிநாட்டிற்கு கொடுக்கும் அதே மரியாதையை
நம் நாட்டுக்கும் கொடுத்தால், நாம் வெறுமனே
இருந்து கொண்டு அரசாங்கத்தை மட்டும்
குறைகூறிக் கொண்டே காலம் தள்ளாமல்
நம்முடைய நாட்டையும் சுத்தமாக வைத்துக்
கொள்ளலாம் அல்லவா
நமக்கு அயல் நாட்டைப் பார்த்தால் அப்படி ஒரு ப்ரமிப்பு
நம் நாட்டில் இல்லாத அழகுகளா,இயற்கை கொஞ்சும்
சுற்றுலாத் தலங்களா,...?

ஆனால் அவைகளை பராமரிக்க நாமும் முயல மாட்டோம்
நம் அரசாங்கமும் முயலாது,
இக்கரைக்கு அக்கரை என்றுமே பச்சைதானே
இக்கரையின் பச்சை ,பசுமை ,நன்மை
எதுவுமே நம் கண்களில் படாது

திரைஉலக இயக்குனர் ஒரு திரைப்படத்தில் கேட்பார்,
உங்களுக்குத் தெரிந்த பத்தினிகளின் பெயரை சொல்லுங்கள்
என்று ஆளாளுக்கு நளாயினி, கண்ணகி,என்றெல்லாம் சொல்லுவர்
பாக்யராஜ் கேட்பார் உங்களுக்கு பத்தினி என்றவுடன்
உங்கள் மனைவியின் பெயர் நினைவுக்கு வரவில்லையா என்று
அது போல நமக்கு நம்மிடம் உள்ள அனேக திறமைகள்
தெரிவதில்லை அப்படியே தெரிந்தாலும் அவைகளை
நாம் மதிப்பதில்லை,
தமிழ் பேசி நடிக்க நம்மிடம் இல்லாத தமிழ் நடிகைகளா
ஆனால் மும்பையிலிருந்து அல்லது அயல்நாட்டிலிருந்து
இறக்குமதி செய்து தமிழே பேசத்தெரியாத அவர்களுக்கு
உயர்தர உணவகத்தில் அறை போட்டுக் கொடுத்து
தமிழ் சொல்லிக் கொடுத்து,தமிழை அவர் மொழியில்
அப்படியே எழுதிக் கொடுத்து பேச வைத்து
திரைப்படம் எடுத்தால்தான்
அது பெரிய தகுதி என்று நம்முடைய இயக்குனர்கள்
நினைக்கிறார்களே அதுபோல
நம்மை மதிக்க நாம் எப்போது கற்றுக் கொள்கிறோமோ
அப்போதிலிருந்து நம் நாடு இன்னும் வளமாக
முன்னுக்கு வரும் என்பதில் ஐய்யமில்லை
இவற்றை சுட்டிக் காட்டத்தான் வருங்காலத்தை
மனதில் வைத்து அன்றே தீர்க்க தரிசனமாக
இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்லி வைத்தார்களோ..?

அல்லது நதியின் இரு கரைகளில் இருக்கும்
இக்கரையின் மேல் நாம் அக்கரை கொண்டு கவனித்தால்
அதாவது பயிர் செய்தால் அந்த விவசாயம் மூலமாக
அக்கரையும் பசுமையாகும் என்று கூட சொல்லி இருக்கலாம்
நம்முடைய நாகரீகமே நதிக்கரையில் தோன்றியவைதானே
ஆகவே இக்கரையின் மேல் அக்கரை வைப்போம்
முதலில் நம் நாட்டின் வளத்தைப் பற்றி யோசிப்போம்
நம்மால் முடிந்த அளவு நம் நாட்டுக்காக ஏதேனும்
அக்கரையாகசெய்வோம்
இக்கரை பச்சையாகும் ,பசுமையாகும்


அன்புடன்
தமிழ்த்தேனீ

No comments: