திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Wednesday, June 25, 2008

பழமொழிகள் ஆய்வு எண் 2

பழமொழி : 2 "
நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை "
இந்தப் பழ மொழியை ஆராய முற்படும்போதே
நினைவுக்கு வருபவர்கள் உயர் திரு மஹாத்மா காந்தி,
உயர் திரு வினோபா பாவே ஜெயப்ரகாஷ் நாராயணன்
"நேற்று நடந்ததும் இன்று நடப்பதும்
நாளை நடக்கப் போவதும் அனைத்தும் நன்மைக்கே
"என்று தினமும் நடப்போர் சங்கம் ஒன்றிற்கு
தட்டி வாசகமாய் நான் எழுதிக் கொடுத்ததும் நினைவுக்கு வருகிறது....!
எல்லாம் நடக்கவேண்டும் ...நல்லது எல்லாம் நடக்க வேண்டும்
என்றுநம் மனது அடிக்கடி நினைக்கிறது
நடக்கும்....நிச்சயம் நடக்கும் நம்பிக்கைதானே வாழ்க்கை
எதாக நினைக்கிறோமோ அதாக ஆகிறோம்
என்பது பெரியோர் வாக்கு
நடந்தால் நாடெங்கும் உறவு..உண்மைதான்
நடந்தே நாடெங்கும் உறவை ஏற்படுத்திக் கொண்ட
பல பெரியோர்களின் அனுபவ பூர்வமான உண்மை வாசகம்
நல்லவிதமாக நடந்து ,தாய்நாட்டுப் பாசத்துடன் ,
மக்களின்மேல் நேசத்துடன்,சத்திய வழியில்.
அஹிம்சாவழியில் நடந்தே நம் தேசத்துக்கு
விடுதலை வாங்கிக் கொடுக்க காரணமாய் இருந்தவர்கள்
மஹாத்மா காந்தி அவர்கள்வினோபாபாவே அவர்கள்,
ஜெயப்ரகாஷ் நாராயணன் ஆகியோர்,
எல்லா மனிதர்களுக்கும் நம் உடலில் கொழுப்பு, சர்க்கரை,
போன்ற பொருட்கள் இருக்கின்றன ,
ஆனால் அவைகள் இருக்க வேண்டிய அளவுக்குமேல்குறைந்தாலோ,அதிகரித்தாலோ அதை
நோய் என்கின்றனர் மருத்துவர்கள்,
இருக்க வேண்டிய அளவுக்கு குறைந்தாலோ ,அதிகரித்தாலோ,
"அது அளவுக்கு மிஞ்சுதல் "என்று பொருள் கொள்ளலாம்"
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம்"அல்லவோ
அப்படி அளவுக்கு மிஞ்சினால் உடனே வைத்தியர்கள்
நான் சொல்வதைக் கேட்டு நட என்கிறார்கள்,
அதாவது நடந்தாலே அனேக வியாதிகள்
குணமாகிவிடுகின்றன என்று பொருள் கொள்ளலாம்,
ஆகவே நடந்தால் நாடெங்கும் உறவு,
நாம் இருந்தால்தானே நடப்போம்,
நடந்தால்தானே இருப்போம்,....
உறவுகள் பெருக வேண்டுமானால் நடக்க வேண்டும்,
நல்லது நடக்கவேண்டும், நம்மால் அடுத்தவருக்கும் ,
அடுத்தவரால் நமக்கும்,நல்லது நடக்கவேண்டும்
நடந்தாய் வாழி காவேரிநாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம்கொழிக்கநடந்தாய் வாழி காவேரி
என்று வெங்கலக் குரலில் சீர்காழி கோவிந்தராஜன்
அவர்களின் பாடல் ஒலிக்கிறது
ஆறு பொங்கிப் ப்ரவாகமாய் ஓடுவதைக் கூட நடந்தாய் என்று வர்ணிக்கிறார்கள்,
நாரதருக்கு நாரதர் என்று ஏன் பெயர் தெரியுமா
நா ரதம் ,அதாவது வாகனம் இல்லாதவர் என்று பொருள் ,
அவரே நடந்துதானே பல கலகங்களை செய்து நன்மை செய்திருக்கிறார்,
ஆகவே பெரியோர் சொல் கேட்டு நடப்போம்,
கலகம் செய்ய வேண்டாம் ,நாம் கலகம் செய்தால் அது நன்மை விளைவிக்காது,
நல்லதைமட்டும் எடுத்துக் கொள்ளுவோம் நடப்போம்
"அதே போல் படுத்தால் பாயும் பகை,"
வயதான பின்னரும் படுத்தால்,
அதாவது நோயில் படுத்தால்பாயும் பகையாகும்,
பாய் எப்படி பகையாகிறது....?
நினைவில்லாமல் படுத்திருப்பவர்களுக்கு முதுகே புண்ணாகும்,
இதை படுக்கை காயங்கள் என்று மருத்துவத்திலே சொல்லுவார்கள்,
அதற்காக தண்ணீர் படுக்கை, காற்றுப் படுக்கை,
என்றெல்லாம் எத்துணையோ விஞ்ஜான வசதிகள் வந்து விட்டாலும் படுக்கையில் இருப்பவர்களுக்கு,மனோவியாதியே நாம் படுக்கையில் இருக்கிறோமே, என்னும் நினைவே வியாதிகளை அதிகரிக்கும்,
ஆகவே படுத்தால் பாயும் பகை,
இங்கு படுத்தால் என்பது சோம்பினால் ,என்றும் பொருள் கொள்ளலாம்,
நாம் கொஞ்ஜம் அசந்தால் நம்மைக் கவிழ்க்க,ஏராளமான சதி நடக்க ஆரம்பித்துவிடும், சதி நடப்பதை தடுக்க நாம் நடப்போம்,
அப்படி இருக்க படுக்கலாமா...?
தன்னுடைய மரணத்தை தக்ஷிணாயணத்திலிருந்து,
உத்திராயண காலம் வரையில் தள்ளிப்போட நினைத்து,
படுத்த பீஷ்மர் கூட தரையில் படுக்கவில்லை,
அருச்சுனன் வில்லைப் பயன்படுத்தி ஏற்படுத்திக் கொடுத்த
சரப் படுக்கையில் படுத்தார்,
ஏனென்றால் சரங்களின் உறுத்துதல் இருந்து கொண்டே ,
இருந்தால்தான் சோம்பாமல் இருக்க முடியும் என்று
அதையும் தவிற அவருடைய தீர்க்க தரிசனம் மரணத்தையே,
தள்ளிப் போட்டிருக்கிறது என்னும் மஹாபாரத செய்தி நம்மை வியக்கவைக்கிறது, அந்த சரப் படுக்கை மூலமாக
அக்யூ பன்ச்சர் என்னும் விக்ஞான முறையை அப்போதே
செயல் படுத்தி உள்ளனர் என்பது தெளிவாகிறது,
ஆகவே படுக்காதீர்கள் ,அப்படிப் படுக்க வேண்டுமானால்,
நம்மை எப்போதும் எச்சரிக்கையாக இருக்கப் பணிக்குமாறு
செய்யப்பட்ட படுக்கையில் படுக்கலாம்,
ஆகவே படுத்தால் பாயும் பகை,
ஆமாம் படுத்தாலே காத்திருக்கும்" பகை எல்லாம் பாயும் "
என்பதை எச்சரிக்கதான் பெரியவர்கள்
நடந்தால் நாடே உறவு படுத்தால் பாயும் பகை
என்று நம்மை எச்சரித்திருக்கிறார்களோ என்று தோன்றுகிறது ,
ஆனால் எனக்கு இக்கட்டுரையை எழுதும்போதே
தோன்றிய சந்தேகம் ஒன்று இருக்கிறது,
கருநாகப் பாய் விரித்து கடலின் மேல் படுத்திருக்கும்
திரு நாரணனும் அதனால்தான் அவ்வப்போது பல அவதாரங்கள்
எடுத்து நடக்க ஆரம்பித்தானோ என்று,……
ராமனை காட்டுக்கு அழைத்து சென்று நடக்கவிட்டார் விஸ்வாமித்திரர்,
கண்ணன் மஹாபாரதத்தில் தேரோட்டியாய்,
வரும் வரையில் சாந்திபினி ஆஸ்ரமத்தில் இருந்து கொண்டு
நடந்தே காட்டிற்குப் போய் விறகு சேகரித்தான்,
நடக்கும் நாலு கால் பிராணிகளாகவும் பல அவதாரங்கள்
எடுத்தானோ, என்று சந்தேகம் வருகிறது,
கஜேந்திரன் நாராயணனை படுக்க விடாமல்
ஆதிமூலமே என்றழைத்து படுக்கையிலிருந்து எழுப்பினான்,
ப்ரஹலாதன் கேட்கவே வேண்டாம்,
அவ்வபோது நாராயணனை எழுப்பிக் கொண்டே இருந்தான்,
கடைசியில் நாராயணனை நடக்கும்,நரசிம்மாவதாரமாகவே
மாற்றிவிட்டான் தன் பக்தியினால்,
மஹாபலியோ வாமனாவதாரமாய் நாராயணனை நடக்க விட்டான் ,
இப்படி பக்தர்கள் நாராயாணனை படுக்க விடாமல்
அழைத்துக் கொண்டே இருக்கின்றனரோ,
என்று சந்தேகம் வருகிறது
ஸ்ரீமன் நாராயணன் கொண்டிருப்பது
யோக நித்திரைஎன்று சொல்லுவார்கள்
யோக நித்திரை கொண்டிருக்கும் நாராயணனையே
எழுப்பிக்கொண்டே இருக்கிறார்களேஅப்படியானால்
.......போக நித்திரை கொள்ளலாமோ...கூடவே கூடாது
என்பதை இப்பழமொழி நன்கு உணர்த்துகிறது
அடடா பெரியவர்கள் தீர்க்கதரிசிகள்தான்
ஆராய முயலுவோம் நன்மையென்றால்
அதன் படி நடக்க முயலுவோம்
படுக்க வேண்டாம்.
அன்புடன்
தமிழ்த்தேனீ

No comments: