திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, February 3, 2011

”தடுப்பான்’

 நம் வாழ்க்கையில் நமக்கு நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு ஒரு அனுபவ பாடமாகவே அமைகிறது.


சமீபத்தில் ஒரு நிகழ்வு,
என் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருக்கும் ஒரு தம்பதியர் புதிதாக திருமணம் ஆனவர்கள், அவ்வப்போது எங்களுடன் வந்து மிக நல்லவிதமாக பழகுவார்கள் ,

ஏற்கெனவே காதில் ஒரு தோடு அணிந்திருக்கிறாள், ஆனாலும் மிகவும் ஆசைப்பட்டு மீண்டும் ஒரு முறை காதில் தோடணிந்திருக்கும் இடத்துக்கு சற்று மேலாக இன்னொரு முறை துளையிட்டு அதிலொரு திருகாணி போட்டுக்கொள்ளவேண்டும் என்னும் ஆசையால் நவீன முறைப்படி ( கன் ஷாட் ) மூலமாக துளையிட்டுக்கொண்டு அதில் போட்டுக்கொள்ள ஒரு காதணியைத் தேர்ந்தெடுத்தார். அந்தக் காதணி அவருடைய அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது.

இது இப்படி இருக்க ஒரு மாதம் கழித்து ஒருநாள் அந்தப் பெண் என் வீட்டிற்கு வந்தார். அவர் முகம் வாடி இருந்தது. நான் அந்தப் பெண்ணிடம் ஏன் வாட்டமுற்று இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அந்தப் பெண் என்னவோ தெரியலை ரெண்டு மூணு நாளா கழுத்து வலி, அதுமட்டுமல்ல ஒரு பக்கம் முழுவதுமே வலி இருக்கிறது என்றாள், நான் உடனே மருத்துவரிடம் காண்பித்தீர்களா என்றேன்.
ஆமாம் காண்பித்தேன் அவர் இந்தப் பனி உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை அதனால் கழுத்திலே நெறி கட்டி இருக்கிறது. அதனால் இந்த மாத்திரைகளை உண்டுவாருங்கள் சரியாகி விடும் என்று ஏதோ மாத்திரைகளைக் கொடுத்திருக்கிறார், இந்தப் பெண்மணியும் அந்த மாத்திரைகளை உண்டும் இன்னமும் சரியாகாத நிலையில் இருக்கிறாள் என்பது புரிந்தது.

இந்த நிலையில் என் மனைவியும் அந்தப் பெண்ணும் பேசிக்கொண்டே சமையலறைக்கு சென்றனர்.நானும் என்னுடைய வழக்கமான வேலையாக கணிணியில் வந்து உட்கார்ந்தேன்.

திடீரென்று என் மனைவி என்னங்க இங்க வாங்க என்றாள் நானும் போனேன். அப்போது அந்தப் பெண்ணை அழைத்து அவளுடைய காதை என்னிடம் காட்டச்சொன்னாள் என் மனைவி.அந்தப் பெண்ணும் அவளுடைய வலது காதை என்னிடம் காண்பித்தாள். நானும் நன்றாக இருக்கிறது திருகாணி புதிதா என்று பாராட்டிவிட்டு நகர்ந்தேன். அது இல்லைங்க காதுக்கு பின்னால் பாருங்கள் என்றாள். பார்த்தேன் நிலைமையின் விபரீதம் புரிந்தது.

ஆமாம் அந்தப் பெண் நாகரீகம் கருதி மிக மெல்லியதான காதுத் திருகாணியை அணிந்திருந்தாள். அந்தத் திருகாணியின் பின் புறம் இருக்கும் மடல் போன்ற பகுதியும் மிகவும் சிறியது, அதனால் அந்த மடல் போன்ற பகுதியும் அவள் காதின் திருகாணி போட துளைத்த ஓட்டை வழியாக காதில் முறம் போன்ற பகுதியின் உள்ளே சென்று விட்டது. அது தெரியாமல் இந்தப் பெண்ணும் காதின் பின்பக்க திருகாணி தொலைந்து விட்டதாகவும் ,முன்பக்க மிளகு வடிவம் கொண்ட கொண்டை கழற்ற வரவில்லையென்றும் உதவி நாடி என் மனைவியிடம் வந்திருக்கிறாள் என்பதும் புரிந்தது.

ஆனால் அந்தப் பெண் நினைத்தாற் போல திருகாணி தொலையவில்லை, அவள் காது மடலின் மறுபக்க தோலுக்கும் முன் பக்கத் தோலுக்கும் இடையில் காதின் உட்புறமாக சென்று மாட்டிக்கொண்டிருக்கிறது  .
அதனால்தான் அவளுக்கு கழுத்தும் காதும் வலியெடுத்து கழுத்தில் நெறி கட்டி எல்லா அவஸ்தையும் பட்டிருக்கிறாள் என்பது புரிந்து போயிற்று.

ஒன்று காதிலே அறுவை சிகிச்சை செய்துதான் அந்த திருகாணியை எடுக்கவேண்டும் இல்லையென்றால் அந்தப் பெண்மணி பொறுத்துக் கொள்ளும் தன்மை உடையவளாக இருந்தால் திருகாணி உள்ளே சென்ற விதமாகவே அந்த ஓட்டையிலேயே பின்பக்கமாக அந்த திருகாணியை வெளியே தள்ளி அதன் பிறகு அந்த முன்பக்க மிளகு வடிவத்தை பிடித்துக்கொண்டு பின்பக்க திருகாணியைக் கழற்றவேண்டும்.

நான் அந்தப் பெண்ணிடம் ஒன்றும் சொல்லாமல் ஒன்றுமில்லையம்மா எல்லாம் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறிவிட்டு அவள் கணவனுக்கு
தொலைபேசி மூலமாக தகவல் சொன்னேன்.அவரும் வந்துவிட்டார்.
அவரிடம் நான் இருக்கும் நிலையை எடுத்துச் சொல்லி விளக்கிவிட்டு
நானே எடுத்துவிடுகிறேன் ஆனால் நீங்கள் உங்கள் மனைவிக்கு விஷயத்தை விளக்கிவிடுங்கள். பிறகு தைரியம் சொல்லுங்கள் என்று கூறினேன்.அவரும் ஒப்புக்கொண்டார்.

பிறகு அந்தப் பெண்மணியிடம் நிலமையைக் கூறி என்னை நம்பி அவள் காதை என்னிடம் காட்டுமாறு கூறினான் அவள் கணவன்.
நானும் இறைவனை வேண்டிக்கொண்டு முன் பக்க மிளகு போன்ற பகுதியை மெதுவாகப் பிடித்து பின்பக்க ஓட்டையின் மையப்பகுதிக்கு பின்பக்க திருகாணி வருமாறு செய்து வலித்தாலும் பரவாயில்லை என்று கூடியவரை நாசூக்காக அழுத்தி ஓட்டை வழியே திருகாணியை வெளிவரச்செய்து பின்னர் முன் பக்க மிளகு போன்ற பாகத்தை பிடித்துக்கொண்டு திருகாணியை இடப்புறமாக கழற்றி எடுத்து, முன்பக்க மிளகையும் எடுத்தேன் காதிலிருந்து. அந்தப் பெண்மணி நான் திருகாணியை எடுக்கும் போது கண்ணில் நீர்வரப் பொறுமையுடன் காண்பித்ததால் எடுக்க முடிந்தது, இல்லையென்றால் அறுவை சிகிச்சைதான்.

அன்று சில மணித்துளிகளிலேயே அவளுடைய காது வலியும் ,கழுத்து வலியும் மாயமாய் மறைந்தன,அவள் முகத்தில் புன் சிரிப்பையும் ஒரு நாணத்தையும் அவளுடைய கணவன் முகத்தில் ஒரு நிம்மதியையும் கண்டு நானும் என் மனைவியும் மகிழ்ந்தோம்.

காதில் ஓட்டைக்குத் தகுந்தவாறு பின்பக்கம் ஒரு வட்டமான தடுப்பு ஒன்று முன்பெல்லாம் ;போட்டுக்கொள்வார்கள் ,இப்போதெல்லாம் நாகரீகம் கருதி அதையெல்லாம் தவிர்த்துவிட்டார்கள், அது மட்டுமல்ல சிறிய அணிகலன்களை அணிகிறார்கள்,அதனால் இப்படியெல்லாம் ஆபத்தில் மாட்டிக்கொள்கிறார்கள்.

நல்ல வேளை என் மனைவி கவனித்தாள், இந்த திருகாணி அவள் காதிலேயே இருந்திருந்தால் காதில் புண் ஏற்பட்டு புறையோடி இருக்கும்.
அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும், அதன் பின் விளைவாக அவதிகள் பட நேரும், முக அழகு குன்றும். இதெல்லாம் தேவையா?
முன்பெல்லாம் புளியங்கொட்டையை தரையில் தட்டை வடிவில் நன்றாகத் தேய்த்து சமனமாக்கி அதன்நடுவே துளையிட்டு காதணியை அணியும் போது இவ்வாறு ஏற்படாத வண்ணம் தடுப்பாக அதை (Washer) உபயோகிப்பார்கள். நானே பல முறை என் தாயாருக்கு, என் சகோதரிகளுக்கு தேய்த்து தடுப்பான் செய்து கொடுத்திருக்கிறேன்
ஆகவே எப்போதுமே

” இடிப்பார் இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.”

என்னும் வள்ளுவன் வாக்குக்கொப்ப
”தடுப்பான் இல்லாத திருகாணி அவதி
கொடுப்பானாகி மிகுதி கெடும் ”

என்னும்  தமிழ்த்தேனியின் வாக்குக்கொப்ப  நடந்துகொண்டால் நன்மையே விளையும் என்று உணர்க

அன்புடன்

தமிழ்த்தேனீ









No comments: